ads

Thursday 28 March 2013

மாணவர்கள் போராட்டம் - ஒரு கண்ணோட்டம்



மாணவ செல்வங்களே வணக்கம்.

நாளைய  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள். வலிமை மிகுந்த பாரதத்தை கட்டி எழுப்ப போகும் பேரொலிகள் நீங்கள். 

உங்களில் எத்தனை டாக்டர்கள் இருக்கிறார்கள் தெரியாது? எத்தனை இஞ்சினியர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரியாது?   

எத்தனை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்றும் தெரியாது?  அவ்வளவு ஏன்.. இந்தியாவை கட்டி ஆளும் தகுதியடைய எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றும் தெரியாது?

ஓன்று மட்டும் தெரியும். நீங்கள் தான் இந்தியாவின் விடிவெள்ளி. வளரும் தலைமுறையான உங்களை நம்பிதான் இந்தியா இருக்கிறது.



கண்ணிருந்தும் குருடாக, வாயிருந்தும் ஊமையாக,  பேசாமல் இருந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்க, வீதி வீதியாகக் களம் இறங்கி இருக்கிற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஆள்பவரே அரசர்கள். சட்டதிட்டங்களை வகுக்கும் வல்லவர்கள். அவர்களை கட்சி பேதம் இல்லாமல் ஆதரித்தோம், ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினோம்.

அதன் பிறகு, நல்லது செய்வார்கள் என்று நம்பினோம், நம்பிக்கையோடு காத்திருந்தோம்.



ஆனால்..... தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். தங்கள் வாரிசுகளுக்கு வருங்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். கோடி கோடியாய் கொள்ளை அடித்து,   இதோ நம் கண்ணெதிரே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


நம் கோவம் அதுவல்ல. தவறுக்கு தண்டனை தர தேர்தல்கள்  இருக்கிறது. தேடி வருவார்கள் பார்த்தக் கொள்ளலாம் என்று பொறுமை காத்தோம்.

ஆனால் நம் கண்ணெதிரே செத்து மடிந்தது நம் தமிழினம்.  துடித்து எழ வேண்டியவர்கள் துணை போன கொடுமையும் அரங்கேறியது.



உளவு பார்த்து சொன்னதாக சொல்கிறார்கள், ஆயுத உதவி செய்ததாக சொல்கிறார்கள். பண உதவி செய்ததாக சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்று தெரியாது.

ஆனால் உலக அரங்கில் அந்த கொடுங்கோலனை, கொடுங்கோல் அரசை வழி நடத்தும் ராஜபக்ஷ்சேவை காவல் காப்பதில் முகமூடி கிழிந்து போனது இந்தியாவிற்கு.




பல்வேறு அமைப்புகள் தங்கள் உணர்வுகளை பதிவு செய்தன. எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி போய்விட்டது.

இப்போது கூட ஜெனிவா தீர்மானம் இந்தியா சொல்லியபடி தான் தாக்கல் செய்யப்பட்டது என்று அமெரிக்கா சொல்கிறது.

ஆக  போர் குற்றங்களை விசாரிக்க துப்பில்லாத, மனித உரிமைகளை மீறிய இலங்கையை தண்டிக்க வழியில்லாத, வெற்று சடங்காக,  உப்பு சப்பில்லாத தீர்மானம் வர இந்தியாவே  காரணம் என்பது புலனாகிறது.




இருக்கட்டும்.

நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது.  நடத்திய நாடகம் போதும் நியாயம் வேண்டும் என்பது உங்கள் கோரிக்கை.

சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்த அரக்கனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பது உங்கள் வேண்டுகோள்.

நட்பு நாடு என்ற போர்வையில் ஊமை  கோட்டானாக இனியும் இருக்கக் கூடாது என்பது உங்கள் எதிர்பார்ப்பு.

தவறுகள் திருத்தப் பட வேண்டும், தவறியவன் தண்டிக்க பட வேண்டும் என்ற உங்கள் ஆவல்,

நாடிழந்த நம் சொந்தங்கள், நல்ல விதமாக வாழ வேண்டும், அதற்கு ஆளும் அரசின் கவனத்தை திருப்ப,  உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்லூரி படிப்பை கூட மறந்து, வீதிகளில் போராடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி.

இலங்கையை பொறுத்தவரை விடுதலைபுலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். இந்தியாவிற்கும் அதே கண்ணோட்டம்தான். ராஜீவ்காந்தியை கொன்ற வகையில்.

ஆனால் விடுதலை புலிகள் வேறு, இலங்கை தமிழர்கள் வேறு என்ற வித்தியாசம், டெல்லிகார்களுக்கு புரிவதே இல்லை.

இன்றைய அரசாங்கம் இலங்கை தமிழர்களை தமிழர்கள் என்று பார்ப்பதில்லை. விடுதலை புலிகளாக பார்ப்பதுதான் இத்தனை கொடுமைக்கும் காரணம்.

நிற்க

மாணவ சக்தியின் மகிமையை உலகம் அறிந்த ஒன்றுதான். நீங்கள் வீதிக்கு வந்த பிறகு அரசியல் சக்திகள் கூட அடையாளம் தெரியாமல் போய் விட்டது.  அதுதான் மாணவ சக்தி.

உங்கள் போராட்ட களத்தில் உங்களோடு தோள் கொடுத்து நிற்கும் தோழர்களில் ஒருவன் என் மகன் என்பதும் எனக்கு பெருமை.

உங்கள் போராட்டத்தை யாரும் குறை சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டார்கள். ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் மனசாட்சியாக இருக்கிறது உங்கள் போராட்டம்.

இருப்பினும் உங்கள் அறப்போராட்டம் வழி மாறுகிறதே. திசை மாறுகிறதே. உணர்வுகளுக்கு இடம் கொடுக்கும் வார்த்தைகள்  இடம் பெறுகிறதே.... தவிர்க்க வேண்டியவை அல்லவா அவை.

அரசு அலுவலகங்களை முடக்குவது, பூட்டு போடுவது, செயல்பட விடாமல் தடுப்பது, காவல் துறை அதிகாரிகளை வசை மாறி பொழிவது என்று போனால், வீண் அசம்பாவிதங்கள் நடக்க வழி வகுத்து விடும்.

வன்முறைகள்,  அடக்கு முறைகள் நடக்க காரணமாக இருந்து விடும். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது உங்கள் கடமை.

பொது மக்களுக்கு இடையூருதராமல் அறவழியில்  போராடினால், நிச்சயம் வழி திறக்கும், ஒளி பிறக்கும்.

வெல்லட்டும் உங்கள் போராட்டம்... ஓங்கட்டும் மாணவ சக்தி. மலரட்டும் தமிழ் ஈழம்.

வீடியோ இணைப்பு


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...