ads

Friday 29 June 2012

கிருஷ்ணரின் கிறுக்கல் பக்கம்


அதா..இந்த அழகு அழகுன்னு சொல்றாங்களே அதை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? 

அழகுன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என்று ஏதாவது ஒரு வரைமுறை இருக்கா?

ஒரு புலடங்காயும் இல்லை. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்கிற மாதிரி அவரவர் கோணத்தில் அழகை பற்றிய மதிப்பீடு மாறுகிறது. 

இந்த அழகை பற்றி அதிகம் யோசிக்கிற பருவம் எதுன்னு பார்த்திங்கனா டீனேஷ் பருவம்தான். 

பளிச்சுன்னு ஒரு புள்ளியை பார்த்தால் போதும் உள்ளே நடக்கிற ஒலிசேர்க்கை இருக்கே....அதுக்கு ஒரு எல்லை கோடும் கிடையாது. 

ரிக்டர் அளவுகோலை வைத்து அளந்தால் அதிர்வு பத்தை தாண்டி பதிவாயிருக்கும்.  அவ்வளவுதான் புள்ளையாண்டான் பரபரப்பா மாறிடுவான். 

சீப்பே இல்லாம பரட்டு பரட்டுன்னு சீவுறது என்ன? அப்படியே அந்த கர்சீப்பை எடுத்து மயிலிறகால் கோதிவிடுகிற மாதிரி முகத்துக்கு டச்சப் போடுறது என்ன?....அடடா.. அந்த அபூர்வ காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.



பிகர் எதிர்த்த பஸ்டாப்பிலே நிற்கும். அது தன்னை பார்க்குதான்னு ஓரக்கண்ணாலே ஒரு பார்வை பார்த்துட்டு, பத்தடி துரத்திலே இருக்கிற பெட்டிக்கடிக்கு நடந்து போவார் பாருங்க.... என்னத்தை சொல்ல.

ராஜாஜிராஜ..... ராஜமார்த்தாண்ட..... ராஜகம்பீர ....ராஜகுல திலக் காதல் இளவரசன் பராக் பராக் பராக் என்று கோரஸ் கேட்காத குறையா....ராஜ நடை போடுறது இருக்கே...அடபோங்க. 

இதைவிட இன்னொரு கூத்து இருக்கு.   ரோட்டிலே, தியேடர்லே, பஸ்சுல எங்கே பார்த்தாலும் அழகு பொண்ணுங்க அணிவகுத்து நிற்கும்.

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகி கூட்டமாவே இருக்கும். பார்க்கிற இடத்திலேயே பரிசம் போடலாமான்னு கேட்கிற மாதிரி அத்தனை பொண்ணுங்களும் அழகு ரம்பைதான்.

இதில் சிலர் விதிவிலக்காய் இருப்பாங்க. நாயா பேயா ரோட்டிலே அலையாம,முறையா  பொண்ணு பார்த்து கல்யாணம் செய்யணுன்னு நினைக்கிற குருப்.

அங்கே அலைஞ்சு இங்கே அலைஞ்சு ஜாதகம் வாங்கி, ஜாதகம் பார்க்கிற ஜோசியர் குழப்பத்துக்கெல்லாம் ஈடு கொடுத்து,  பொறுமை காத்து, சரி பொருத்தமெல்லாம் ஓகே...செய்முறை சீர்வரிசையும் நாம எதிர் பார்க்கிற மாதிரி இருக்கு என்ற தகவலையும் உறுதி படுத்திக்கொண்டு, பொண்ணு பார்த்துட்டு வந்துட்டா கெட்டி மேளம் கொட்டிடலாம்ன்னு முடிவு பண்ணி, ஒரு போர்நாட்சவனை பிடிச்சு ஊரையே கூட்டிகிட்டு போனா...

அங்கே பொன்னம்பலத்துக்கு பொம்பளை வேஷம் போட்டமாதிரி இருக்கும். மனுஷன் விக்கித்து போய் வருவார்

ஐயா.. நான் கல்யாணம் காட்சி இல்லாம மாப்பிள்ளை வினாயகராவே இருந்துடுறேன்னு முடிவே செய்துடுவார்.


சரி ...

அழகு
எது அழகு?

அழகு என்பது அங்கத்திற்கு சொல்லப்படும்
அடையாளமா?

அல்லது
பிடித்தமான என்ற சொல்லுக்கு
உடுத்தி பார்க்கிற உபசொல்லா?

அழகு
கர்ப்பம் சுமக்கிற மாதிரி
கர்ப்பை சுமக்கிற பெண்கள் அழகு

ராவண தேசத்தில்
ராமனாக இருப்பவன் அழகு

ஆட்சி பீட அதிகாரத்தில்
நேர்மையின் சாட்சியாக
இருப்பவன் அழகு.

உதவி செய்வதில்
கர்ணனாக இருப்பதை விட
மனித நேய மனிதனாக
இருப்பவன் அழகு.

அழகு இன்னும் இருக்கிறது

வழிபாடு


வழிபாடு 

  • இறைவனோடு நீங்கள் மிக அன்னியோன்னியமாய் உரையாடும் வார்த்தைகளே பிராத்தனை 


  • உங்களுக்கு மிக அன்பானவருடன் நீங்கள் நெருக்கமாயிருக்கும் உன்னத தருணமே வழிபாடு.


  • உங்களுக்கு வேண்டிய சக்தியை சேகரித்து கொள்ளும் இடமே பூஜையறை.


  • உங்கள் மனதிற்கு ஆற்றலை தரும் அருமருந்தே மந்திரம்.


  • இறைவழிபாடு என்பது சுமையல்ல....சுகமான அனுபவம் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

  • உங்கள் பொன்னான நேரத்தை நீங்கள் வீணாக்கவில்லை. மிக சரியாக பயன்படுத்துகிறோம் என்று திருப்தி பெறுங்கள்.

படம் spiritualvisionwriting.blogspot.com வெப்சைடில் இருந்து எடுக்கப்பட்டது 

Wednesday 27 June 2012

தமிழ் கவிதைகள்


காலை சுற்றும் பாம்பாக விரட்டும் கர்மா


நம் தாயும் தகப்பனும் இச்சையோடு சேர்ந்த நேரத்தில் நிச்சயக்கபடுகிறது நம் வாழ்க்கை. 

இப்படி பிறக்கும் மனிதனை ஊழ்வினையின் பொருட்டு உருவானதாக சொல்கிறார்கள். 

கர்மவினையின் காரணமாக பிறக்கிறான் என்கிறார்கள். 

தலையெழுத்து என்கிறார்கள்.

 தலைவிதி என்கிறார்கள், எல்லாமே ஓன்று தான். 

எப்படியோ....இந்த கர்மாவில் இருந்து எந்த மனிதனும் தப்பி போக முடியாது என்கிறது ஹிந்து தர்மம். 

நீ அவரை விதைத்தால் அவரை முளைக்கும், துவரை விதைத்தால் துவரை முளைக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. 

நீ பாவம் செய்து பணம் சம்பாதிக்கிறாயா... அப்படியானால் அதில் உனக்கு மட்டும் அல்ல உன் சந்ததிக்கும் பங்கு உண்டு.  

நீ சேர்த்து வைக்கும் சொத்தில் மட்டும் அல்ல பாவத்திலும் பயன் பெறுகிறவன், அந்த பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டும். இதுதான் ஹிந்து தர்மம் வலியுறுத்தும் வாழ்வியல் தத்துவம். 

இந்த கர்மா என்பதின் விளக்கத்தை பல ஞானிகள் சொல்லி இருக்கிறார்கள். இப்போது ஸ்ரீபுரம் ஸ்ரீ லெட்சுமி நாராயணி பொற்கோவில் creator  சொல்லும் விளக்கத்தை இப்போது பாப்போம். 

இது http://www.hinduvedhas.com/ இல் வெளி வந்துள்ளது. 

Tuesday 26 June 2012

சாமுந்திரிகா லெட்சனம் -ஆண்கள்

ஒருவரின் அங்க அடையாளங்களை வைத்து அவர்களின் குண நலன்களை சொல்வது சாமுந்திரிகா லெட்சனம் என்று பெயர்.

இது பெரும்பாலும் பெண்களுக்கே சொல்ல படுகிறது. அல்லது பெண்களை பற்றிய செய்திகளுக்கே அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. இந்த பதிவில் ஆண்களை பற்றிய குறிப்புகளை பாப்போம்.

தலை

என் சாண் உடம்புக்கு தலையே பிரதானம். இந்த தலை உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் சீமானாக இருப்பார்கள். எப்போதும் கையில் பணம் புரளும்.

பின் பகுதிபுடைத்திருப்பின் நல்ல அறிவாளிகள். படித்து பட்டம் பெற்றவராக இருப்பார்கள்.

ஆனால் வரி வரியாக தலையில் நரம்புகள் புடைத்து இருந்தால் தரித்திரமாம். பொன் பொருள் சேராதாம்..


நெற்றி

நல்ல அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு என்பதை அடித்து சொல்லலாம்.

அதிக கல்வி ஞானம் இல்லாவிட்டாலும் அனுபவ அறிவு அதிகம் இருக்கும்.

மிகச்சிறுத்திருப்பின் மூடர்கள். முன்யோசனை இல்லாதவர்கள். எதையாவது செய்து விட்டு வசமாக மாட்டிக்கொள்வார்கள்.

நெற்றியில் வரி வரியாக பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். தொட்டது துலங்கும்.

நெற்றியில்ரேகை இல்லாதிருப்பின் ஆயுள் பலம் குறையும். மத்திம ஆயுள்தான்.


மூக்கு

மூக்கை பொறுத்தவரை உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு இருக்க வேண்டும். உதாரணம் ரஜினிகாந்த்.

அதோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், கீர்த்தி உடையவர்களாக இருப்பர்.

அதே சமயம் மூக்கின்நுனிப் பகுதி தடித்தோ, அல்லது நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரம்தான். காலம் முழுவதும் காசு பண கஷ்டம்.


 கண்கள்

கண்கள் மெலிதாய் சிவந்து, அகன்று விரிந்து விசாலமாக இருந்தால் வசதி படைத்தவர்கள். பணம் பதவி புகழ் நிறைந்தவர்கள்.

அதேசமயம் யானை கண் மாதிரி சிறியதாகவும் குறுகியதாகவும் இருந்தால் அறிவாளிகள் என்று சொல்ல முடியாது. அவர்கள் செயல் திறனும் குறைவாகத்தான் இருக்கும்.


உதடு மெலிதாய் இயற்கையான தோலின் நிறம் அல்லது சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும்.

உதடுகள் 

அதே சமயம் உதடுகள் கருத்து, உலர்ந்து, தடித்து பார்பதற்கு விகாரனாய் இருப்பின் கபடம் நிறைந்தவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. சிக்கினா சிட்டைதான்.

வாய் 
பார்பதற்கு அழகான வாய் உடையவர்கள் அறிவில் சிறந்தவர்கள். அறிஞர்கள். உயரிய பதவியில் இருப்பவர்கள். அதே சமயம் வாய் பெரிதாகவும், அகன்றும், உதடுகள் வெளியே பிதிங்கியும் இருப்பவர்கள் பிறர் பேசுவதில் குற்றம் காண்பவர்கள்.


நாக்கு 

நாக்கை வெளியே நீட்டும்போது சற்று நீளமாக இருந்தால் வாய்சொல் வீரர்கள். பேசி ஜெயிக்க முடியாது.

நுனி நாக்கில் மச்சம், கருப்பு புள்ளிகள் இருந்தால் விஷவாக்கு. நாக்கு சிவந்து இருந்தால் அதிஷ்ட்டகட்டைகள். கறுத்தும் வெளுத்தும் உலர்ந்தும் இருந்தால் காலத்துக்கும் கஷ்டம்தான்.


பற்கள் 

பெரிய பெரிய பற்கள் இருந்தால் பெரிய கஷ்டம்கள் எதுவும் இல்லமால் வாழ்க்கை போகும்.

சற்று சிறிய பற்கள் இருந்தால் நல்ல படிப்பாளிகள். அதேசமயம் பற்களின் நுனி பகுதி கூறாக இருந்தால் கடும் கோபக்காரர்.

பற்கள் வரிசைகிரமமாக இல்லாமல் இருந்தால் தரித்திரம். யாளிபால் என்று சொல்கிற மாதிரி இரண்டு பக்கமும் ஒற்றை பற்கள் இருந்தால் அதிஷ்டம் என்று சொன்னாலும் சரியில்லை.


காது

யானை காது மாதிரி அகலமாக இருந்தால் முன்கோபி. சிறிய காதாக இருந்தால் அதிர்ஷ்டம். காய்ந்த மாவடு பிஞ்சு மாதிரி உள்புறம் மடங்கி இருந்தால் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசுவார்கள்.





கழுத்து 

தலைக்கு அடுத்தபடியாக வருவது கழுத்து. ஒட்டகசிவிங்கி மாதிரி நீண்டு இல்லமால், மத்திம உயரம் இருந்தால் சுகமான வாழ்க்கை அமைந்து விடும்.

அதே சமயம் குட்டையாகவும், கழுத்து நரம்புகள் வெளியே தெரியும்படியும் இருந்தால் காசு பணத்துக்கு எப்போதும் தட்டுப்பாடுதான்.


தோள்கள் 

ஆண்களின் தோள்கள் இரண்டும் உயர்ந்து இருந்தால் செல்வம் சேரும்.சம உயரமாக இருந்தால் நீடித்த ஆயுள் பலம் உண்டு.

அதே சமயம் தோள்களில் மட்டும் முடி நிறைந்து இருந்தால் வாழ்க்கையில் போராட்டம் அதிகம் இருக்கும்..


மார்பு 

நன்கு அகன்று விரிந்து இருந்தால் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னுக்கு வருவார்கள். மார்பு குறுகி இருந்தால் நோயாளி, ஆயுள் குறைவு, அதிஷ்ட குறைவு.

மெலிதான உரோமம் வளர்ந்து இருந்தால் நல்லது. அடர்த்தியாகவும், சுருள் சுருளாகவும் இருந்தால் காம எண்ணம் அதிகம் உள்ளவர்கள்.


வயிறு

குபேரனுக்கு இருப்பது போல வயிறு உருண்டு இருந்தால் செல்வந்தர்கள். அதே வயிறு பாதத்தை நோக்கி கவிழ்ந்து இருந்தால் பலன் இல்லை.

 சட்டம் மாதிரி ஒட்டிய வயிறு உடையவர்கள் பெரும் அல்லல் தொல்லை இல்லாமல் இருப்பார்கள்.


முதுகு 

முதுகு அகன்று விரிந்து v வடிவில் இருந்தால் மண்ணள்ளி போட்டாலும் பொன்னாகும். கூன் விழுந்த முதுகை உடையவர்கள் தொட்டதெல்லாம் தோல்வியாகும்.


கைகள் 

கைகள் நீளமாக இருந்தால் சந்தேகம் இல்லாமல் செல்வந்தர். கைகள் முழங்கால் வரை நீண்டு இருந்தால் செல்வத்தோடும், செல்வாக்கோடும் இருப்பார். கைகள் குட்டையாக இருந்தால் தரித்திரம்.


விரலகள் 

கைவிரல்கள் நீளமாக இருந்தால் பல்கலை வித்தகர். அந்த விஷயத்தில் ஆள் படு சமத்து.


கால்கள் 

கால்கள் நீளமாக இருந்தால் செல்வம் சேரும். கால்கள் குட்டையாக இருந்தால் தரித்திரம்.
















Monday 25 June 2012

Langkawi images

பார்த்து ரசிக்க வேண்டிய லங்காவி புகைப்படங்கள் hinduvedhas .com இல் தொகுப்பாக இருக்கிறது. இதோ உங்கள் பார்வைக்கு.

இதை கிளிக் செய்யவும் 

Saturday 23 June 2012

ஸ்ரீ சூக்தம்/ sri suktam

பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தரித்திரத்தை போக்கி தனத்தை அளிக்கும் சக்தி பெற்றவள். 

இல்லாமை என்ற சொல்லலை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. 

இதை தினமும் பாராயணம் செய்தால் வாழக்கை வளம் பெரும். மந்திர பாராயணம் செய்ய முடியாதவர்கள் தினம் தோறும் இந்த மந்திரத்தை செவி வழி கேட்டாலே திருமகளின் திருவருளை பெறமுடியும். 

உங்கள் வாழ்வில் எல்ல வளமும் பெற செல்வத்திருமகளை பிராத்தனை செய்கிறேன்.

Friday 22 June 2012

பூட்டுகளின் வரலாறு / lock


மனிதன் ஆதி காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தான். ஆனாலும் வெயில், மழை. பனி போன்ற இயற்க்கை சக்திகளிடம் இருந்து தற்காத்து கொள்ள மறைவிடங்கள் தேவை பட்டது. 

மர பொந்துகளையும், மலை குகைகளையும் தேடி போனான்.  காலங்கள் கடந்தது. அவனுக்கென மனைவி,  குழந்தைகள் வந்தது. அதோடு அவன் பயன் படுத்தும் பொருள்கள் சேர்ந்தது. 

இவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் வந்தது. அதோடு நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. 

செடிகளையும் கொடிகளையும், காட்டு மரங்களையும் பயன்படுத்தி வீடு கட்டினான். அவன் வசித்த பகுதி காடாக இருந்ததால் வனவிலங்குகளின் தொல்லை அதிகமானது. 

அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தான். அடர்த்தியான ஓலைகளை வைத்து கதவு செய்தான். 

பின்னர் அதை பாதுகாக்க கொடிகளை கண்டு பிடித்து கதவை கட்டி வைத்தான். அப்படி வளர்ச்சி பெற்ற பூட்டின் வரலாறு என்ன என்பதை பார்ப்போம்.

சற்றேறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு அல்ஜீரியாவில்தான் முதன் முதலில் பூட்டுக்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆனாலும் அதற்க்கு பிந்தைய காலத்தில் எகிப்த்தியர்கள் மரத்திலான பூட்டுக்களை உருவாக்கினார்கள். அதை திறப்பதற்கு சாவிகளும் செய்தார்கள்.  

முதன் முதலில் செய்த பூட்டுக்கள் எப்படி இருந்தது என்பதற்கு இக்கட்டுரையின் முதலில் உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த முறையை பின்பற்றி காப்புரிமை எதையும் தராமல்  ரோமானியர்களும் பூட்டு தயாரிப்பில் இறங்கினார்கள்.

ரோமானியர்கள் தான் முதன் முதலில் உலோகத்திலான போட்டுக்களையும் பேட்லாக்குகளையும் உருவாக்கினார்கலாம்.

இப்படி மெல்ல மெல்ல வளர்ந்த பூட்டு 1788 இல் உருளை வடிவிலான பூட்டை கண்டுபிடித்தார்கள். இந்த பெருமை இங்கிலாந்தை சேரும். அந்த கண்டுபிடிப்பாளர் ராபர்ட் பாரோன்.

இதற்கு அடுத்த படியாக இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் ப்ரமாஹ் அடுத்த தலைமுறை பூட்டு என்று சொல்கிற மாதிரி மிக மிக பாதுகாப்பான பூட்டை கண்டுபித்தார்.

1857 இல் ஜேம்ஸ் என்ற அமரிக்கர் கண்டுபிடித்த பூட்டுக்கள் அர்மரிக்க வங்கிகளில் சோதனை முறையில் பயன்படுத்தபட்டது.

இருப்பினும் 1861 இல் லினஸ் யேல் ஜூனியர் என்ற அமெரிக்கர்தான் பூட்டு தயாரிப்புகளுக்கு காப்புரிமை பெற்றார்.

இப்படி பரவிய பூட்டு இன்று உலகமெங்கும் பல்வேறு வடிவங்களில் விற்பனை ஆகிறது. இந்தியாவில் திண்டுக்கல் பூட்டு தயாரிப்பில் முதன்மை பெறுகிறது.

Wednesday 20 June 2012

லங்காவி / langkawi




இது 14 நூற்றாண்டின் கதை. 

மகாசூரி என்பது அவள் பெயர். மன்னர் குலத்துமரிகொழுந்து. பேரழகி. எந்த மன்னர் குலம்?  


மலேயா என்று அழைக்கப்பட்ட மலேசியாவின் கெடா மாநில மன்னரின் மகள். அந்த காலத்திலேயே அழகி போட்டி நடந்திருந்தால் மகாசூரியும் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் பரிசை வென்றிருப்பாள். 


அப்பேற்பட்ட பேரழகி. இளவரசியாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. அவளுக்கும் ஒரு மனசு உண்டுதானே.  குமரிபெண்ணின் உள்ளத்திலே குடி இருக்க நான் வரவா என்று கேட்டானோ என்னவோ.. ஒருவன் குடி வந்தான் காதல் என்ற பெயரால்.

வந்தவன் எந்த நாட்டு இளவரசன் என்றதானே நினைக்கிறீங்க. அதான் இல்லை.


சாதாரண போர் வீரன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உத்தரவு இளவரசி என்று கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டியவன்.

காதல் தான் குலம் கோத்திரம் எல்லாம் பார்பதில்லையே.  காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்தது. காதலர் இருவருக்கும் இடையே வளர்ந்த அன்பு ஒரு கட்டத்தில் எல்லை தாண்டியது. 



எஸ்....நீங்கள் யோசிப்பது புரிகிறது. காதலர்கள் கட்டிலை பகிர்ந்து கொள்கிற அளவிற்கு போய் விட்டார்கள். விளைவு...... மகாசூரி கர்ப்பமுற்றாள்.

காதலை வெளியே தெரியாமல் காத்தவளுக்கு கர்ப்பத்தை காக்க முடியவில்லை. 

இந்த செய்தியை அறிந்த மன்னருக்கு கோவம் கண்மண் தெரியாமல் வந்தது.


தகுதி இல்லாமல் வந்த காதலுக்கு தண்டனை தர வேண்டாமா? அது மகளாக இருந்தால் என்ன? மக்களாக இருந்தால் என்ன? இரண்டும் மன்னரை பொறுத்தவரை ஓன்று தான்.


குற்றவாளிகளாக கூனி குறுகி நின்றார்கள் காதலர்கள். இளவரசிக்கு இது தேவையா என்கிற மாதிரி மக்களும் மவுனமாக நின்றார்கள்.  

அரியணையில் அமர்ந்த அரசர் அதிகம் பேசவில்லை. இருவருக்கும் மரண தண்டனை. கை நரம்புகளை வெட்டி ரெத்தம் வடிய வடிய உயிர் பிரியட்டும் இதுதான் மன்னர் உத்தரவு. 

கனத்த மனதோடு மன்னர் எழுந்து போனார். 

அவர் உத்தரவு படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. கை நரம்புகள் துண்டிக்க பட்டன. மயங்கி விழுந்தார்கள் காதலர்கள். 


உயிர் பிரியும் அந்த கடைசி வினாடியில் அவள் வாயில் இருந்து மந்திரம் போல் வார்த்தைகள் வந்தது.

என்னை வாழவிடாத இந்த நாட்டில் ஏழு தலைமுறைக்கு யாரும் இல்லாமல் போகட்டும் என்று சபித்தாள். 

உயிர் பிரியும் கடைசி நேரத்தில் விடும் சாபம் கடவுள் விடும் சாபம் மாதிரித்தான். அவள் விட்ட சாபத்தின் படி அந்த அரச வம்சம் கலை இழந்தது. இயற்க்கை பொய்த்தது. நாட்டில் வறட்சி தாண்டவமாடியது.


நாட்டை விட்டு மக்கள் நாடோடியாக வெளியேறினார்கள்.  மனித நடமாட்டம் இல்லாத இடமாக மாறியது அந்நாடு. அதுதான் இன்று லங்காவி என்று செல்லப்படும் இடம். 

துன்மகாதிர் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிட பணிகள் துவக்கப்பட்டு இன்று பெரும் சுற்றுலா ஸ்தலமாக வளர்ந்து நிற்கிறது. 

ஏழு தலைமுறைக்கு முன்னால் இல்லாத மலை தொடர்கள் இன்று இருக்கிறது. 

கர்ப்பிணியாக உயிர் துறந்த இளவரசி நினைவாக மலைதொடரே கர்ப்பிணி பெண் படுத்து இருப்பது போல் மலை வளர்ந்து நிற்கிறது. 


உண்மையில் இயற்க்கை எழில் கொஞ்சும் இடம்.  வாழ்கையில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம்.

லங்காவி ஆங்கில வடிவம் 




Monday 18 June 2012

தெய்வங்கள் வழிபட்ட தெய்வங்கள்


நாம் தெய்வங்களை வழிபடுவது இருக்கட்டும். தெய்வங்களே தெய்வங்களை வழிப்பட்ட வரலாறுகள் உண்டு. அதை இப்போது பார்ப்போம்.

1 . திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மனை முருக பெருமான் வணங்கியதாக ஸ்தலவரலாறு சொல்கிறது. 

2 . அக்னிபகவான் கண்ணொளி பெற திருத்தேங்கூர் வெள்ளிமலை நாதரை வழிபட்டார்.

3 . நளன் சனி பகவானிடம் இருந்து விடுபட்டவுடன், நளன் மட்டும் அல்ல சனிபகவானும் வழிபட்ட இடம் திருவாரூர் தியாகராஜ சுவாமி.

4 . காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சியை உபாசனை செய்து மாகலக்ஷ்மி சௌந்தர்ய லக்ஷ்மியானாள்.

5 . இதே காஞ்சி வரதராஜ பெருமானை பிரம்மா தேவன் வழிபட்ட வரலாறு உண்டு.

6 . கல்விகடவுள் என்று போற்றப்படும் ஹயக்கரிவர் ராஜராஜேஸ்வரியான லதிதா திரிபுர சுந்தரியை வணங்கி உயர்வு பெற்றாராம். 

7 . திருவிண்ணகர் ஒப்பிளியப்பனை வணங்கி அவரையே பூமாதேவி மணந்து கொண்டாள்.

8 . சிக்கல் சிங்காரவேலனை அகத்தியர், விஸ்வாமித்திரர், வசிட்டர், நாரதர் வழிபாட்டு உள்ளனர்.

9 . திருசெந்தூர் முருக பெர்ருமானை குருபகவான் வணங்கியதாக வரலாறு.

10 .கண்டியூர் ஹர சாப விமோசன பெருமானை வணங்கி சிவபெருமானே தன் சாபம் நீங்க பெற்றாராம்.

11 .ராமணனும் கண்ணனும் வழிபட்ட இடம் தான் ராமேஸ்வரம்.

12.பிரம்மாவும் விஷ்ணுவும் வழிபட்ட சிவன் இருக்கம் இடம்தான் திருநள்ளாறு 

மனைவி ஒரு மந்திரிதானே.


பெண்கள் நாட்டின் கண்கள். எல்லோரும் சொல்றாங்க. ஆத்தா புண்ணியவதிகளை பற்றி அதிகம் நான் எழுதினது இல்லை. அதற்க்கு இட ஒதிக்கீடு பிரச்னைதான் காரணம்.இப்போ அவர்கள் சாய்ஸ்.

ஒரு உண்மையை சொல்லனும்னா ஏனோதானோன்னு இருக்கிறதிலே ஆண்கள் வகையறாதான் அதிக மார்க் வாங்குறாங்க. ஆனால் கட்டு சிட்டா குடும்பம் நடத்துறதில பெண்கள் எபோதுமே கில்லாடிதான்.

வரவுக்கேற்ற செலவு செய்யறதுல மட்டும் அல்ல, செலவுங்குற வார்த்தைலேயே சேமிப்பையும் சேர்த்து கொள்வதில் படு சமர்த்து.

இவ்வளவு புகழாரம் சூட்டினாலும் இதிலேயும் ஒன்றிரண்டு ஊதாரிகள் இருக்கும்.

பொதுவா பொண்ணை பெத்தவங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டாலே வயத்திலே நெருப்பை கட்டிக்கிட்டு இருப்பாங்க. 

இந்த நெருப்பை எந்த இளிச்சவாயன் கிடைப்பான்னு பார்த்து அவன் தலைலே கட்டி விட்டு, அந்தாளு பாவம் திண்டாடி தெருவுலே நிற்பான்.

நீ எக்கேடோ கெட்டு ஒழி. அடுத்த வீட்டுக்காரி பட்டு புடவையா எடுத்து அடுக்கிறா...நகை நட்டா சேர்க்கிறா..நான் கையாலாகாத புருஷனுக்கு கழுத்தை நீட்டிட்டு கண்ணீர் வடிக்கிறேன்னு, உள்ள நிலவரம் தெரியாம தொல்லை பண்ணும். சரிதானே.

ஆனா இந்த இந்த மாதிரி குணாசியம் உள்ள பொண்ணுங்க குறைவு.  வீட்டு நிர்வாகத்திலே டோட்டல் கையிலே எடுத்துகிட்டு, அச்சாணி மாதிரி இருக்கிற பொண்ணுங்களுக்கு ஆதி காலம் தொட்டே ஒரு அடைமொழி வச்சிருக்காங்க. 

அது பெண் புத்தி பின் புத்தி.

நானும் விடலை. அறிந்தவங்க...தெரிஞ்தவங்க பல பேர் கிட்டே என்னங்க சமாச்சாரம், இதுக்கு என்ன அர்த்தம்னு கேடடு பார்த்தேன். 

அதா... பொம்பளைங்க எதையுமே யோசிக்காம பேசிட்டு பின்னாலே முழிப்பாங்க என்றார்கள்.

இந்த கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. இதில் ஒரு துளி கூட உண்மையில்லை. பெண்ணின் பருவ வளர்ச்சி எப்படி வேகமாக இருக்கிறதோ அதைப்போல அவர்களின் அறிவு முதிர்ச்சியும் வேகமானது. 

இருபது வயது பெண் தன் நிலை, தன் சுற்றத்தார் நிலை, எதிர்கால வாழ்க்கை என்று அனனத்து விஷயங்களையும் யோசிக்க முடிகிறது. 

ஆனால் ஆண்கள்?

இருபது வயதில் எதிர்காலத்தை பற்றி யோசிப்பவர்கள் எத்தனை பேர். உருப்படாதவன், தண்டசோறு, செக்கொலக்கை, தடிமாடு, இப்படி பல்வேறு பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்று கொண்டு வேற்று கற்பனைகளோடு சுற்றி திரிகிற இளைஞர்கள் ஏராளம்.

சரி மேட்டருக்கு வருவோம். பெண் புத்தி பின் புத்திக்கு ஒரு ஒரு உதாரணத்தை பார்ப்போம். 

நீங்க வீட்டிலே இருக்கீங்க. உங்களுக்கு மிக நெருக்கமான ஒருத்தர் உங்களை தேடி வர்றார். 

எதுக்கு வர்றார்? 

உங்க கிட்டே ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கிகிட்டு போகலாம்ன்னு வர்றார். வந்ததும் மேட்டரை ஆரம்பிக்காம பல பீடிகை.

இது அத்தனையும் கவனிச்சுக்கிட்டு இருக்கிற உங்க வீட்டுக்காரம்மா.. ஜாடையா உங்களை உள்ளே கூப்பிடுது  

உங்களுக்கும் பழக்க தோஷம்தானே பட்டுன்னு எழுந்து உள்ளே போறீங்க. 

இத பாருங்க... உங்க பிரண்டு மென்னு விழுங்குறதை பார்த்தால் கடன் வாங்க வந்த மாதிரி தெரியுது. அப்படி ஏதாவது கேட்டால், நானே சிரமத்திலே இருக்கேன்னு சொல்லுங்க. 

வள்ளல் பரம்பரை மாதிரி எடுத்துகிட்டு நீட்டாதிங்க. அந்த மனுழன் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டு திரியுறான் சரியா?

பூம்பூ மாடுமாதிரி தலையை ஆட்டிகிட்டு வந்தா... மனைவி ஊகித்த மாதிரி கடன் தான் கேட்டார். 

ஆனால் உயிர் நண்பன் கேட்கும் போது இல்லைன்னு சொல்ல முடியலை. கொடுத்தீங்க . ஆனால் மனைவி சொன்னதுதான் உண்மையாச்சு. 

வாங்கி ஆறுமாசம் ஆகியும் இன்னும் திருப்பி கொடுக்கலை. இத்தனைக்கும் மனுஷன் ஒரு வாரம் தான் டயம் கேட்டார்.

இப்போ சொல்லுங்க யாருக்கு பின் புத்தி.இந்த பழமொழி எதுக்கு வந்துச்சு தெரியுமா? 

பின்னால என்ன நடக்கும் என்பதை முன்னாலேயே யோசிச்சு அதுக்கு தகுந்த மாதிரி நடக்கிறது பெண்களோட குணம்.

இதுதான் காலபோக்கில் மருவி பெண் புத்தி பின் புத்தின்னு தவறா புரிந்துகொள்ள பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.  

யோசிச்சு பாருங்க... மனைவி ஒரு மந்திரிதானே.


Wednesday 13 June 2012

நம்ப முடியாத அதிசயம்

கடவுள் நம்பிக்கை உள்ளோர் பலர். நம்பிக்கை அற்றோர் சிலர்.

நம்பிக்கை இல்லாதவர்களும் கூட, நம்ப முடியாத சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நீங்கள் பார்க்க போகும் விடியோ. 

சன்டிவியை தொடர்ந்து பார்பவர்கள் இந்த விடியோவையும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காதர்வர்களுக்காக இந்த விடியோவை லிங்க் செய்திருக்கிறேன். 

நிஜம் நிகழ்ச்சியில் வந்த விடியோ இது.

Sunday 10 June 2012

சைபர் கிரைம்


இணையதளங்களின் வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது. நட்பு வட்டம் பெருகி விட்டது. 

உலகத்தின் எந்த மூளையில் இருந்தாலும் அந்த கணமே தொடர்பு கொள்ள பல வழிகள்.

இன்று பேஸ்புக் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.நல்ல நட்பை பெறுகிற இதில் சில தீய சக்திகளும் இருக்கிறது. 

ஆபாச படங்கள் அனுப்புவது. விடியோக்கள் அனுப்புவது. ஆபாச வக்கிர சாட்டிங்க்க்கு அழைப்பு விடுப்பது என்று சிலர் தொடர்ந்து செய்து வருவது அனைவருக்கும் தெரியும். 

ஆனால் எப்படி தடுப்பது என்று புரியாமல் இருக்கலாம். அல்லது சரியான பாடம் புகட்டவேண்டும் என்று கூட நினைக்கலாம். 

ஆனால் எப்படி அதை செய்வது. யாரிடம் புகார் தருவது என்பது புரியவில்லையா? இதோ உங்களுக்காக....

உங்களுக்கு தொல்லை தரும் நபர் எதாவது ஒரு போலியான முகவரியில்  இருக்கலாம். அல்லது போலியான புகைப்படத்திற்கு பின்னே ஒளிந்திருக்கலாம். அதை பற்றி நீங்கள் கவலை படவேண்டாம்.

உங்களுக்கு அவர் அனுப்பிய செய்திகள் உங்களிடம் இருக்கும்.அந்த பக்கத்தை புக் மார்க் செய்து வையுங்கள். 

செல்பொன்னில் இருந்து தகவல் அனுப்பினால் அவரின் நெட்வொர்க் தொடர்பான எந்த செய்தியையும் மறைக்க முடியாது. 

கம்புட்டர் மூலம் செய்திகள் அனுப்பினாலும் எங்கும் ஓடி ஒளிய முடியாது.

அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீஸுக்கு தகவல் சொல்வது. 

இதற்காக நீங்கள் போய்த்தான் புகார் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடிதம் மூலமாகவோ, அல்லது இமெயில் மூலமாகவோ நீங்கள் புகார் சொல்லலாம். உடன் நடவடிக்கை எடுக்க படும்.

அந்த முகரியை கிழே தருகிறேன். உங்களுக்கு தொல்லை தரும் இணையதள கொசுக்களை ஒழிக்க இது ஓன்று தான் வழி. முகவரி இதோ 

Cyber Crime Cell
CB, CID
Chennai.

E-mail: cbcyer@tn.nic.in

கவிதைகள்



Friday 8 June 2012

இறைவன் எங்கிருக்கிறான்?

புராணங்கள் பதினெட்டு என்பர். அந்தந்த தெய்வங்களின் பெருமையை நிலை நாட்டுவதற்காக புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன.  

அக்கதையில் கூறப்பட்டுள்ள மையக் கருத்துகளில் பல உண்மைகள் பொதிந்துள்ளன. நாம் ஒரே ஒரு கதையை மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். உலகையும் உலக உயிர்களையும் இயக்குகிற மூர்த்திகள் மூவர்.

ஒரு சமயம் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் தானே பெரியவன் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. யார் பெரியவன் என்ற போட்டியில் இருவரும் சிவனிடம் சென்று தங்கள் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள்.

நீதிக்கரசர் சிவன் இருவருக்கும் சோதனை வைக்கிறார். தனது அடியையும், முடியையும் யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே சிறந்தவர் என்பது தான் போட்டி.

திருமால் பன்றி உருவம் எடுத்து பூமியை துளைத்து கொண்டு போகிறார். பிரம்மனோ அன்னம் வடிவெடுத்து மேலே போகிறார்.

திருமால் பாதாளம் வரை போயும் திருவடியை காணாமல் வந்து தந்து தோல்வியை ஒப்பு கொள்கிறார்.

மேலே சென்ற பிரம்மாவோ சிவனின் முடியை காணாமல் தாழம் பூவை துணைக்கழைத்து பொய் சாட்சி சொல்ல வைத்து, சிவனின் முடியை பார்த்ததாக பொய் கூறி அதற்கான தண்டனையை பெறுகிறார். இது கதை.


நமது ஹிந்து மதத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் சிலர். பொய்யையும் புனை கதைகளையும் பரப்பி, தம்மையும் தன் இனத்தையும் வளர்த்து கொண்டவர்கள் சிலர்.

அனல்வாதம் புனல்வாதம் செய்து பொது தொண்டையே தம் வாழ்க்கையாக மாற்றி ஹிந்து மதத்தின் பெருமையை நிலை நாட்டி கொண்டவர்கள் பலர்.

மிக மிக அதிகமாக படித்து விட்டு வேதாந்தம், சித்தாந்தம், தத்துவம் பேசி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, குழப்பிய குட்டையில் மீன் பிடித்தவர்கள் சிலர்.

பதினெண்சித்தர்கள், இராமலிங்க சுவாமிகள் போன்று உலக மக்களுக்கு உண்மையை உணர்த்தி அவர்களை நல வழிப்படுத்த வந்தோர் சிலர்.

இப்படி ஏராளமான பிரிவினரை நம் இந்து மதத்தில் காணலாம். இவர்கள் அத்தனை பேருமே இறைவனை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பாப்போம்.


இறைவன் எல்ல இடத்திலேயும் ஒளிவெள்ளமாக நிறைந்திருக்கிறான் என்கிறார் தாயுமானவர்.

அவன் ஆகாயமாகவும், பூமியாகவும், காற்றாகவும், ஒளியாகவும், நம் உடம்பாகவும், உடம்பினுள் உறைந்திருக்கிற உயிராகவும் அனைத்துமாய் இருக்கின்றான் என்றார் மாணிக்கவாசகர் பெருமான்

எல்லா உலகங்களையும் படைத்தும் நடத்தியும் அழித்தும் ஆகிய முத்தொழில்களை விளையாட்டுபோல் செய்கிறவனே இறைவன் என்கிறார் கவிசக்கரவர்த்தி கம்பன்.

ஆதியும் நடுவும், முடிவுமாய் நின்றவன் என்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வாரின் பாரதம்.

ஆதிசங்கரரின் அத்வைத கொள்கையும் இதைத்தான் வலிவுருத்துகிறது.


இதைதான் சித்தர்களும் கடுவெளிக்கு முடியில்லை. அடியும் இல்லை என்றார்கள்.

அப்படியானால் இறைவன் என்பது யார்?

ஒரு வேலை பிரபஞ்சமாக இருக்குமோ.

இனி பிரபஞ்சத்தை பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். இந்த பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கிறது.

அதன் அணுக்கரு மாற்றம் அடைந்து அது பல வாயுக்களாக பெருகி பின்னர் விரிவடைந்து பின்னால் இறுகி திடீர்ரென்று பெரிய வெடிப்பாக வெடித்து இப்பிரபஞ்சம் உருவாயிற்று என்கின்றனர்.

இதை BIG BANK THEROY என்பார்கள். இந்த பிரபஞ்சத்தில் ஆயிரகணக்கான அண்டங்களை தன் தொலைநோக்கியால் கண்டறிந்தவர் ஹப்பின் என்ற விஞ்ஞானியாவார்.

அவர் இந்த பிரபஞ்சத்திற்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை அது ஆதி அந்தமற்றது.

பிரபஞ்சம் தோன்றுகிறது வளர்கிறது பின் மறைகிறது. இப்பிரபஞ்சம் நிரந்தரமானது, அது எல்லையில்லாதது என்கிறார் விஞ்ஞானி  ஹாய்ஸ்.

இப்பிரபஞ்சம் எப்போது தோன்ற்யது?.

எப்போது முடியும்?

இப்பிரபஞ்சத்தின் எல்லைஎது ?

எங்கே ஆரம்பம்?

எங்கே முடிவு?

இதுவரை எந்த விஞ்ஞானமும் சரியான தீர்வை சொல்லவில்லை. விஞ்ஞானிகள் சொல்கின்ற கருத்துகள் அனைத்தும் உத்தேசமானதே அன்றி அவை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் அல்ல.

அடிமுடி கதைக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பு உண்டு..

நாம் அனுபவத்தில் ஒரு நாளில் பாதியை பகலாகும்.  மீதிப் பாதியை இரவாகவும் காண்கிறோம்.

தமிழ்நாட்டில் எல்லா பஞ்சாங்கங்களிலும் சூரியன் உதயம் சூரியன் மறைவு என போட்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் சூரியன் தோன்றுவதும் இல்லை. மறைவதும் இல்லை. இதுதான் நிரந்தரமான உண்மை.

அப்படியானால் சூரியன் தோற்றமும் மறைவும் பொய்யா? இல்லை. அதுவும் உண்மை எப்படி

1 .சூரியன் தோற்றம் மறைவு -ஒரு தற்காலிக உண்மை.

2 .சூரியன் என்றைக்கும் தோன்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை. இது நிரந்தர உண்மை.

இதைப்போல் இப்பிரபஞ்சம்தான் கடவுள், கடவுள்தான் பிரபஞ்சம் என்பது தான் நிலையான உண்மை. இதுதான் ஆன்மிகத்தில் முதல் நிலை.

அப்படியானால் நமது மும்முர்த்திகள்?

இப்பிரபஞ்சத்திற்கு நம் முன்னோர்களாலும், ரிஷிகளாலும், ஞானிகளாலும்  கொடுக்கப்பட்ட ஒரு குறியிடு அல்லது உருவம்.

இந்த உண்மையை நீங்கள் உணரும் போது பெருமாளின் தரிசனம் கிட்டும். முப்பத்து முக்கோடி தேவர்களின் தரிசனம் கிட்டும்.

இல்லை எனில் நீங்களும் உங்களது ஜீவனும் பக்குவ நிலையை அடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதுதான் உண்மை.

PKS


Wednesday 6 June 2012

hindu vedhas .com


அன்பு நண்பர்களே வணக்கம். என் நீண்ட நாளைய கனவான இணையதளம் hindu vedhas ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வெளிவர போகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமை பெற்றுவிடும் என நம்புகிறேன். இப்போதைக்கு உங்கள் பார்வைக்கு இப்போதைக்கு தமிழில்
இதை கிளிக் செய்யுங்கள்.

தமிழ் கவிதை


குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...