ads

Tuesday 3 April 2012

அட்சய திரிதியை/ ATCHSAYA THIRITHIYAI

ஒரு நல்லவன் செய்ய முடியாத உதவியை நாள் செய்யுமாம்.  இது நம் முன்னோர்கள் சொன்ன முதுமொழி. 

அது என்ன உதவி.   நாள் என்பது ஆள் மாதிரி கூடவே இருந்து உதவி செய்யுமா?

இல்லை.  நல்ல நாளில் துவங்கும் காரியங்கள் சொல்லி வைத்த மாதிரி முடிவடையும் என்பதுதான் அதன் மையக்கரு. 

தொட்ட காரியங்கள் அனைத்திலும் தோல்வியை தழுவியவர்கள் கூட,  நல்ல நாள் பார்த்து ஆரம்பித்து விட்டால், உள்ளபடி சொல்வதானால் உயர்வுதான்.

பல்வேறு வகையில் அனுகூலங்கள் கூடி ஆதரவு கரம் நீட்டும்.  சேர்ந்தவர்களால் ஆதாயம்,  செலவீனங்கள் குறைவு, செயல்பாடுகளில் புதிய வேகம் என்று பந்தைய குதிரையில் முந்திய குதிரையாக இருக்க நல்ல நாளே பிரதானம்.

அந்த வகையில் வருவதுதான் அட்சய  திரிதியை.   அட்சய என்றால் அள்ள அள்ள குறையாதது என்று பொருள்.  வளரும்... வளரும்... வளர்ந்து கொண்டே இருக்கும் என்று பொருள்.    அல்லலை போக்கும் என்று பொருள்,  ஆற்றலை போக்கும் பொருள்.

இன்னும் சொல்லப்போனால் திதியை வைத்து விதியை வெல்லலாம் என்பதுதான் அட்சய திரிதியை.

மாதத்தில்  இரண்டு திருதியை திதிகள் வந்தாலும்,  சித்திரையில் வரும் திருதியையே சிறப்பு வாய்ந்தது.  அதுவும் வளர்பிறை திதிதான் முக்கியமானது.

சரி இது சம்மந்தமான புராண கதையை பார்ப்போமா!

சூழ்ச்சியாக சூதாடி பாண்டவர்களின் நாடு நகரங்களை பறித்து கொண்ட துரியோதனன்,  அவர்களை காட்டிற்கு செல்ல வேண்டும் என்று கட்டளை இடுகிறான்.

தர்மத்தின் நிழலாக இருந்த பாண்டவர்கள் வனவாசம் சென்றார்கள்.  இந்த செய்தி காட்டுத்தீ போல் நாட்டுக்குள் பரவுகிறது.

தவசீலர்களான முனிவர்களும், ரிஷிகளும், கவலையோடு கானகம் வருகிறார்கள்.  விருந்தோம்பலில் சிறந்த பாண்டவர்கள் வரும்  பெரியோர்களுக்கு  எதுவும் அளித்து உபசரிக்க முடியவில்லையே என கவலை கொள்கிறார்கள்.  உடன் சூரியனை நோக்கி பிராத்தனை செய்கிறார்கள்.

அவர்கள் முன் தோன்றிய சூரியன்.....பாண்டு மைந்தர்களே.... இன்று திரிதியை நாள்,  அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை உங்களுக்கு தருகிறேன்.  இதில் நான் தினம் உதயமாகும் நேரத்தில் சிறிது உணவை இட்டால் போதும்,  குறையாமல் வளர்ந்து கொண்டே வரும்.

நாள் முழுதும் உணவளிக்கும் இதில், அஸ்தமன பொழுதில் கடைசியாக பாஞ்சாலி உணவருந்தி பாத்திரத்தை கவிழ்த்து விட்டால்,  மறுநாள் உதய வேலையில் தான் உணவை எடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  என்று சொல்லி அட்சய பாத்திரத்தை தருகிறார்.

அதை பெற்றுக்கொண்ட பாண்டவர்கள் தாங்களும் உணவருந்தி,  வந்தவர்களுக்கும் அதில் இருந்தே உணவை அளித்து உபசரித்து வந்தார்கள்.

இந்த செய்தியை கேள்வி பட்டதும் பொறாமையின் சிகரமான துரியோதனின் வயறு கபகபவென்று  ஏறிய துவங்கியது.  எப்படியாவது ஒரு சூழ்ச்சி நாடகத்தை அரங்கேற்றி பாண்டவர்களை வீழ்த்திவிட நினைத்தான்.

அதற்கு தகுந்தாற்போல்  கோவமே உரித்தான துர்வாச முனிவர் ஒரு நாள் அஸ்த்தினாபுரம் வந்தார்.   வந்தவருக்கு உணவளித்து உபசரித்தான் துரியோதனன்.

உபசரிப்பில் மகிழ்ந்த துர்வாச முனிவர்  துரியோதனை பார்த்து... மகனே துரியோதனா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

நயவஞ்சக துரியோதனன் நயமாக எடுத்துரைக்கிறான். தவத்தில் சிறந்த தவசிலரே.... என் இல்லம் தேடி வந்து விருந்துண்டு மகிழ்ந்தது போல்,  என் பங்காளிகள் கானகத்தில் இருந்தாலும் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்.

அவர்களையும் சந்தித்து உணவருந்தி வாழ்த்தி விட்டு செல்ல வேண்டும்.  அதுவும் மாலை நேரத்தில் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள். 

அப்படியே ஆகட்டும்.  இப்பொழுதே கானகம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு தன பத்தாயிரம் மாணவ சீடர்களுடன் பாண்டவர்கள் இருப்பிடம் நோக்கி வருகிறார் துர்வாச முனிவர்.

அடுத்து நடக்க போகும் விபரித்ததை அறிந்து கொள்ள துரியோதனனும், அவன் சகாக்களும் காத்திருக்கின்றனர்.  

ஏன்?

எல்லாம் காரணமாகத்தான். துர்வாச முனிவர் போகும் நேரம்,  அட்ச்சய பாத்திரத்தில் இருந்து உணவு வராது. இதையே காரணமாக வைத்து சபித்து விட்டு போய்விடுவார்.  இதைத்தான் துரியோதனன் எதிர் பார்த்தான்.  ஆனால் நடந்தததோ வேறு.

தங்கள் இருப்பிடம் தேடி வந்த துர்வாச முனிவரை முறைப்படி வரவேற்கிறார்கள் பாண்டவர்கள்.  நீண்ட தூரம் நடந்தே வந்ததால் கலைத்து போயிருக்கிறோம்.  

அம்மா பாஞ்சாலி நீ உணவை தயாரித்து வை.  நானும் என் சீடர்களும் அருகில் உள்ள நீரோடையில் ஸ்நானம் செய்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு  தன் சீடர்களுடன் நீராட செல்கிறார்.

அட்ச்சய பாத்திரத்தில் உணவிருக்காதே... என்ன செய்வது என்று திகைக்கிறாள் பாஞ்சாலி. உடனே கண்ணனை  பிரத்திக்கிறாள். 

என்ன பாஞ்சாலி.... என்னை ஏன் அழைத்தாய்?

என்னருமை அண்ணா ... கண்ணா... நிலைமை விபரிதமாக போய்விட்டது. உணவருந்தி முடித்து,  அட்ச்சய பாத்திரத்தை கழுவியும் கவுத்து விட்டோம்.

இந்த நேரம் பார்த்து துர்வாச முனிவர்  தன் பத்தாயிரம் சீடர்களுடன் வந்தார்.  வந்தவர்... நாங்கள் நீராடி விட்டு வருகிறோம்.  அதற்குள் உணவை தயாரித்து வை என்று சொல்லி விட்டு போயிருக்கிறார்.

என்ன செய்வது.  அவரோ கோபக்காரர். ஆத்திரத்தில் ஏதாவது சாபத்தை கொடுத்து விட்டால் எங்கள் கதி என்ன? நீதான் காக்க வேண்டும்.

சரி..... கவலைபடாதே. அந்த அட்சய பாத்திரத்தை எடுத்து வா.

அதை தான் கழுவி வைத்து விட்டேனே.

இருந்தாலும் எடுத்து வா.

அட்சய  பாத்திரத்தை  கொண்டு வந்து கொடுக்கிறாள் பாஞ்சாலி.  அதில் ஒரு மூளையில் ஒரு சோற்று பருக்கை ஒட்டி கொண்டிருக்கிறது.   அதை எடுத்து பரந்தாமன் வாயில் போட்டு கொண்டதும்,  அனைத்து ஜீவராசிகளுக்கும் அக்கணமே பசி இல்லாமல் போயிற்று.

பாண்டவர்கள் இல்லத்தில் பரிமாரபோகும் விருந்தை பற்றியே நினைத்து கொண்டிருந்த துர்வாச முனிவருக்கும் சரி,   அவருடைய சிடர்களுக்கும் சரி பசி என்பதே இல்லாமல் போய் விட்டது.

என்ன விந்தை..  இதுவரை புசித்திராத வகையில் ஒரு விருந்தை சாப்பிட்ட மாதிரி ஒரு மன நிறைவு வந்து விட்டதே என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

பீமனை அழைத்த கண்ணன்............ உடனே போய் துர்வாச முனிவரை அழைத்து வா.  உணவு தயாராகி விட்டது என்று சொல்.  என்று சொல்லி அனுப்புகிறார்.

அனால் துர்வாச முனிவரோ ..... நேரம் கெட்ட வேலையில் வந்து பாண்டு புத்திரர்களை சோதித்தது தவறு. அவர்கள் சினந்து எதையும் சொல்வதற்குள் இவ்விடத்தை விட்டு அகன்று விட வேண்டும் என்று தன் சிடர்களுக்கு சொல்லி அவ்விடத்தை விட்டு விலகி சென்றார்.

இது அட்சய திரிதியை நாளில் பெற்ற அட்ச்சய பாத்திரத்தின் மகிமையை சொல்லும் புராண  கதை.

அட்சய திரிதியை நாளில் செய்யும் ஒவ்வொரு செயலும் வயது மாதிரி வளர்ந்து கொண்டே போகும்.  ஒருவருக்கு  உதவி செய்வதாக இருந்தாலும் கூட,   அட்சய திரிதியை நாளில் செய்தால் பன்மடங்கு புண்ணியத்தை பெற்று தரும்.

குசேலன் குபேரனாக மாறியது கூட அட்சய திரிதியை நாளில் என்கிறது புராண கதைகள்.  ரவரத்தினங்கள் தோன்றியது அட்சய திரிதியை நாளில் தானாம்.

இந்நாளில் செய்யும் காரியங்கள் பல மடங்கு பெருகும் என்பதால் தங்கம் வாங்க உகந்த நாளாக  சொல்கிறார்கள்.  நீங்களும் வாங்கி பாருங்களேன் வளருதா என்று.

இந்நாளில் இல்லாதவருக்கு உதவி செய்வதும்,  அன்ன தானம் செய்வதும்தான் முக்கியம்.





No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...