ads

Sunday 31 March 2013

அம்மா... என் அம்மா...!



அம்மா... என் அம்மா...! 
கனவு கானக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!

கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல் 
அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!

இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!
நிறைவேற்றினேன்!

சங்கீதப் பயிற்சிக்கு உடன் வந்து நின்றீர்கள்!
சேர்ந்திசை பாடினோம்!

எத்தனை நாள் பசியோடு நான் பள்ளியில் இருந்து திரும்பியிருப்பேன்!
சந்தியா வந்தனம் இன்றி சாப்பாடு இல்லை என்றீர்கள்!
வெறுப்போடு துவங்கி வேறு வழியின்றிப் பழக்கினேன்!

ஒழுங்கு முறையாய்ப் புகுந்து உள்கலந்தது!
அம்மா... என் வாழ்க்கை என் விருப்பத்தால் அமைந்ததில்லை!
ஒவ்வொன்றும் உங்கள் விருப்பம்! உங்கள் கனவு!
நனவாக்கிக் காட்ட முயன்றதே என் லட்சியம்!

எத்தனை நாட்கள் அம்மா... 
என் கவிதைக் கிறுக்கல்களை
தலைமாட்டில் வைத்துத் தூங்கியிருக்கின்றேன்!
எழுந்து பார்க்கும்போது அதைச் சொல்லி சிலாகிப்பீர்கள்!

என் தாத்தா தமிழ்ப் புலவர்! புத்தனேரி புத்தி உனக்கும் வந்ததடா என்பீர்கள்!
உற்சாகம் தந்த உங்கள் பதிலால்... 
பதின்ம வயதினிலே தேடித்தேடித் தமிழ் படித்தேன்!

அப்போதெல்லாம்... 
தமிழ் சோறு போடுமாலே! ஒழுங்கா படிக்கிற வழியைப் பார்! 
திட்டித் தீர்த்த அப்பா... எனக்கு வில்லனாய்த்தான் தோன்றினார்! 
நெருப்புக் கோளமாய் வெறுப்புக் கோபம் சுமந்தேன்!

வேறு வழியின்றி... 
கல்லூரிக் காலத்தே கணக்கு புகுந்தது!
பிணக்கின்றி தமிழும் ஆண்டது!

வேதம் கற்கச் சொன்னீர்கள்... கற்றேன்!
தர்மம் மீறாதிருக்க வேண்டும் என்பீர்கள்!
தருமச் சிந்தை நீங்கள் சொன்ன கதைகளால் என்னுள் புகுந்தன!

பிரபந்தம் பாடச் சொன்னீர்கள்... செய்தேன்!
சமையல் கற்றுத் தந்தீர்கள்! நுணுக்கம் கற்றேன்!
தையல் இயந்திரத்தின் சத்தத்தில் கவிச் சந்தம் தருவேன்!
ரசித்துக் கேட்பீர்கள்! உன் விளக்கமே அலாதி என்பீர்கள்!

யாரோ இதழ்களில் எழுதிய துணுக்குத் தோரணங்களையும் கட்டுரைகளையும்
பிழை மலிந்தும் பிழைத்திருக்கின்றனவே என்றீர்கள்! 
நீ மட்டும் இதை எழுதினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...?
உங்கள் ஆசையை நிறைவேற்ற... எழுதத் தொடங்கினேன்!

படிப்பு வேறாயினும் பணி வேறாயினும் 
அம்மா... இந்த எழுத்தின் சுவையால்...
பத்திரிகை எனை ஆட்கொண்டது! இதழியல் என்னுள் ஊற்றுக் கொண்டது!

எனை அறியாமல் என்னை ஆக்கிரமித்த இந்தத் துறைக்காக 
மகிழ்வு கண்டவர் என்னவோ நீங்கள்தானே அம்மா!

வானொலிப் பேச்சா..? தொலைக்காட்சி நேரலையா...?
நீ பேசி நான் கேட்க வேண்டும் என்றீர்கள்! 
எல்லாமும் நன்றாய்த்தான் நிகழ்ந்தன!

இதழியலின் எல்லா எல்லைகளிலும் கால்பதிக்க...
என் னம்மா... எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம்தானே!

ஆனால் இப்போது..! 
என்னம்மா ஆயிற்று உங்களுக்கு..?
வேறு வேலையில் நீ இருந்திருக்கக் கூடாதா என்கிறீர்கள்?!
உங்கள் மனத்தை மாற்றியது எது? 
ஆசைக் கூட்டைக் கலைத்தவர் யார்?
உங்களின் எல்லா ஆசைகளையும் இத்தனை நாள்
நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்!
எல்லாம் 
அந்த இறைவன்.. அரங்கன் பின்னே நின்று இயக்கியதால்!

எல்லாச் சூழலிலும் சக்தி வாய்ந்ததாக அவன் அருள் இருந்திருக்கிறது...
ஆனால் அம்மா.... 
அண்மைக் காலமாக நீங்கள் புதிதாக ஓர் ஆசையை வெளியிட்டீர்கள்! 
வருடங்கள் பல உருண்டோடிய பின்னே... 
பேரன் பேத்தி பார்க்க எனக்கும் ஆசையிருக்காதா என்றீர்கள்!

உண்மைதான் அம்மா! 
ஆனால் காலம் மாறிவிட்டதே! கருத்தும் கடந்துவிட்டதே!
கடவுளைக் காட்டிலும் வலிமையானவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால்...

அம்மா....
இது மட்டும் நிறைவேற்ற இயலாமல் போகிறது! 
கடவுளைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக
பெண்ணைப் பெற்றவர் முன் நிற்கிறார்!

இந்துஇசத்தைக் காட்டிலும் வலிமை வாய்ந்ததாக
கன்ஸ்யூமர்இசம் முன் நிற்கிறது!

அளவற்ற பேராசைகளுடன் கல்யாணச் சந்தை! 
எல்லையற்ற எதிர்பார்ப்புகளுடன் கல்யாணப் பெண்!

உங்கள் பையனுக்கு பத்திரிகை வேலையா? 
அப்படி என்றால் மேற்கொண்டு பேச வேண்டாம்...
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்டு நீங்கள் வருந்தினால்....
அம்மா... விட்டு விடுங்கள்!

புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்!
அம்மா...

இவர்களுக்காக..... நீங்கள் கற்றுத் தந்த 
எளிமையை, ஒழுக்கத்தை, பண்பை, தர்ம நெறியை
அம்மா.... 
என்னால் கைவிட முடியாது! 
மன்னித்து விடுங்கள் உங்கள் மகனை!

செங்கோட்டை ஸ்ரீராம் 

இலங்கை பெண்ணோடு சீமானுக்கு கல்யாணமா?




பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே,  வீரநடை,  தம்பி,  வாழ்த்துகள் என்ற திரைப்படங்களை இயக்கியவர்.பொறி,  எவனோ ஒருவன்,  பள்ளிக்கூடம்,  மாயாண்டி குடும்பத்தார், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்தவரும்மான சீமான்.

ஈழத்தமிழர்கள்   மேல் உள்ள அதீத அன்பால் சினிமாத்துறையை விட்டே கிட்டத்தட்ட  விலகியர் சீமான்.   

வருமான இழப்பை சந்தித்தாலும்  கூட, வாழ்க்கை லச்சியம் தனி ஈழம் என்பது போல்,  அவர்கள் துயங்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதில்  சீமானின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாது. 

ஈழ போராட்டத்துக்காக பல தடவை கைது ஆகியுள்ளார். தமிழ் மொழியில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு பகுத்தறிவாளர்.

இதுதான் சீமானை பற்றி நாம் அறிந்தது.

இன்று சீமானை பற்றி ஒரு கிசு கிசு ஓன்று வெளியாகி இருக்கிறது இலங்கை இணையதளம் ஒன்றில். அது கல்யாண கிசு கிசு.

புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளாராக இருந்தவர்  தமிழ் செல்வன் என்பது தெரிந்த விஷயம்.. அவரிடம்  நேரடி  உதவியாளராக செயற்பட்டுவந்தவர் அலெக்ஸ்.



சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்றில்லாமல் தமிழ் செல்வன் எங்கு சென்றாலும் அவருடன் நிழல் போல் தொடர்ந்து சென்றவர்  இந்த அலெக்ஸ்.

இப்போது இவர் இல்லை. இடைத்தங்கல்  முகாமில் தங்கி இருக்கும்  இவரின் மனைவியை தான் சீமான் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் கசிகின்றன.

ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க சீமான் முயல்கிறார் என்று நினைக்க விடாமல், அந்த செய்திகளுக்கு பின்னால் வேறு செய்திகளையும் கொளுத்தி போடுகிறது  அதே இணையதளம்.

நாடு கடந்து வாழும் இலங்கை தமிழர்கள் அளித்த நன்கொடைகள், அதை பெற்று, புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள்,உபகரணங்கள் பெறுவதற்காக பல்வேறு நாடுகளில் புலிகள் சார்பில் முதலீடுகள் செய்யப்பட்டன. 

இது அனைத்துமே புலிகள் பெயரில் இல்லாமல் நம்பகமான தனி நபர்கள் பெயரில் அந்தந்த நாடுகளில் செய்யப்பட்டன.



இந்த  முதலீடுகள் பலவற்றை தமிழ் செல்வனே மேற்கொண்டதுடன் அவை தொடர்பான பல தகவல்கள் புலிகளின் தலைமைக்கு தமிழ் செல்வனால் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும், இம்முதலீடுகள் தொடர்பாக  A to Z  அலெக்ஸ் அறிந்து வைத்திருந்தார் எனவும் நம்பப்படுகின்றது.

இங்கே குறிப்பிட்ட நம்பகமான தனி நபர்கள் என்பது தமிழ் செல்வன் மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் என்கிறது அதே இணையதளம்.

இந்நிலையில் இம்முதலீடுகள் தொடர்பாக அலக்ஸின் மனைவி அறிந்திருக்கமுடியும் என முழுமையாக நம்புகிறார்  சீமான்.

அலக்ஸின் மனைவியை கரம்பிடிப்பதன் முலம் தமிழ்செல்வன், அலெக்ஸ் குழுவினரின், வெளியுலகிற்கு வராத அல்லது தெரியாத  முதலீடுகளை தான் கையாள முடியும் என்ற புது வியூகம் ஒன்றினை வகுத்துள்ளதாக அதிர்ச்சியை தருகிறது.

விதவை திருமணம் வரவேற்க தக்க ஒன்றுதான். ஆனால் அதற்கு பின்னால் சொல்லப்படும் செய்திகளில்  எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று  தெரியவில்லை.

சில சமயம் பொய்கள் கூட உண்மை உருவத்திலேயே நடமாடும்.

ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே..!!


வனவாசம் முடிந்து திரும்பிய ராமருக்கு பட்டாபிழேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

ஒவ்வொரு வீட்டிலும் குதூகலம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு வீட்டில் மட்டும் கவலை வந்து சப்பணமிட்டு அமர்ந்திருந்தது.

அது சொர்ணவல்லியின் இல்லம். வயது வந்த மகள், எட்டு வயது சிறுவனான மகன், சொர்ணவல்லியின் இல்லத்தில் இன்று அடுப்பில் உலை ஏறவும் இல்லை.அவ்வளவு வறுமை. 

அவளது கணவர் ஒரு மகரிஷி. தவம் செய்ய வனம் சென்றிருந்தவர் ஏழாண்டுகளுக்கு பிறகு இன்றுதான் திரும்பி வந்து களைப்போடு உறங்கி கொண்டிருக்கிறார்.

காய் கனிகளையாவது  பறித்து வா, உன் தந்தை பசியோடு இருக்கிறார் என்று மகனை அனுப்பி வைத்திருக்கிறாள். 

தண்ணீர் எடுக்க சென்ற மகள் மண்குடத்தை சுமந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறாள். சொர்ண விக்கிரம் போல் ஜொலிக்கும் குழந்தைகள் பாவம் பசியால் வெயிலில் வாடிய பயிர்கள் போல் கலைத்திருக்கிறார்கள். 

மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஒரு போட்டு தங்கம் இல்லை. சொர்ணவள்ளி மனம் வருத்தத்தில் அழுகிறது.

சூரியகுல தோன்றலும், தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனுமான ஸ்ரீ ராமசந்திரருக்கு பட்டாபிழேகம் நடைபெறுவதை ஒட்டி, எள் தானம் செய்ய இருக்கிறார். உடன் தங்க கட்டியும் அளிக்கபடுகிறது. பெற விருப்பம் உள்ளவர்கள் தெரியப்படுத்தலாம் இது அரசு ஆணை ...அரசு ஆணை ...அரசு ஆணை.. முரசொலிப்பவன் முழங்கி கொண்டே போன சமயத்தில் சுய உணர்வுக்கு வந்தால் சொர்ண வள்ளி.

அவள் மனம் இப்போது முரசை போல் முழங்கி கொண்டிருந்தது. முனிவர் மெல்ல கண் விழித்தார். அவருக்கு பழங்களை பசிக்காக உன்ன வைத்து விட்டு மெதுவாக பேச்சு கொடுக்கிறாள் சொர்ணவள்ளி.

முரசொளிபவன் முரசு கொட்டி சொல்கிறான். ஸ்ரீ ராமர் எள் தானமும், உடன் தங்க கட்டியும் தருகிறாராம் என்று ஏக்கத்தோடு பார்க்கிறாள்.

அதற்கென்ன என்றபடி மனைவியை நோக்குகிறார் முனிவர்.

இல்லை .. நம் மகள் திருமணத்திற்கு தயாராக நிற்கிறாள். ஒரு குண்டு மணி தங்கம் கூட இல்லை.  அரசர் கொடுக்கும் தங்க கட்டியை வாங்கினால்....

அடிப்பாவி.... அதற்காக எள் தானத்தையா வாங்க சொல்கிறாய். எவ்வளவு பாவம் தெரியுமா அது. போரினால் ஏற்பட்ட உயிர் பலி பாவங்களை தீர்க்கவே ஸ்ரீராமர் எள் தானம் செய்கிறார்.

அதை யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால் தங்க கட்டியும் தருவதாக சொல்கிறார்கள்.

என் தவ வலிமையை இழந்து அந்த பாவங்களை என்னை சுமக்க சொல்கிறாயா? மகரிஷி என்ற புனிதம் இழந்து மாபாதகன் ஆக சொல்கிறாயா சீறுகிறார் முனிவர்.


இல்லை சுவாமி ..இல்லை... பதறுகிறாள் சொர்ண வள்ளி.

பின் எப்படி? எள்ளை மறுத்து தங்கத்தை  மட்டும் வாங்க முடியும்.

இல்லை சுவாமி நீங்கள் சம்மதித்தால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.
என்ன கூறுகிறாய்?

சுவாமி எள் தானத்தின் பாவத்தை தொலைப்போம். தங்கத்தின் பலனை அனுபவிப்போம்.

புரியும் படி சொல்.


சுவாமி ராமர் பரமார்த்த சொருபம் என்று சொல்கிறார்கள். சூரிய குல தோன்றலை தரிசித்தால் எப்பேர்பட்ட பாவமும் சூரியனை கண்ட பனி போல் விலகி விடாதோ?

சரி.

சுவாமி எள் தானம் வாங்கிய பின் வழங்கும் அவரது திரு முகத்தை பார்த்து விட்டால் பாவமெல்லாம் விளகிவிடாதோ? அதன் பின் தங்கம் நமக்கு கிட்டிடுமே. நம் மகளை திருமணம் செய்து கொடுத்துவிடலாமே.

சிங்கார முனிவருக்கு இதற்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் தளிர் கொடி போல். வளர்ந்து நிற்கும் மகளை பார்க்கும் போதெல்லாம் மனம் கடமையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. மனதை தேற்றிக் கொண்டார்.

எள் தானம் வாங்க இசைவதாக அரண்மனை அதிகாரியிடம் தெரிவித்தார்.

வசிட்டரின் மனம் சிந்தனையில் மூழ்கியது. தவ முனிவர் எள் தானம் வாங்க சம்மதித்து விட்டாரா? சரி யார் வாங்கினால் என்ன? கண்டிப்பாய் எள் தானம் கொடுத்தே ஆக வேண்டும்.

யார் எள் தானம் வாங்குவது. சிங்கார முனிவரா? கேட்கிறார் ஸ்ரீராமர்.


ஆம் ஸ்ரீராமா... எள் தானம் வாங்கும் அளவிற்கு தரம் தாழ்ந்தவர் அல்ல அவர். ஆனாலும் வறுமை அவரை இதற்கு சம்மதிக்க வைத்து விட்டது என்று நினைக்கிறேன்.

சரி தங்கத்தை மட்டும் தந்து அவரது வறுமையை போக்கி விடுவோம். எள் தானத்திற்கு வேறு யாராவது வருவார்கள். அவர்களுக்கு எள்ளும் தங்கமும் அளித்து விடலாம்.

ஸ்ரீராமா...அவரை தவிர இது வரை யாரும் சம்மதிக்க வில்லை. ஆனாலும் தன் தவத்தின் பலனை இழந்து சிங்கார முனிவர் எள் தானம் வாங்க சம்மதிக்கிறார்  என்றால் இதில் யோசிப்பதற்கு ஏதோ இருக்கிறது. பார்ப்போம்.

தானம் வழங்கும் பொது பார்ப்போம் என்றார் வசிட்டர்.


தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கார முனிவர் தானம் பெற வருகிறார். குனிந்து ஸ்ரீராமரின் கையில் எள் தானம் பெற்று ஸ்ரீராமரின் முக தரிசனத்திற்காக நிமிர்கிறார்.

ஸ்ரீராமரின் திருமுகத்தை தரிசனம் செய்யும் முன் இருவருக்கும் இடையில் ஒரு திரை வந்து விழுகிறது. முனிவர் அதிர்ச்சி அடைகிறார்.

உடல் தள்ளாடுகிறது. பாவங்கள் சூழ்ந்து தவப்பயனை, தேஜசை இழந்து தடுமாறுகிறார்.

கணவர் தங்கத்துடன் வருவார் என்று ஆவலுடன் வீட்டு வாசலில் காத்திருக்கிறாள் சொர்ணவல்லி.  அரண்மனை வண்டி ஓன்று வந்து நிற்கிறது.

ஓட்டி வந்த சேவகன் கைதாங்களோடு முனிவரை இறக்குகிறான். தான போருகளையும் கொண்டுவந்து வீட்டில் வைக்கிறான்.

பொலிவிழந்த  கணவரின் உருவத்தை பார்த்து சொர்ணவல்லி திடுக்கிடுகிறாள்.கதறி அழுகிறாள்.  கணவரை கட்டிலில் படுக்க வைக்கிறாள்.

திகைத்தவாறே தந்தைக்கு சொம்பில் பால் கொண்டு வந்து தருகிறாள் மகள். பையன் தந்தையின் கால்களை பிடித்து விடுகிறான்.

என் ஆசையால் உங்கள் தவப்பயனையும் இழக்க செய்து பாவம் உங்களை சூழ்ந்து உங்கள் பொலிவிழந்து நிற்க செய்து விட்டேனே என்று கண்ணீர் வடிக்கிறாள் சொர்ண வள்ளி.

அழாதே சொர்ணவள்ளி. இது விதி. உழைக்காமல் பெரும் செல்வத்திற்கு ஆசை பட்டதால் வந்த வினை. நம் வறுமை இப்படி செயல்பட வைத்து விட்டது. இதில் யாரை நொந்து கொள்வது.

அப்போது தூரத்தில் முரசொலி கேட்டது. பட்டபிழேகம் செய்து கொண்ட ஸ்ரீராமர் ஊர்வலம் வருதாக அறிவித்தது முரசொலி.

சொர்ண வள்ளி யோசித்தால். அவள் முகம் திடீரென்று மலர்ந்தது. முதல் முரசொலியால் இழந்த மகிழ்ச்சி, இரண்டாவது முரசொலியால் கிடைத்து விடும் என்று நம்பினாள்.

சுவாமி எழுந்திருங்கள்.நமக்கு விடுவு காலம் வந்து கொண்டிருக்கிறது. என்று கணவனை தூக்கினாள்.  பிள்ளைகள் இருபுறமும் தாங்கி கொள்ள  முனிவர் வாசலில் இறங்கி வீதியில் நின்றார்.

பட்டாபிழேகம் முடிந்து மங்கள் முழக்கங்களுடன் பவனி வந்தார் அயோத்தி அரசர் ஸ்ரீராமர்.

கூட்டத்தை மெதுவாக விலக்கி மெதுவாக கணவனை முன்னே சொர்ண வள்ளி அழைத்து செல்ல, கண்குளிர ஸ்ரீராமனை தரிசித்தார் முனிவர். ராமா ராமா என்று மனம் நெகிழ்ந்தார்.

அன்பு பொங்கும் முகத்துடன் முனிவரை பார்த்தார் ஸ்ரீராமர். முனிவரின் உடல் புத்துயிர் பெற்றது. இழந்த பலம் மீண்டும் கிடைத்தது.

புத்திசாலி பெண் என்று வசிட்டரின் வாய் முணுமுணுத்தது.


--மதிவாணன் 





வைரமுத்து காதல் கவிதை

இறக்கமுடியாத சிலுவைகள்

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!


இந்த லிங்கில் இருப்பது நான் எழுதிய கவிதை 

Saturday 30 March 2013

இலங்கையில் இன்று!!



வானம் பொழிகிறது, பூமி விளைகிறது மக்களுக்கு என்ன குறை என்கிற மாதிரி ராஜபக்ஷ்சே வசனம் பேசுகிறார். 

ஜெனிவா தீர்மானம் ஒரு தலைபச்சமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது, யுத்த  நிறுத்தத்திற்கு பின் நடந்த புனரமைப்பு பற்றி அவர்கள் கருத்தில் கொள்ள வில்லை என்கிறார். 

முள்ளு கம்பிகளுக்கு பின்னால் முடங்கி போன தமிழர்கள் ஒரு புறம் இருக்க, தினம் தோறும் நடக்கும் ஆள் கடத்தல் தான் அதிகம் இலங்கையில்.  இதோ தொடர்கிறது கட்டுரை.

அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு. 

எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு. .. 

இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை.

ஆம், இன்னும் முற்றுப்புள்ளி பெறாத தொடர்கதையாக நீண்டுகொண்டிருக்கின்றன இந்தக் கடத்தல், காணாமல் போதல், கைது செய்தல் போன்ற மர்ம நிகழ்வுகள்.

இவற்றின் பின்னணியில் யார்?, 

யார் இவற்றை செய்கின்றார்கள்?, 

எதற்காக செய்கின்றார்கள்?, 

தமிழர்களை மாத்திரம் குறிவைப்பது ஏன்?, 

காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா?, 

கைது செய்யப்பட்டு காணாமல் போனது எவ்வாறு?, கைது செய்யப்பட்டு உயிருடன் இருந்தால் ஏன் அவர்களை விடுதலை செய்யமுடியாது? 

ஏன் அவர்களின் விபரங்களை வெளியிட முடியாது? என்ற கேள்விகள் இன்னமும் எம்முன்  கேள்விக்குறிகளாகத்தான் இருக்கின்றன. 



எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் இருந்தும் இந்த கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்காமல் இருப்பது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

இறந்தபின் தான் சுடுகாடு தெரியும் என்பார்கள், அந்த வகையில் தமது உறவை இழந்தவர்களுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் புரியும். இதை எப்படி எடுத்துச் சொன்னாலும் மனிதாபிமானம் இல்லாதவர்கள் புரிந்துகொள்ளவே மாட்டார்கள் என்பதே நிதர்சனம். 

கால காலமாக தலைநிமிர்ந்து நடந்த தமிழர்கள் இன்று காணாமல் போன தமது உறவுகளுக்காக நடுவீதிக்கு இறங்கி யார் யாரோ கால்களில் மண்டியிட்டு புலம்பி அழும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜனநாயகம், மனித உரிமை, சுதந்திரம் என அடித்தொண்டை கிழிய கத்தும் அரசியல்வாதிகள் இதனைக் கண்டும் காணாது இருப்பது ஏன்? அல்லது ஏதோ ஒரு பதிலைக் கூறிவிட்டு தம் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்? 



ஆனால் எமது உறவு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கம் ஒன்றே காணாமல் போன உறவுகளுக்கு மீதமாகவுள்ளது.

இந்நிலையில் 2012இல் சர்வதேச செஞ்சிவைச் சங்கத்தின் அறிக்கையின்படி 12000 ற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

2012 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் 5803 இதில் விதவைகள் 3713 என கணக்கிடப்பட்டுள்ளது.

'எந்தவொரு நாட்டிலும் அதன் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணம் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு." என அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தின் உறுப்புரை 13 இல் கூறப்பட்டுள்ளது. 



ஆனால் நாட்டில் நடந்தேறும் கடத்தல், காணாமல் போதல், கைது என்பது மேற்கூறப்பட்ட உரிமைக்கு ஏட்டுச் சுரைக்காய் போன்றே உள்ளது.

முழத்துக்கு முழம் சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் சிவிலுடை தரித்த பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பு இவ்வாறான அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் எவ்வாறு கடத்தப்படுகின்றனர் அல்லது காணாமல் போகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புக்கள் செயற்பட்டாலும் இப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியாதுள்ளது. இதற்குக் காரணம் அன்றைக்கு மட்டும் கதறி அழுது விட்டு அதன் பின்னர் ஓரிரு நாட்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் நாம் பின்னர் அவை பற்றி சிந்திப்பதும் உரிய தரப்பினர் அதற்கு நடவடிக்கை எடுப்பதும் இல்லை. 

கடந்த முப்பது வருடகாலமாக இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்திருக்கின்ற போதிலும் ஏன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளது.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று பலர் பல காரணங்களுக்காக கடத்தப்படுகின்றனர், காணாமல் போகின்றனர். 

யுத்த காரணங்களுக்காகவும், அரசியல் நோக்கம் மற்றும் பாலியல் நோக்கத்திற்காகவும் பழிவாங்கல் நோக்கத்திற்காகவும் கப்பம் பெறும் நோக்கத்திற்காவும் கடத்தப்பட்டனர். தொடர்ந்து கடத்தப்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர். 

மேலும் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களும் காணமல் போயும் உள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் சிலரின் தகவல்கள் பற்றிய தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. 

மேலும் சிலர் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சடலமாக பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும் சிலர் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட உறவுகளை மீளவும் தமக்கு ஒப்படைக்க அதன் உறவுகள் ஜனநாயக வழியில் போராட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பில் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வடபகுதியிலிருந்து புறப்பட்ட பெருமளவிலான பொதுமக்களும், காணாமல் போனோரின் உறவினர்களும் வவுனியாவில் திட்டமிட்டு பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டனர். 

வவுனியாவிலிருந்து பயணிக்கும் முதியோர்கள், பெற்றோர் மீது வழியில் தாக்குதல் நடத்தப்படலாம் என தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், இதனாலேயே கொழும்புக்கு செல்வதை அனுமதிக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தான் இரவில் பயணம் செய்ய அவர்களை அனுமதிக்க முடியாது என கூறி கொட்டும் மழையில் வீதியிலேயே மறித்து வைத்தனர்.

கொழும்பு - விகாரமாதேவி பூங்காவில் காணாமல் போனோரை மீட்டுத்தருமாறு கோரும் பாரிய ஆர்ப்பாட்ட நிகழ்வு நடத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்துவதற்கும், கூட்டத்தின் முடிவில் ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்றினை கையளிப்பதற்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து பொலிஸார் டிரக் வண்டிகளை வீதியின் குறுக்கே நிறுத்தி தடுத்து வைத்தனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற முடியாத நிலை தோன்றியதால் மக்கள் வவுனியாவில் நடுவீதியில் மெழுகுவர்த்திகளை ஏந்திப் போராட்டம் நடத்தினர்.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அத்தியாயம் 9 இல் 'எவர் ஒருவரையும்; நியாயமற்ற விதத்தில் கைது செய்யவோ தடுத்து வைக்கவோ நாடு கடத்தவோ முடியாது"

பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அத்தியாயம் 9 (1) : 'அனைவரும் தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உரிமையை உடையவராகின்றார். எவரும் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைத்தலுக்கு உட்பட முடியாது. சட்டத்தில் கூறப்பட்டவாறாக அல்லாது எவருடைய தனிநபர் சுதந்திரமும் பறிக்கப்படலாகாது"

பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான ஐ.நா. சாசனம், அத்தியாயம் 19 : (1) 'ஒவ்வொருவரும் எந்த விதமான குறுக்கீடுகளும் அற்ற முறையில் தனது கொள்கையைப் பேணும் உரிமையை கொண்டிருக்கின்றார்"

அத்தியாயம் (2) "அனைவரும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றனர். 

குறுக்கீடற்ற முறையில் நாட்டின் எல்லைகளைக் கடந்தும் தமக்குத் தேவையான தகவல்களை தேடுதல் பெறுதல் மற்றும் தாம் விரும்பும் ஊடகத்தினைப் பயன்படுத்தி வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமாவோ கலை வடிவங்களினூடாகவோ தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் வெளியிடல் என்பவற்றிற்கான உரிமையூம் இதிலடங்குகின்றன.

இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் காணப்படும் உரிமைகளில் இலங்கையும் கைசாத்து இட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் மாத்திரம் ஏன் இதனை செயற்படுத்த முடியவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாகும்.

அதாவது கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் குறித்த வடக்கிலிருந்து வந்த காணாமல்போனோரின் உறவுகளை கலந்து கொள்ள விடாது தடுப்பதன் மூலம், ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைத்து சர்வதேச கவனம் பெறுவதை தடுத்துவிடுவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட சதியோ என எண்ணத்தோன்றுகின்றது.

ஜனநாயக நாட்டில் ஒரு பிரஜை தனது கருத்து சுதந்திரத்தை கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வேதனையான விடயம். 

ஆர்ப்பாட்டத்தின் மூலமோ கருத்து வடிவின் மூலமோ தனது கருத்தை வெளியிட பிரஜைக்கு உரிமை உண்டு. ஆனால் ஜனநாயக ரீதியில் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த வந்த உறவுகளை நியாயமற்ற விதத்தில் தடுத்து வைத்தமை சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அத்தியாயம் 9இல் கூறப்பட்ட உரிமையை முற்றாக மீறியுள்ளது.

எமது நாட்டில் யாரும் இரண்டாம் பிரஜை அல்ல. யாவரும் சமமானவர் எனக் கூறும் இந்த அரசில் மேற்கூறப்பட்ட சம்பவம் இதற்கெல்லாம் அப்பால் பிரஜைகள் ஒரு அடிமைக்கு ஒப்பாக நடாத்தப்பட்டுள்ளனர். 

இந்த செயற்பாட்டுக்கு அமெரிக்கா தமது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது. அதாவது காணாமல் போன தமது உறவுகளை தேடித்தருமாறு கோரும் போராட்டத்துக்காகவே அவர்கள் வவுனியாவில் இருந்து கொழுப்புக்கு சென்றனர். 

எனினும் அவர்களை தடுத்து நிறுத்தியமை நியாயமான செயலல்ல. அத்துடன் குறித்த பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு மதிப்பளித்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போனார் தொடர்பாக பெயர் வெளியிடப்படாத பட்டியலினை வெளியிட போவதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் பல முறை கூறியுள்ளது. 

ஆனால் இன்றுவரை அரசாங்கம் அவ்வாறு எந்தவொரு பட்டியலையும் வெளியிடவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாக இருப்பது உறவுகளை இழந்த உறவுகளை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்குவதோடு விரக்தி நிலைக்கு இட்டுச்செல்கின்றது.

யார் தான் எதனையும் சொன்னாலும் இந்நாட்டின் அரசு ஒரு கனம் சிந்தித்தால் இந்நிலையே மாறிவிடும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார். 

சரணடைந்தவர்கள் விடுவிக்கப்படுவர், காணாமல் போகச் செய்தல் இடம்பெறாது. ஆனால் இதெல்லாம் நிறைவேறுமா என்பது சந்தேகமே...

அதுவரை 'எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்", 'ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே? ", "தவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்" என கண்ணீரோடு வானத்தை நோக்கிய கதறல்கள் மாத்திரமே தொடர்ந்து கொண்டிருக்கும்.

-எம்.டி. லூசியஸ்
இலங்கை நெற்

Friday 29 March 2013

சிங்களர்களையும் அழைத்துக்கொண்டுதான் இந்தியா செல்லவேண்டும்- மனோ கணேசன் பொளேர்!!

தமிழக முதல்வர் கச்சதீவை மீளக்கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று இனவாதிகள் கூறுவதை, நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதாகும்.


இந்தியாவுடன் கட்டிபிடித்து உறவு கொள்ளும் போது இந்நாட்டு சிங்கள மக்களும் வங்காளத்தில் இருந்து வந்த வட இந்தியர்கள் என சொல்லுவதும்,பிறகு இந்தியாவுடன் சச்சரவு வந்தால் இந்தியா மீதுள்ள கோபத்தை இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களிடம் காட்டி அதற்கு அவர்களை பலிக்கடா ஆக்குவதும், தொடர்ந்து நடந்து வரும் ஒரு இனவாத நாடகம். 

இதற்கு இனிமேல் இடம் கொடுக்க முடியாது. இந்த இனவாத நடிகர்களுக்கு பின்னால் இருக்கும் அரசாங்கம் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த  இனவாத கூச்சல்கள் தொடருமானால், இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரச்சினையையும், ஐநா சபையின் கவனத்துக்கு நாம் கொண்டு செல்ல வேண்டி வரும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இலங்கையில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பாக  கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,     

இலங்கையில் வாழும் தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொடுக்கவில்லை. 

அதேபோல் இன்று மீண்டும் கச்சதீவை  திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜெயலலிதா ஜெயராம் இங்கு வாழும் தமிழர்களை, குறிப்பாக இந்தியவம்சாவளி தமிழர்களை கேட்டுக்கொண்டு முன்வைக்கவில்லை.

இந்நாட்டில் வாழும் தமிழ் தலைவர்களையும், தமிழக தலைவர்களையும் கேட்டுக்கொண்டு இலங்கை, இந்திய அரசாங்கங்கள் ஒப்பந்தங்கள் செய்வது இல்லை. 

எனவே இந்திய தமிழர்கள் என்ற பெயரில் இலங்கையில் வாழும் இலங்கை பிரஜைகளை இந்த கச்சதீவு விவகாரத்தில் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்த வேண்டாம் என கூறிவைக்க விரும்புகிறேன்.

இந்தியாவின் ஒரிசா, வங்காளம் ஆகிய பிராந்தியங்களில் இருந்தே சிங்கள இனத்தவர்கள் இலங்கைக்கு வந்து குடியேறினார்கள் என  டெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார். 

இது இன்று இந்தியாவில் சர்ச்சைக்கு உரிய கருத்தாக மாறியுள்ளது. இந்த கருத்தின் மூலம் இலங்கையில் இன்று வாழும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்று உண்மை  உறுதியாகியுள்ளது.

எனவே இனியொருமுறை இலங்கை வாழ் இந்திய தமிழர்கள் என்ற இலங்கை பிரஜைகளை  நாடு கடத்த வேண்டும் என்றால், இங்கு வாழும் சிங்கள மக்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டுதான் நாம் இந்தியா செல்ல வேண்டும். 

இந்நாட்டின் பூர்வீக குடிகளான வேடுவர்களுக்கு நாட்டை ஒப்படைத்துவிட்டு எல்லோரும் இந்தியா நோக்கி பயணமாக வேண்டும்.  

இந்த நடைமுறை நியாயமானது அல்ல. அதுபோல் கச்சதீவு என்ற விடயத்துடன் முடிச்சுபோட்டு இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என சொல்வதும் நியாயமானது அல்ல, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அப்படி போடு அருவாளை.

Thursday 28 March 2013

கட்சத் தீவை திரும்ப தருகிறோம் ஆனால்...!!


இலங்கையில்  என்ன நடக்கிறது என்று உண்மையில்  இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தெரியுமா தெரியாதா என்பதே தெரியவில்லை. 

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது இலங்கை விஷயத்தில்  எதிரொலிக்கிறது. 

ஒரு அரசாங்கம் செய்த தவறுக்கு அப்பாவி பொது மக்களை குறை சொல்கிறோம். தண்டிக்க முயல்கிறோம்.  அப்படி செய்பவர்கள் ஹிரோக்களாக மாறி விடுகிறார்கள்.

புத்த மதத்தை கடை பிடித்தாலும், பெரும்பான்மை சிங்களவர்கள் ஹிந்து வழிபாட்டை தவறாமல் செய்பவர்கள். அவர்கள் இந்தியாவிற்கு, வழிபாடு செய்ய வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். 

சிங்கள காடையர்கள் ஓட ஓட விரட்டியடிப்பு என்று இந்த வெக்கங்கெட்ட  தனத்தை கொட்டை எழுத்தில் போட்டு விளம்பர படுத்தியது ஊடகங்கள். இந்த தாக்குதலில் புத்த பிக்குகளும் தப்பவில்லை.



இப்போது,  நீண்ட காலமாக இருக்கும் கட்ச தீவு பிரச்சனை  விஸ்வருபம் எடுத்துள்ளது. 

மீனவர் பிரச்சனைக்கு  தீர்வு காண வேண்டுமானால், இலங்கை வசம் உள்ள கட்ச தீவை திரும்ப பெற வேண்டும் என்ற கோஷம்   அதிகரித்து விட்டது. 

அதற்கு தகுந்த மாதிரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார். 

இதன்  எதிரொலி  இலங்கையில் எப்படி இருக்கிறது ?

இலங்கையில் வாழும் இந்தியர்களின் தலையில் இடி விழுந்து விடும் போலிருக்கிறது.

கட்ச தீவை திரும்ப  தருவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. தற்சமயம்  இலங்கையில் மொத்தம் 8,42,323 இந்திய தமிழர்கள் உள்ளனர். (இரண்டாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கு )

இவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்றால், இவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை கொடுக்க முடியாது என்று இந்திய அரசு சொல்கிறது.

உங்கள் நாட்டவர்களான இவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.

அதற்கு  பரிசாக  அவர்களுடன் சேர்த்து கச்சதீவையும் கொடுத்து விடுகிறோம் என்கிறார் இலங்கையின் புத்த மத அமைப்பான லக்பல சேனாவின் தலைவர் டாக்டர் சுதத் மல்லிக்காராச்சி.

இந்த தமிழர்கள், வெள்ளைக்காரர்கள்  காலத்தில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தேயிலை தோட்டங்களில் பணிபுரிய கொண்டு செல்லப்பட்டவர்கள்.

அந்த காலகட்டத்தில் தான் மலேசியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கும் தமிழர்கள், விருப்பத்தின் பேரிலும், கட்டாயமாகவும் கொண்டு செல்லப்பட்டார்கள்.

(எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் இளைய தலைமுறையினர் பாலாவின் பரதேசி  படத்தை பார்க்கவும் )

இது இப்படியே வளர்ந்து கொண்டு போனால், தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும், பெரும் தொழில் நடத்தும் வணிகர்களாகவும் வளர்ந்து விட்ட இந்திய தமிழர்களுக்கு  இலங்கையில் தீம்ப்பாகத்தான் விடியும்.



படங்கள் சொல்லும் கதை








மாணவர்கள் போராட்டம் - ஒரு கண்ணோட்டம்



மாணவ செல்வங்களே வணக்கம்.

நாளைய  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள். வலிமை மிகுந்த பாரதத்தை கட்டி எழுப்ப போகும் பேரொலிகள் நீங்கள். 

உங்களில் எத்தனை டாக்டர்கள் இருக்கிறார்கள் தெரியாது? எத்தனை இஞ்சினியர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரியாது?   

எத்தனை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்றும் தெரியாது?  அவ்வளவு ஏன்.. இந்தியாவை கட்டி ஆளும் தகுதியடைய எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றும் தெரியாது?

ஓன்று மட்டும் தெரியும். நீங்கள் தான் இந்தியாவின் விடிவெள்ளி. வளரும் தலைமுறையான உங்களை நம்பிதான் இந்தியா இருக்கிறது.



கண்ணிருந்தும் குருடாக, வாயிருந்தும் ஊமையாக,  பேசாமல் இருந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்க, வீதி வீதியாகக் களம் இறங்கி இருக்கிற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஆள்பவரே அரசர்கள். சட்டதிட்டங்களை வகுக்கும் வல்லவர்கள். அவர்களை கட்சி பேதம் இல்லாமல் ஆதரித்தோம், ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினோம்.

அதன் பிறகு, நல்லது செய்வார்கள் என்று நம்பினோம், நம்பிக்கையோடு காத்திருந்தோம்.



ஆனால்..... தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். தங்கள் வாரிசுகளுக்கு வருங்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். கோடி கோடியாய் கொள்ளை அடித்து,   இதோ நம் கண்ணெதிரே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


நம் கோவம் அதுவல்ல. தவறுக்கு தண்டனை தர தேர்தல்கள்  இருக்கிறது. தேடி வருவார்கள் பார்த்தக் கொள்ளலாம் என்று பொறுமை காத்தோம்.

ஆனால் நம் கண்ணெதிரே செத்து மடிந்தது நம் தமிழினம்.  துடித்து எழ வேண்டியவர்கள் துணை போன கொடுமையும் அரங்கேறியது.



உளவு பார்த்து சொன்னதாக சொல்கிறார்கள், ஆயுத உதவி செய்ததாக சொல்கிறார்கள். பண உதவி செய்ததாக சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்று தெரியாது.

ஆனால் உலக அரங்கில் அந்த கொடுங்கோலனை, கொடுங்கோல் அரசை வழி நடத்தும் ராஜபக்ஷ்சேவை காவல் காப்பதில் முகமூடி கிழிந்து போனது இந்தியாவிற்கு.




பல்வேறு அமைப்புகள் தங்கள் உணர்வுகளை பதிவு செய்தன. எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி போய்விட்டது.

இப்போது கூட ஜெனிவா தீர்மானம் இந்தியா சொல்லியபடி தான் தாக்கல் செய்யப்பட்டது என்று அமெரிக்கா சொல்கிறது.

ஆக  போர் குற்றங்களை விசாரிக்க துப்பில்லாத, மனித உரிமைகளை மீறிய இலங்கையை தண்டிக்க வழியில்லாத, வெற்று சடங்காக,  உப்பு சப்பில்லாத தீர்மானம் வர இந்தியாவே  காரணம் என்பது புலனாகிறது.




இருக்கட்டும்.

நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது.  நடத்திய நாடகம் போதும் நியாயம் வேண்டும் என்பது உங்கள் கோரிக்கை.

சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்த அரக்கனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பது உங்கள் வேண்டுகோள்.

நட்பு நாடு என்ற போர்வையில் ஊமை  கோட்டானாக இனியும் இருக்கக் கூடாது என்பது உங்கள் எதிர்பார்ப்பு.

தவறுகள் திருத்தப் பட வேண்டும், தவறியவன் தண்டிக்க பட வேண்டும் என்ற உங்கள் ஆவல்,

நாடிழந்த நம் சொந்தங்கள், நல்ல விதமாக வாழ வேண்டும், அதற்கு ஆளும் அரசின் கவனத்தை திருப்ப,  உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்லூரி படிப்பை கூட மறந்து, வீதிகளில் போராடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி.

இலங்கையை பொறுத்தவரை விடுதலைபுலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். இந்தியாவிற்கும் அதே கண்ணோட்டம்தான். ராஜீவ்காந்தியை கொன்ற வகையில்.

ஆனால் விடுதலை புலிகள் வேறு, இலங்கை தமிழர்கள் வேறு என்ற வித்தியாசம், டெல்லிகார்களுக்கு புரிவதே இல்லை.

இன்றைய அரசாங்கம் இலங்கை தமிழர்களை தமிழர்கள் என்று பார்ப்பதில்லை. விடுதலை புலிகளாக பார்ப்பதுதான் இத்தனை கொடுமைக்கும் காரணம்.

நிற்க

மாணவ சக்தியின் மகிமையை உலகம் அறிந்த ஒன்றுதான். நீங்கள் வீதிக்கு வந்த பிறகு அரசியல் சக்திகள் கூட அடையாளம் தெரியாமல் போய் விட்டது.  அதுதான் மாணவ சக்தி.

உங்கள் போராட்ட களத்தில் உங்களோடு தோள் கொடுத்து நிற்கும் தோழர்களில் ஒருவன் என் மகன் என்பதும் எனக்கு பெருமை.

உங்கள் போராட்டத்தை யாரும் குறை சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டார்கள். ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் மனசாட்சியாக இருக்கிறது உங்கள் போராட்டம்.

இருப்பினும் உங்கள் அறப்போராட்டம் வழி மாறுகிறதே. திசை மாறுகிறதே. உணர்வுகளுக்கு இடம் கொடுக்கும் வார்த்தைகள்  இடம் பெறுகிறதே.... தவிர்க்க வேண்டியவை அல்லவா அவை.

அரசு அலுவலகங்களை முடக்குவது, பூட்டு போடுவது, செயல்பட விடாமல் தடுப்பது, காவல் துறை அதிகாரிகளை வசை மாறி பொழிவது என்று போனால், வீண் அசம்பாவிதங்கள் நடக்க வழி வகுத்து விடும்.

வன்முறைகள்,  அடக்கு முறைகள் நடக்க காரணமாக இருந்து விடும். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது உங்கள் கடமை.

பொது மக்களுக்கு இடையூருதராமல் அறவழியில்  போராடினால், நிச்சயம் வழி திறக்கும், ஒளி பிறக்கும்.

வெல்லட்டும் உங்கள் போராட்டம்... ஓங்கட்டும் மாணவ சக்தி. மலரட்டும் தமிழ் ஈழம்.

வீடியோ இணைப்பு


Wednesday 27 March 2013

சிக்கன் பிரியரா நீங்கள்- இதை படிங்க முதலில்!!




சிக்கன் 65 ன்னு எதனால பெயர் வந்துச்சு... அதை ஏன் சிக்கன் 95, சிக்கன் 120 இப்படி எல்லாம் சொல்லாம 65 ன்னு சொல்ல காரணம் இது என் கேள்வி.

அதற்கு என் நண்பர் ராகேஷ் முன்பு சொன்ன  பதில்.  சார்... வளர்ப்பு கோழியோட ஆயுள் காலம் 65 நாள் தான்.

அதுக்கு பிறகு அதுக்கு நோய் வந்து இறந்து போய்டும். அதனால அதன் ஆயுள் காலத்தை சொல்லுகிற விதமாத்தான் சிக்கன் 65 ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.

அப்படியா? சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

அசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து
போனது. 

காரணம் அசோகனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. 

அசைவப்பிரியரான அசோகன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். 

எப்படி? 

பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.

இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. 

இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. 

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். 

எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். 

இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. 

சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். 

மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். 

எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். 

இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். 

செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.

இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 

அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். 

முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். 

மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். 

அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். 

அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. 

அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்கிறார். 

அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: “சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். 

நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். 

தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. 

கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது’ என்று எச்சரிக்கிறார்.

நன்றி – குமுதம்



உங்கள் நட்சத்திர பலன்களை தெரிந்து கொள்ள

தமிழ் புத்தாண்டு பலன்கள்  

திருப்பதி ஏழுமலையான் ரகசியம்!!




திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் உடனுக்குடன் எண்ணப்பட்டு வருகின்றன. 

அதேபோல், நேற்றுமுன்தினம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 75 லட்சம் கிடைத்தது. சென்னையை சேர்ந்த நிஜலிங்கம் என்ற பக்தர் ஒரு கிலோ தங்கத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாக வழங்கினார்.

மேற்கண்ட தகவலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். - இது செய்தி.



இப்படி திருப்பதி  உண்டியலில் மக்கள் பணத்தையும், பொன் பொருள்களையும் கொண்டு போய் காணிக்கையாக கொட்ட என்ன காரணம்?

புராணக்கதை சொல்வது வேறு. திருமலையார் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கினார். 

அந்த கடனை கட்டவே பத்தர்களிடம் காணிக்கையாக பெறுகிறார். இதுவரை அவர் வாங்கிய கடனுக்கு வட்டி தான் கட்ட முடிகிறதே தவிர அசலை அடைத்தபாடில்லை என்கிறது. 

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டியை விட கொடுமையான வட்டியாக இருக்கும் போல இருக்கிறதே என்று சிலர் யோசிக்கலாம். நம் யோசனை அதுவல்ல.

திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் வரும் என்றார் கண்ணதாசன். அந்த வார்த்தை உலகம் முழுவதும் பரவி விட்டது.

பலர் திருப்பதி சென்று வந்த பிறகு வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இது ஒருபுறமிருக்க,  ஒருவர் சொந்த தொழில் ஆரம்பிக்கிறார். தன் தொழிலுக்கு கூட்டாளியாக, ஒரு செல்வந்தரை சேர்த்துக் கொள்வது இயல்பு.

பலர் தங்கள் தொழில்த்துறை கூட்டாளியாக சேர்த்துக் கொள்வது திருமலையானைத்தான்.



அவர் எப்ப வந்து முதல் போட்டு முதலாளியானார் என்று கேட்கலாம். அவர் முதல் போடாத முதாலாளி.

தொழில் துவங்குவோர் அவரவர் விருப்பம் போல் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொள்கிறார்கள். தொழிலும் அமோகமாக  நடக்கிறது.

அப்படியானால் லாபத்தில் ஒரு பகுதியை ஒப்புக் கொண்ட மாதிரி கொடுப்பதுதானே முறை. அதுதான் உண்டியலில் பணம் கொட்டும் வித்தை.




உங்கள் நட்சத்திர பலன்களை தெரிந்து கொள்ள

தமிழ் புத்தாண்டு பலன்கள்  

Monday 25 March 2013

கண்ணதாசன் தத்துவங்கள்!!




ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்!!
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்!!
ஒவ்வொரு ஏமாற்றமும் ஓர் எச்சரிக்கை!!
ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு!!
ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்!!




மனிதர்கள் பெரும் புகழ் இரண்டு வகைப்படும்
ஓன்று பெற்று சாவது
இன்னொன்று செத்து பெறுவது
சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள்
பெற்று செத்தார்கள்
கோடிக் கணக்கானவர்கள்
செத்து பெற்றார்கள்.


தேவைக்கு மேலே பொருளும்
திறமைக்கு மேலே புகழும் கிடைத்து விட்டால்
பார்வையில் படுவதெல்லாம்
சாதாரணமாக தோன்றும்.


அழும்போது தனிமையில் அழு
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி
கூட்டத்தில் சிரித்தால் நடிப்பு என்பார்கள்
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள். 

சுவாமி விவேகானந்தர்!!


எனக்கு
வலிமையை கொடு என்று
இறைவனிடம் கேட்டேன்
அவர் என் வாழ்க்கையில்
நிறைய
கஷ்டங்களை
ஏற்படுத்தினார்!

எனக்கு
புத்திசாலித்தனத்தை கொடு என்று
கெஞ்சினேன்
வாழ்க்கையில்
சில பிரச்சனைகளை
உருவாக்கினார்!

மகிழ்ச்சியை கொடு என்று
கடவுளிடம் வேண்டினேன்
சோகமான
மனிதர்களை எனக்கு
அடையாளம்  காட்டினார்!

செல்வத்தை கொடு என்று
அவரிடம் கேட்டேன்
கடுமையாய்
உழைப்பது எப்படி என்பதை
காட்டினார்!

எனக்கு சாதகமான
நிலையை
உருவாக்கி தா என
மன்றாடினேன்
உழைப்பதற்கான
சில சந்தர்ப்பங்களை
எனக்கு அவர் அளித்தார்!

அமைதியை  கொடு என்றேன்
ஆண்டவனிடம்
அடுத்தவருக்கு உதவுவது எப்படி
என்பதை கற்று தந்தார்!

இறைவன் நான் கேட்ட
எதையும் தரவில்லை
ஆனால்
எனக்கு
தேவையான
எல்லாவற்றையும்
தந்து விட்டார்!

ரஜினியும் அவரது நட்பும்!!



நடிகர் ரஜினிகாந்த் அவர்களை   நல்ல மனிதர், பண்பாளர், மனிதநேயம் மிக்கவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

இந்த கருத்தில் இருந்து  அவர் தவறி விட்டார் என்றும் சொல்ல முடியாது. ஆனால் சமீப காலங்களில் அவர் குரல் ஊடககங்களில் அதிகம் ஒலிக்கிறது. 

அது பெரும்பாலும் மக்கள் சந்திக்கும் பெரும் துயரத்தை பற்றியோ, கண்ணெதிரே நடக்கும் அவலங்களை பற்றியோ, உயிர் துறக்கும் மீனவர்கள் பற்றியோ, நித்தம் நடக்கும் கொலை கொள்ளைகள் பற்றியோ செத்து மடிந்த ஈழ தமிழர்கள் பற்றியோ இல்லை.

அவரின் அன்புக்கு உரியவர்கள், சினிமாதுறை சார்ந்தவர்கள் பாதிக்கப் படும் போது மட்டும் உள்ளம் கொதிக்கிறது அவருக்கு. 

கமலுக்கு சிக்கல் என்றதும் மௌனம் கலைத்தார்.  அவருக்காக குரல் கொடுத்தார். இப்போது குண்டு வெடிப்பு வழக்கில்  சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. 

அன்பான மனிதரான சஞ்சய்தத் என் பாசத்திற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது. 

இந்த தண்டனையிலிருந்து அவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்”என தெரிவித்துள்ளார்.

நல்லது. யார் செத்தால் என்ன? எத்தனை உயிர்கள் மடிந்தால் என்ன? நட்பு தான் முக்கியம். அவர்  தீவிரவாதியாக இருந்தாலும்.

இதுதான் தமிழக அரசியல்வாதிகள்!!

இவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் வரும் என்று கணக்கு பார்ப்பது வியாபாரம்.  

அரசியலும் அப்படித்தான் போலும். வாழ்வா சாவா என்பது முக்கியமல்ல. என்ன ஆதாயம் என்று பார்ப்பதும் தான் அரசியல் என்று ஆகிவிட்டது.

பிரபாகரனின் இளைய  மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு துயர சம்பவம் என்றால், அந்த இறப்பை வைத்து ஆதாயம் தேடும் தமிழக அரசியல்வாதிகளை என்ன சொல்வது? 






Sunday 24 March 2013

விஞ்ஞான உலகத்தில் கடவுள் நம்பிக்கை தேவையா?


உலகத்தில் உள்ள அத்தனை பொருள்களையும் மனிதன் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் புரிந்து கொண்டு விட்டான். 

அதனால் அவன் இயற்கையான அமைப்புகளை மாற்றி அமைக்கக் கூடிய வல்லமை கொண்டவனாக ஆகிவிட்டான். இந்த நிலையில் கடவுளை நம்ப வேண்டியதின் அவசியம் என்ன?



மனிதன் இன்று உலகத்தின் அமைப்பை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். வானவெளியில் பிரயாணம் செய்யவும் கற்றுக் கொண்டிருக்கிறான். 

ஆனால் அவனால் மனித வாழ்க்கையில் அன்றாட மாற்றங்களை கணிக்க முடியவில்லை. நாளைக்கு என்ன நடக்கும் என்று அவனால் சொல்ல முடியவில்லை. 

மனிதன் இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதற்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்று அவனால் சொல்ல முடிவதில்லை. முயற்சி ஒரு விதமாகவும். அதற்கு பலன் வேறு விதமாகவும் அமைந்து விட்டால் அதன் காரணத்தை அவனால் விளக்க முடிவதில்லை.

அவன் இயற்கையாக மனித குலத்தின் நன்மைக்காக கண்டுபிடித்தவைகளே, மனிதனை அழிக்கும் சக்தியாக பேருருவம் எடுத்து நிற்ப்பதையும் அவனால் தடுக்க முடிவதில்லை.

மனிதனை மீட்டு வழிகாட்ட அவன் பெரும் சக்தியான கடவுளைதான் நாட வேண்டியிருக்கிறது.

மனிதன் இன்று எத்தனையோ இயந்திரங்களையும், கம்பியுடர்களையும் கண்டுபிடித்து விட்டான்.

பல்லாயிரக்கனக்கான மக்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சில கருவிகளே செய்து விடுகின்றன. இவை எல்லாம் விஞ்ஞான அற்புதங்களே.


ஆனால் இவற்றில் ஒரு சிறு கருவி கூட தானே இயங்க முடியாது. பழுதாகி விட்டால் தானே சரி செய்து கொள்ள முடியாது. அதற்க்கு ஒரு மனிதன் தான் தேவைப்படுகிறான்.

அந்த மனிதனை உண்டாக்கும் வல்லமையை இன்றும் எந்த விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. இறந்து விட்ட சிறு எறும்புக்கு கூட எந்த விஞ்ஞானியும் உயிர் கொடுக்க முடியாது.

ஆகையால் தனது படைப்பு வாழ்க்கை,  முடிவு ஆகிய மூன்றுமே மனிதன் தன்னை ஆட்டி படைக்கக் கூடிய வேறு சக்தி ஒன்றைத்தான் நம்பி இருக்கிறான்.

ஆகையால் கடவுள் நம்பிக்கை அவசியமா என்று நாம் கேட்க வேண்டியதில்லை. அதை ஒத்து கொள்ளாமல் வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டால் போதும், அப்படி புரிந்து கொள்ள இயலாதவர்கள் எத்தனை விஞ்ஞான அறிவு பெற்றிருந்தாலும், அது அவனை முழுமையானவனாக செய்ய முடியாது.

சுவாமி. சிவருப தாமோதரதாசா. 


குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...