ads

Sunday 29 December 2013

நவராத்திரி


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் அருள்புரியும் சக்தியின் அம்சங்களை வழிபாடு செய்யும் ஒன்பது இரவுகளே நவராத்திரிகள் எனப்படுகின்றன. 

ஒன்பது இரவுகள் பத்து பகல்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி எனப்படுகிறது.

சக்தியின் அம்சங்களான துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று மூப்பெரும் தேவியரை இத்தினங்களில் வழிபாடு செய்து வணங்குகிறார்கள்.  

வட இந்தியாவில் இவ்விழா பெரும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  குஜராத், மகாராஷ்டிரா, பீகார், மத்தியப்பிரதேசம், பஞ்சாபின் வடபகுதி மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இந்த சக்தி  வழிபாட்டினை மிகவிசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.

வருடத்தில் நான்கு முறைகள் இந்த நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவை சாரதா நவராத்திரி,  வசந்த நவராத்திரி,  ஆஷாட நவராத்திரி அல்லது வராஹி நவராத்திரி,   பௌஷநவராத்திரி அல்லது சியாமளா நவராத்திரி  எனப்படுகின்றன.   

இவற்றில் வசந்த நவராத்திரியும், சாரதாநவராத்திரியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பருவநிலை மாற்றம் பெறும் வசந்த கால ஆரம்பத்திலும், குளிர்கால ஆரம்பத்திலும் இந்த இரு நவராத்திரிகளும் கொண்டாடப்படுகின்றன.

 இந்த சித்திரை  மற்றும் புரட்டாசி மாதங்களை யமனின் கோரப்பற்கள் என்கிறார்கள். ஏனெனில் இந்த பருவ சூழல் மனிதர்களுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தக் கூடியதாம். 

இதனால்தான் சித்தர்கள் இந்த இரண்டு மாதங்களையும் வழிபாட்டிற்காக ஒதுக்கிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. 

சாரதா நவராத்திரி எனப்படும் நவராத்திரியே பெருவாரியான இந்து பெருமக்களால் கொண்டாடப்படும் மகாநவராத்திரி ஆகும்.

குளிர்காலம் ஆரம்பிக்கும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தமிழுக்கு புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை முடிந்த முதல் தினத்தில் ஆரம்பமாகிறது. 

நவராத்திரியில் ஆண்கள் பங்குபெற்றாலும் பொதுவாக பெண்களாலேயே இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இல்லத்தின் சக்திகள் உலகத்தின் சக்தியை வழிபடும்நாட்களே நவராத்திரி தினங்கள். 

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி என்பது வசந்தருது ஆரம்பமாகும் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் தமிழுக்கு சித்திரை மாதத்தில்  கொண்டாடப்படுகிறது



இந்த வசந்த நவராத்திரியை ஒட்டி ஒரு கதை சொல்லப்படுகிறது.

முன்னொருகாலத்தில் அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சிசெய்து வந்தான். அவனுக்கு லீலாவதி, மனோரமா என்று இரண்டு மனைவிகள். 

துருவசிந்து ஒரு நாள் வேட்டைக்கு சென்ற சமயத்தில் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டு உயிரிழந்தான். 

 மனோரமாவின் மகனான சுதர்ஷனன் என்ற இளவரசனுக்கு அயோத்தியின் அரசனாக முடிசூட்டும் ஏற்பாடுகள் முறைப்படி  நடந்தன.

ஆனால் துருவசிந்துவின் இன்னொரு மனைவியான லீலாவதியின் தகப்பனும் உஜ்ஜயினியின் அரசனுமான யுதஜித் என்பவன், தன் பேரனும் லீலாவதியின் மகனுமான சத்ருஜித் என்பவனே அயோத்தியின் அரசனாக வேண்டும் என்று விரும்பினான். 

அதற்கான முயற்சியில் இறங்கினான். இதை மனோரமாவின் தகப்பனும் கலிங்கநாட்டு அரசனுமான வீரசேனன் என்பவன் விரும்பவில்லை. 

தங்கள் பேரனை அரசனாக்கும் முயற்சியில் இரண்டு அரசர்களுக்கும் போர் மூண்டது. போரில் வீரசேனன் கொல்லப்பட்டான். 

மனோரமாவும் அவனது  மகன் சுதர்சனனும் உயிர்தப்பி ஓடி காட்டிற்குள் பரத்வாஜ் ரிஷியின் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர். ரசகுமாரனின் உதவியாளனாகிய ஒரு நபும்ஸகனும் அவர்களுடன்  இணைந்து கொண்டான். 

தன் பேரனை அயோத்தியின் அரசனாக்கிய யுதஜித், சுதர்ஷனனை தேடிக் கொல்லும் நோக்கில் காட்டிற்குள் தன்  வீரர்களை அனுப்பி வைத்தான். 

பரத்வாஜ் ரிஷியின் ஆசிரமத்தில் தாயும் மகனும் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களை கைதிகளாக தன்வீரர்களுடன் அனுப்பி வைக்கும் படி தூது அனுப்பினான்.  அடைக்கலம் புகுந்தவர்களை காப்பது என் கடமை என்று பரத்வாஜ் உறுதியாய் கூறிவிட்டார்.

சீற்றம் கொண்ட யுதஜித்திடம், அவனது மந்திரிகள் ரிஷிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறி அமைதிப்படுத்தி, அவனை உஜ்ஜயினிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிரமத்தில் இருக்கும் துறவி ஒருவர் சுதர்ஷனனுடன் வந்த நபும்சகனை சமஸ்கிருத மொழியில் கிலீபா என்று அழைத்தார்.

சுதர்சனனும் அவனை க்லி.. க்லீம் என்று அழைத்தான்.. நாளடைவில் அது க்லீம் என்றாகியது. க்லீம் என்பது சமஸ்கிருதத்தில்  ஆற்றல்மிக்க அன்னையின் பீஜ அட்சரமாகும். 

அந்த வார்த்தை அரசகுமாரனுக்கு ஒருவித அமைதியையும் இன்பத்தையும் தந்ததால் , அவன் அந்த வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரித்து தவநிலையை எய்தினான். 

ஜப எண்ணிக்கையின் வீர்யம் அன்னையை  அவன் முன் தோன்றச் செய்தது. சுதர்சனனுக்கு காட்சிதந்த சக்திதேவி அவனுக்கு சக்தி  வாய்ந்த அழிவில்லாத ஆயுதங்களை பரிசாக வழங்கியருளினாள். 

ஒருமுறை பனராஸ் அரசனின் ஒற்றர்கள் பரத்வாஜ் ஆசிரமம் வழியாகச் செல்லும் போது, சுதர்சனனையும் அவன் ஆயுதங்களை கையாளும் திறமையையும் பார்த்து, அவன் தங்கள் அரசனின் மகள் இளவரசி சசிகலாவிற்கு சரியான கணவனாக அமைவான் என்று எண்ணி,  அரசனிடம் கூறினார்கள். 

அரசன் சுதர்சனை முறைப்படி வரவழைத்து தன் மகளை அவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகளைச்  செய்தான்.

இதை அறிந்த யுதஜித் பனராஸ் மீது படையெடுத்து வந்தான். சுதர்சனன் தன்னிடமிருந்த வலிமைவாய்ந்த ஆயுதங்களின் துணையோடு யுதஜித்தைத் தோற்கடித்து தன் மாமனாரையும் காப்பாற்றினான். சக்தி தந்த ஆயுதங்கள் யுதஜித்தின் படைகளை துவம்சம் செய்து அழித்தொழித்தது.

சுதர்சனன், சசிகலா திருமணம் விமரிசையாக நடந்தது.  அனைவரும் தேவியை , அவரது மந்திரங்களை உச்சரித்து போற்றி வணங்கினர்.   

மனம் மகிழ்ந்த சக்தி, அவர்களின் முன் தோன்றி தன்னை  வருடந்தோறும் இதே  வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள் உங்கள் துன்பங்கள் யாவும் மறைந்து  நன்மைகள் விளையும் என்று அருளி  மறைந்தாள். 

அதன் பின் சுதர்சனன் தன் மாமனாரிடம் விடைபெற்று தன் மனைவியுடன் பரத்வாஜ் ஆசிரமம் அடைந்தான். அவனை வாழ்த்திய முனிவர் அவனை அயோத்தியின் அரசனாக முடிசூட்டி வைத்தார். 

சுதர்சனன் தன் நாட்டு மக்களோடு வருடந்தோறும்  வசந்த காலத்தில் தேவிக்கு விழா எடுத்து வணங்கி மகிழ்ந்தான். இதுவே வசந்த கால நவராத்திரி ஆயிற்று. 

சுதர்சனனின் வழிதோன்றல்களாகிய இராம லக்ஷ்மணர்கள் சீதையைக் கண்டுபிடித்து மீட்டு வரும் முயற்சியில் வெற்றிபெற  புரட்டாசி மாதத்தில் வரும்  சாரதா நவராத்தியில் தேவியை வணங்கி வேண்டிக்கொண்டனர் என்று  இராமாயணம் கூறுகிறது.

சாரதா நவராத்திரி

உலகெங்கும் வாழும் இந்து பெருமக்கள் அனைவராலும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே இந்த சாரதா நவராத்திரி ஆகும். 

வட இந்தியாவில் மட்டுமன்றி தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு,  கர்நாடகா, ஆந்திரா , கேரளா மாநிலத்திலும் இந்த நவராத்திரிவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இல்லத்தில் கொலுவைத்து , தினசரி   வழிபாடு செய்து பெண்கள் கூட்டமாக இந்த நவராத்திரி வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். அம்மன் கோயில்களிலும் அம்மனை துர்கையாக, லக்ஷ்மியாக, சரஸ்வதியாக அலங்கரித்து,   கொலுப்பொம்மைகள் வைத்து    வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். 

‘ஓர் ஆத்மாவானது, ஓர் அறிவு பெற்ற உயிராய்  பூமியில் தோன்றி,   பிறவிகள் தோறும் தனது நிலையில் உயர்ந்து , ஞானியாய்  மலர்ந்து இறுதியில் இறைவனை அடைகிறது’  என்பதையே தத்துவார்த்தமாக  இந்தக் கொலுப்பொம்மைகள் கூறுகின்றன. 

சக்தியின் ஒன்பது அம்சங்களை ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யவே இந்த ஒன்பது நாட்கள் என்று கூறப்படுகிறது ,  தற்காலத்தில் முதல் மூன்று நாட்கள் துர்கையை வழிபட்டும், அடுத்து வரும் மூன்று நாட்களில் மகாலக்ஷ்மியையும், அதனடுத்து வரும் மூன்றுநாட்களில் சரஸ்வதியையும் வழிபாடு செய்து, இறுதி நாளில் மகிஷாசுரனை துர்காதேவி அழிக்கும் நிகழ்வோடு இவ்விழா முற்றுபெறுகிறது. 

மகிஷன் என்ற எருமைத் தலை கொண்ட அசுரனை அழிக்க , அனைத்து தெய்வங்களும் ஆயுதங்கள் அளிக்க, அம்பிகையானவள் துர்கை அவதாரம் எடுத்து சிங்கத்தின் மீதேறி, ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாள் மகிஷனின் தலையை சீவித் தள்ளினாள் என தேவி மகாத்மீயம் கூறுகிறது. 

போரில் துர்கை வெற்றிபெறும் நிகழ்வே விஜயதசமியாக கொண்டாடப்படுக்கிறது. 

பத்தாவது நாளில் கோயில்களில் பெரும்பாலும் சண்டிஹோமம் நடைபெறுகிறது. சண்டி என்பவள் முப்பெரும்தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள்.

பெண்கள் பெரும்பாலும் இந்த பத்துநாட்களும் விரதமிருந்து அம்பிகையை வழிபாடு செய்கின்றனர்.

மதிவாணன் 


hindu gods

aiyappan

gayathiri

kamachi

rathakannan

maha lakshmi

Thursday 19 December 2013

பேஸ்புக்’ தகவலால் அடையாளம் கண்டுபிடிப்பு!!

சவுதி அரேபியாவில் சுயநினைவிழந்த தமிழர் ‘பேஸ்புக்’ தகவலால் அடையாளம் கண்டுபிடிப்பு!!



விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, போய்குனம் பகுதியை சேர்ந்த தணிகைவேலு (33) சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். அவர் திடீரென மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு நினைவுத் திறனை இழந்துவிட்டார்.

நினைவுத் திறனை இழந்த தணிகைவேல் சவுதியில் உள்ள ஜெட்டாவில் இந்திய தூதரக அலுவலகம் முன் சுயநினைவின்றி விழுந்து கிடந்ததால் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சுயநினைவிழந்ததால் அவர் யார் என்ற விவரம் தெரியாமல் தவித்த அதிகாரிகள் அவரை எப்படி தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது என திணறிவந்தனர்.

பல்வேறு முயற்சிகளுக்குபின் தூதரக அதிகாரிகள் செந்தமிழ் நல மன்றம் என்ற தமிழ் அமைப்பை அணுகினர். அவர்கள் அவரது தற்போதைய புகைப்படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டனர். 

அவரது புகைப்படத்தை 8000 பேர் பகிர்ந்துள்ள நிலையில் அதில் ஒருவர் அவரை கண்டுபிடித்து, அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் என அரபு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தணிகவேலு மனைவியிடம் அவரது விசாவின் நகல் இருந்ததையடுத்து, உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகள், சவுதி தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவரை இந்தியாவிற்கு அனுப்ப ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்திய பணியாளர்கள் அவரின் மருத்துவ செலவையும், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செலுத்தவேண்டிய அபராதம் மற்றும் இந்திய பயணத்திற்கான விமான கட்டணத்தையும் செலுத்த முன்வந்தனர். 

இந்திய தூதரக அதிகாரிகள் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதுவரை அவரை அங்குள்ள மருத்துவமனையில் வைத்திருக்க இந்திய தூதரக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Wednesday 18 December 2013

கிட்லருக்கே தண்ணி கட்டிய நேதாஜி !!



ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரைச் சந்திக்க பெர்லின் சென்றிருந்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஹிட்லரின் மாளிகையில் அவரது உதவியாளர்கள் நேதாஜியை வரவேற்று அழைத்துக் கொண்டுபோய் ஓர் அறையில் உட்காரச் சொன்னார்கள். அங்கிருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் சுபாஷ் சந்திரபோஸ்.

யாரையும் அவ்வளவு எளிதில் நம்பவோ, சந்திக்கவோ மாட்டாராம் நாஜிகளின் தலைவரான அடால்ப் ஹிட்லர். தன்னைப் போலவே உருவமுள்ள மூன்று, நான்கு டூப்புகளை எப்போதும் தன்னைச் சுற்றி வைத்திருப்பாராம். சுபாஷ் சந்திரபோஸ் அமர்ந்திருந்த அறைக்கு அடால்ப் ஹிட்லர் போன்ற தோற்றமுடைய டூப் ஒருவர் வந்தார்.

அங்கிருந்த ஏதோ ஒரு பொருளைக் காட்டி அதை வேறு இடத்தில் மாற்றி வைக்கும்படி அங்கிருந்த அதிகாரி ஒருவருக்குக் கட்டளை இட்டுவிட்டு அகன்றார் அவர். எந்தவிதச் சலனமுமில்லாமல் நேதாஜி அதைப் பார்த்தும் பார்க்காமல் தனது புத்தகத்தில் மூழ்கி இருந்தார். ஹிட்லர் போலவே தோற்றமுள்ள இரண்டு, மூன்று டூப்புகள் அந்த அறைக்கு வந்தார்கள்.

ஒருவர் நேதாஜியின் எதிரிலேயே அமர்ந்தார். அப்போதும் சலனமே இல்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டார் நேதாஜி. வேறொருவராக இருந்தால், ஹிட்லர் என்றாலே பயத்தில் நெளிவார்கள். எழுந்து நின்று சல்யூட் அடிப்பார்கள். குனிந்து வணங்குவார்கள். வந்திருந்த நபர் புன்னகை புரிந்துவிட்டு அகன்று விடுவார்.

எதையுமே சட்டை செய்யாமல் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் அந்த இந்தியரைப் பார்த்து ஹிட்லரின் உதவியாளர்களும், உளவுத் துறையினருமே வியப்பில் ஆழ்ந்து விட்டனர். இவற்றைப் பற்றி ஹிட்லரிடம் சென்று தகவல் அளித்தனர். கடைசியாக ஹிட்லர் வந்தார். சுபாஷ் சந்திரபோஸின் தோளைத் தொட்டார்.

தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்து விட்டு எழுந்த சுபாஷ் சந்திரபோஸ், “ஹலோ மிஸ்டர் ஹிட்லர்’ என்று கைகுலுக்கத் தனது கரங்களை நீட்டியபோது, அடால்ப் ஹிட்லருக்கே அதிர்ச்சி. “”எப்படி நீங்கள் நான்தான் ஹிட்லர் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள்..? என்று கேட்ட ஹிட்லரிடம், நேதாஜி சுபாஷ்போஸ் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்- எனது தோளில் கையை வைக்கும் தைரியம் வேறு யாருக்கு வரும்..?

ஒரிஜினலுக்கும் டூப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடக் கண்டுபிடிக்கத் தெரியாதவன் போராளியாகவும், தலைவனாகவும் இருக்க முடியாது!” அனைவரும் “ஹெய்ல் ஹிட்லர்!’ என்ற முழக்கத்துடன் சல்யூட் அடித்துக் குனிந்து வணக்கம் தெரிவிக்கும் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், முதன்முறையாகக் குனிந்து வணக்கம் செலுத்தி நேதாஜி சுபாஷ்போûஸ வரவேற்றுத் தனது அறைக்கு அழைத்துச் சென்றார்…!

நன்றி குருவி 

Friday 6 December 2013

தன்னை உணர்ந்தால் பேரின்பம் பெறலாம்!!

 உச்சமான ஆனந்தம் நமக்குள் இருக்கிறது.   

 மனிதன் இதை உணர்வதில்லை.  மாறாக வெளி உலகில் தேடி அலைகிறான். இன்பம் எங்கே எதிலே என்று நிலையில்லாத இன்பத்தைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைகிறான். 

 இன்பம் என்பது வெளியில் இல்லை. தடையற்ற இன்பம், துன்பத்தின் இடையீடு இல்லாத இன்பம் நம் ஆன்மாவில் இருக்கிறது என்ற உண்மை நமக்குத் தெரிவதில்லை. 

 நஷ்டத்தை சந்திக்கும் ஒரு   வணிகன்  , ஏன் அடிக்கடி நஷ்டம் என்ற காரணத்தை தேடி ஆராய்ந்து, லாபத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளைத் தேடுகிறான். 

அதுபோல உலகியல் நாட்டங்களிலும், தேட்டங்களிலும் நிலையான இன்பம் இல்லை. ஒரு கட்டத்தில் நிம்மதி தொலைந்து  போய்விடுகிறது என்பதை உணரும் மனிதன், நிலையான இன்பத்தை பெற வழி என்ன என்பதைத் தேட வேண்டும். 

ஆன்மிகம்தான் அதற்கான வழிமுறை என்பதை உணர்ந்து கொண்டுத் தேட வேண்டும். ஆன்மிகத்தில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். 

ஆசைக்கு அடிமையாகிவிடாமல், திட மனதுடன் ஆன்மிக முன்னேற்றத்திற்கான வழியைத் தேட வேண்டும். இல்லையெனில்  அல்லல் பட வேண்டியதுதான்.  பிறவித் தளையில் அகப்பட்டுக் கொண்டு இறந்தும் பிறந்தும் அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான். 

நீர்க்குமிழி போன்று நிலையற்றது வாழ்க்கை .  

அழுது கொண்டு பாலர் பள்ளி சென்றதும்  . ஆனந்தமாய் கல்லூரி சென்றதும், காதலியுடன் கதைத்ததும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொஞ்சியதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து ஆனந்தப்பட்டதும், நடைதளர்ந்து கட்டிலில் உட்கார்ந்து காலனை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் நினைத்துப் பார்த்தால் - காலக்கடலில் ஒரு சொட்டுக¢கூட வராது  நம் மொத்த வாழ்க்கை.

வழிதவறி வந்து சேர்ந்து விட்டோம் என்று வயதான பின்னால்  வருத்தப்படுவதை விட,  இளவயதில் ஆன்மிகத்தினை வழித்துணையாக கொள்ள வேண்டும்.

ஆத்மாவின் ஆனந்தத்தை உணர்ந்து அனுபவிப்பதற்குதான் அரிதான மானுட பிறவி அளிக்கப்பட்டிருக்கிறது. 

வாழ்க்கையைப் பற்றிய நோக்கும் வாழ்வின் போக்கும் ஆன்மிக வழியில் அமையுமானால் அடைய வேண்டிய இலக்கை எளிதாக அடைந்து விடலாம் என்றுதான் உபநிடதங்கள் உரைக்கின்றன. 

 நான் ஆன்மா. தூய ஆன்மா. நான் உடம்பு அல்ல. நான் ஆன்மிக மயமானவன் என்று மனத்துக்கு ஓயாமல் உபதேசித்துக் கொண்டிருக்க வேண்டும்.   ஆனாலும்..

 உடல் நலம் வேண்டும் என்னும் பிரார்த்தனையோடு தொடங்குகிறது கதோபநிஷத்.  ஏன் அப்படி? 

 உபநிடதங்களின் ஒப்பற்ற உள்ளீடு எல்லாவற்றுக்கும் மேலான எல்லையற்ற ஆன்மாவைப் பற்றியது என்றாலும் உடல் நலம் காப்பது பற்றிய பிரார்த்தனையோடு தொடங்குகிறதே கதோப உபநிஷத்.

   ஏன் அப்படி?

உடம்பு என்னும் கருவியைக் கொண்டுதான் உறுபொருளான தெய்வீகத்தை உணர முடியும். எனவே உடம்பினை ஓம்புதல் அவசியம்.  அதனால் தான் உடல் நலம் வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தொடங்குகிறது கதோபநிஷத். 

உடலைப் பேண வேண்டும். உடலைக் கொண்டே முயன்று , “நான் உடல் அல்ல” என்று உணர வேண்டும்.  தன் உடலுக்குள்ளே ‘தான்’  இருப்பதை உணர வேண்டும்.    அப்படித் தன்னை உணர்ந்தால், பேரானந்தத்தை உணரலாம். 





 ப. முத்துக் குமாரசுவாமி
     


      

நாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆட்சி முறை!!


நமது நாட்டை சமீப காலமாக சீரழித்து வரும் போலி மதச்சார்பின்மை மற்றும் குடு்மப ஆட்சி முறை குறித்து, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலும், அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் கவர்னருமான எஸ்.கே.சின்கா டெக்கான் குரோனிக்கில் நாளிதழில் எழுதியுள்ளார்.

சின்கா தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது: மதசார்பின்மை என்பது ஐரோப்பிய முறையாகும். அரசில் தேவாலயங்களின் ஆதிக்கம் ஏற்படக் கூடாதென்பதற்காக உருவாக்கப்பட்ட முறை. 

ஒரே மதம் உள்ள ஐரோப்பிய நாடுகளில், அந்த மதத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் அத்தகைய மதசார்பின்மை கொள்கையை நமது தலைவர்கள், அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதலில் ஏற்றுக் கொண்டனர். 

நமது அரசியலைமைப்புச் சட்டத்தில மதசார்பின்மை என்ற வார்த்தை முதலில் கிடையாது. பின்னர் இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் இது சேர்க்கப்பட்டது.

மதச்சார்பின்மை என்றால் என்ன?:

மகாத்மா காந்தியை பொறுத்தவரையில் மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதே ஆகும். இத்தகைய எண்ணமே அவரை நமது மிகப் பெரிய தலைவராக எடுத்துக் காட்டியது. 

அதே சமயம் நேருவின் மதசார்பின்மை கொள்கையானது மத ஆதிக்கம் இல்லாத அரசு என்ற ஐரோப்பிய கொள்கையாக இருந்தாலும், பிரிவினை காரணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எவ்வித மனக்குறையும் ஏற்பட்டு விடக் கூடாது; 

இந்தியாவில் தாங்களும் சமமான குடிமக்களே என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்; தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கருதி விடக்கூடாது என்ற அடிப்படையில் இருந்தது.

நேரு ஆட்சிக் காலத்தில் மதக் கலவரம் எதுவும் நடந்ததில்லை; எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லாத, ஹஜ் யாத்திரைக்கு மானியம் வழங்கும் திட்டம் இந்தியாவில் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. 

இஸ்லாமியர்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட திட்டமாக அது இருந்தது. ஓட்டுக்களைப் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமல்ல; ஏனென்றால், இஸ்லாமியர்களின் ஆதரவு இருந்தாலும் இல்லா விட்டாலும், நேருவும் அவருடைய கட்சியும் வெற்றி பெறும் சூழல் அப்போது நிலவியது.

இஸ்லாமியர் நிலை: பிரிவினைக்கு காரணமான இரு நாடுகள் கொள்கைக்கு தாங்கள் பலியாகி விட்டதை இஸ்லாமியர்கள் உணர, நேருவின் இந்த சலுகைகள் காரணமாக அமைந்தன. 

இந்த உண்மை நிலையை உணர்ந்த இஸ்லாமியர் இடையே மத வேறுபாடும் கசப்புணர்வும் குறைய ஆரம்பித்தது. இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த நடிகர்களான மெஹருனிஷாவும், யூசுப் கானும் தங்களின் பெயர்களை மீனா குமாரி எனவும் திலீப் குமார் எனவும் மாற்றி கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் தங்களை மத அடையாளத்தை, பிரிவினைக்கு முன் இருந்தததை விடவும் கூடுதலாக காட்டிக் கொள்ள தயங்குவதில்லை. 

இந்தியாவின் பெரும்பான்மை சமுதாய கலாச்சாரத்துடன் தொடர்புடைய நமது தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய பாடல் உள்ளிட்டவைகளை ஏற்றுக் கொள்ள, அன்றைய இஸ்லாமியர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

ஆனால் இன்று இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுமானால், மதச்சார்பின்மை என்று கூறிக் கொள்ளும் சக்திகளிடமிருந்தும், அடிப்படை மதவாத சக்திகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்.

தடம் மாறிய மதச்சார்பின்மை:

நேரு போன்று இல்லாமல், இந்திரா மத நம்பிக்கையற்றவராக இருக்கவில்லை; மதச் சடங்குகளை கடைப்பிடித்தார். அவரது மதசார்பின்மை ஓட்டு வங்கியை உருவாக்குவதையே மையமாகக் கொண்டிருந்தது. 

நேரு காலத்தில், அரசு செலவில் இப்தார் விருந்து நடத்தப்பட்டதில்லை. ஆனால் தற்போது வரிந்து கட்டிக் கொண்டு நடத்துகின்றனர். மற்ற எந்த மதத்தின் விழாவையும் இது போன்று அரசு சார்பில் கொண்டாடுவதில்லை. 

தேசிய பாதுகாப்பும், தேசிய நலனும் போலி மதசார்பின்மைவாதிகளால் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது. வங்கதேசத்தில் இருந்து அசாமில் சட்ட விரோதமாக குடியேறுவது, ஓட்டு வங்கிக்காக ஊக்குவிக்கப்படுகிறது. 

காஷ்மீரிலும் ஜிகாதி பயங்கரவாதிகளுக்கு எதிராக மென்மையான போக்கே கடைபிடிக்கப்படுகிறது. அதேசமயம் காஷ்மீரில் வாழும் பண்டிட்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான இந்து கோயில்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, 20 ஆண்டு ஆன பின்னரும் இன்றும் ஒரு பிரச்னையாக இருக்கிறது.

எது மதவாதம்?: 

இஸ்லாமிய தலைவர்கள் பலரைக் கொண்டுள்ள பா.ஜ.,வை மதவாத கட்சியாக ஒதுக்கி வைத்து, தீண்டத்தகாத கட்சியாக நடத்துகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மதவாதக் கொள்கையைக் கொண்டுள்ள முஸ்லீம் லீக், மஜ்லிஸ் இ லிதிஹதுல் முஸ்லீமின், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கட்சி போன்றவற்றை, மதசார்பின்மை பற்றி பேசும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேர்த்துக் கொண்டு கவுரவிக்கிறது. 

பிரதமர் மன்மோகன் சிங்கோ அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, இஸ்லாமிய இனத்தவர்களின் வளர்ச்சிக்கே தனது ஆட்சியில் முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவிக்கிறார். 

அவருக்கு இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் பற்றியோ அவர்கள் பின்தங்கி இருப்பது பற்றியோ கவலையில்லை. 2008ம் ஆண்டு டில்லியின் துவாரகா பகுதியில் ரூ.22 கோடி அரசு செலவில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. 

அதே ஆண்டு அமர்நாத் ஆலய நிர்வாகத்திற்கு ரூ.2.2 கோடிக்கு குத்தகைக்கு விடப்பட்ட, வெறுமையாக கிடந்த 100 ஏக்கர் வனப்பகுதி, மதவாதிகளைத் திருப்தி செய்வதற்காக திரும்பப் பெறப்பட்டது. 

போலி மதசார்பின்மை பேசுபவர்களின் போக்கை விவரிக்க இது போன்று பல உதாரணங்களைக் காட்ட முடியும். உண்மையான மதசார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி வழங்குவது; எவரையும் திருப்தி செய்ய முயலாதது.

குடும்ப ஆட்சி முறை:

நமது நாட்டின் மற்றொரு துயரம், பரம்பரை ஆட்சி முறையை நோக்கிச் செல்வதாகும். இது ஜனநாயக ஆணி வேரை அழி்த்து, அரசியலில் பிரபுத்துவ முறையைக் கொண்டு வர வழி வகுக்கிறது. 

ஆளும் குடும்பத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்காக, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டன. 

குடும்பத்தாரால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தாரையே கொண்ட ஆட்சி முறையால், நாடு பல்வேறு பாதிப்புக்களை சந்திக்க இருக்கிறது. இந்த பரம்பரை ஆட்சிமுறை நோய், புற்றுநோய் போன்று மற்ற அரசியல் கட்சிகளிடையேயும் பரவி உள்ளது.

இதை விட மிகவும் மோசமானது என்னவென்றால், இந்த பிரபுத்துவ கலாச்சாரம், ஆட்சியாளர்களை மட்டுமல்ல, அதிகாரிகளையும் ஆட்டுவிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட தற்போது மிகவும் அடிமைப்பட்டவர்களாக அதிகாரிகள் உள்ளனர். 

சமானிய மக்களும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை விடவும் அதிக அளவில் அதிகார ஆணவத்தால் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரம்பரை ஆட்சி முறை, முகஸ்துதி மற்றும் இடைத் தரகர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. 

ஆட்சியாளர்கள் அதிகார போதை காரணமாக, அனைத்தும் தங்களின் தலைமையில் நடக்கிறது என்ற எண்ணத்துடன் துணிச்சலாக செயல்படுகின்றனர். ஆட்சியாளர்கள் தவறே செய்யமாட்டார்கள்; 

அவர்கள் செய்வதெல்லாம் சரியானவையே என்ற போக்கும் உருவாகி உள்ளது. இந்த பரம்பரை ஆட்சி அதிகாரத்தை மீறி, நியாயமாக செயல்படும் துர்காசக்தி நாக்பால் போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். 

பிரபுத்துவ ஆட்சி முறையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்போ, ஒரு அமைச்சரின் தனிப்பட்ட பொறுப்பிற்கோ மதிப்பில்லை. ஒரு திட்டத்திற்கு ஒரு அமைச்சர் ஒப்புதல் கொடுத்து, எழுத்துபூர்வமாக அங்கீகரித்த பிறகு, அந்த திட்டம் தவறென கருத்ப்பட்டால், அதற்காக அமைச்சரைத் தண்டிப்பதில்லை; அதிகாரிகளே தண்டிக்கப்படுகின்றனர். இதற்கு விதிவிலக்காக திகழ்ந்தவர் லால் பகதூர் சாஸ்திரி மட்டுமே.

ராகுல் நடத்திய நாடகம்:

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கிரிமினல் அரசியல்வாதிகள் தொடர்பான அவசர சட்டத்தை நியாயப்படுத்தி பத்திரிக்கையாளரிடையே பேசிக்கொண்டிருந்தபோது, கட்சியின் துணைத்தலைவர் ராகுல் திடீரென நுழைகிறார்; தனது கட்சி சகாக்களால் கொண்டு வரப்பட்ட அவசரசட்டத்தை முட்டாள் தனமானது என விமர்சித்து, அதை கிழித்தெறிய வேண்டும் என்கிறார். முகஸ்துதி பாடும் காங்கிரஸ் கட்சியினர் அந்த நொடியிலேயே தங்கள் மனதை, பச்சோந்தி போல் மாற்றிக் கொள்கின்றனர். 

இளைய தலைவருக்கான ஜால்ரா ஓசை உச்சகட்டத்தை எட்டுகிறது. ஏன் இவ்வாறு செய்யப்பட்டது? எந்த சூழ்நிலையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது என்றெல்லாம் எவரும் கவலைப்படவில்லை. 

அந்த அவசர சட்டம், காங்கிரசின் உயர்மட்ட குழுவால் ஒப்புதல் பெறப்பட்டு, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவராலும் ஏற்கப்பட்ட ஒன்று. இதையெல்லாம் நன்கு அறிந்த ராகுல், அப்போது கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததால், அந்த அவசர சட்டத்தை அவரும் ஆதரிப்பதாகவே கருதப்பட்டது.

அப்படி இருக்கும்போது ராகுல் தாமதமாக எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்? அந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி தயக்கம் காட்டியதும், அதில் கையெழுத்திடக் கூடாதென ஜனாதிபதியை எதிர்கட்சிகள் வற்புறுத்தியதும், மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால பாமர மனிதனின் இத்தகைய எண்ணங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை.

நாடு விடுதலை பெறுமா?

மகாத்மா காந்தி, அடிமை மனப்போக்கிலிருந்து நாட்டை மீட்டு, கவுரவமான உயர் நிலையும் சுதந்திரமும் பெற உதவினார். 2014 லோக்சபா தேர்தலில் எத்தகைய முடிவு ஏற்படும் என்று இப்போது கூற முடியாது; இருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த போலி மதச்சார்பின்மை மற்றும் பிரபுத்துவ ஜனநாயக முறையிலிருந்து நாட்டை விடுவிப்பார்கள் என நம்புவோமாக.

Wednesday 4 December 2013

காஷ்மீர் பிரச்சனையும் தீர்வும்!!

காஷ்மீர் பிரச்சனை பிரிவினையில் உருவான பிரச்சனையோ அல்லது மத அடிப்படை கொண்ட பிரச்சனையோ அல்லவென்றும், அது ஓர் அரசியல் பிரச்சனைதான், அதற்கு அரசியல் ரீதியாக, சுய ஆட்சி வழங்குவதன் மூலம் தீர்வு காண முடியும் என்று கூறுகிறார் இரா. செழியன்.

1962 முதல் 25 ஆண்டுக்காலம் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இரா. செழியன், நமது நாடு கண்ட மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராவார். 

காஷ்மீர் பிரச்சனையை அறிந்தவர் என்பது மட்டுமல்ல, அப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் ஆழமாக விவாதித்தவர். காஷ்மீர் பிரச்சனை அதிகபட்ச கவனத்தை ஈர்த்துள்ள இந்த நேரத்தில் வெப்உலகம்.காமிற்கு விரிவான பேட்டியை அளித்தார் இரா. செழியன். 


கேள்வி : முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரம் காட்டி வருகின்றன. காஷ்மீர் பிரச்சனை குறித்து மிக ஆழமாக அறிந்துள்ள தாங்கள், இந்த பேச்சுவார்த்தை குறித்து என்ன கூறுகிறீர்கள்?

இரா. செழியன் : 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு உருவாகியுள்ள மாறுபட்ட சூழ்நிலை, அமைதி வழியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. 

இந்த பேச்சுவார்த்தை சரியானதுதான். அதைவிட முக்கியம், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியின் இரு பக்கங்களிலும் உள்ள காஷ்மீரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேச வழியேற்படுத்திட வேண்டும். 

அந்த விதத்தில், ஸ்ரீநகரில் இருந்து முசாஃபராபாத்திற்கு பேருந்து விடப்பட்டது ஒரு நல்ல முன்னேற்றமாகும். 

ஆனால், இந்த பேச்சுவார்த்தை எந்த அடிப்படையில் நடத்தப்படப் போகிறது என்பது முக்கியமானதாகும். 

கேள்வி : காஷ்மீர் மக்களின் ஏகோபித்த தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவை நன்கு அறிந்தவர் நீங்கள். காஷ்மீர் பிரச்சனை என்பதுதான் என்ன?

இந்திய – பாகிஸ்தான் பிரிவினையில் உருவாகி இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ள ஒரு பிரச்சனையாகவே காஷ்மீர் சிக்கலை பலரும் பார்க்கின்றனர். அது உண்மையல்ல.

இந்திய விடுதலைப் போராட்டம் நடந்தபோது, காஷ்மீர் விடுதலைப் போராட்டமும் நடந்தது. வெள்ளையனை வெளியேற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடந்த போது, நாட்டு விடுதலைக்காகவும், அதே நேரத்தில் மன்னர் ஆட்சியிலிருந்து விடுபட்டு மக்களாட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் காஷ்மீரில் போராட்டம் நடந்தது. அதற்கு தலைமையேற்றவர் ஷேக் அப்துல்லா. 

1931 ஆம் ஆண்டு முஸ்லீம் மாநாடு என்கின்ற கட்சியைத் துவக்கி காஷ்மீரை ஆண்டு வந்த மன்னர் ஹரி சிங்கை எதிர்த்து போராடத் துவங்கினார் ஷேக் அப்துல்லா. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அன்று மக்கட்தொகையில் பெரும்பாலோர் முஸ்லீம்களே. ஆனால், அப்பகுதியை ஆண்டது டோக்ரா வம்சத்து இந்து அரசரான ஹரிசிங். எனவே அங்கு மக்களாட்சி ஏற்படவேண்டும் என்று போராடிய ஷேக் அப்துல்லா, இந்துக்களும் தனது மக்களாட்சிப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்கின்ற எண்ணத்தில், 1939ல் முஸ்லீம் மாநாடு இருந்த தனது கட்சியின் பெயரை தேசிய மாநாடு என்று மாற்றினார்.

ஷேக் அப்துல்லாவை மத ரீதியான அரசியல் நடத்தியவர் யாரும் கருத முடியாது. அதே போல, இந்தியாவில் இருந்து காஷ்மீரின் விடுதலைக்காக அவர் போராடியதாகவும் கருதுகின்றனர். சில அரசியல்வாதிகளும் அப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்கின்றனர். 

தமது கட்சியின் பெயர் முஸ்லீம் மாநாடு என்று இருந்ததை, தேசிய மாநாடு என்று மாற்றினார். அவர் ஒரு மத ரீதியான அரசியல் நடத்தவில்லை என்பதற்கு இது அத்தாட்சியாகும். 

காஷ்மீரில் ஜனநாயக ஆட்சி ஏற்பட வேண்டும் என்றே விரும்பிய ஷேக் அப்துல்லா, அது மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என்றும் விரும்பியவர். 

1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்று நடத்தப்பட்ட காங்கிரசின் போராட்டத்தை ஒட்டி காஷ்மீரில் தலைமையேற்று நடத்தியவர் ஷேக் அப்துல்லா. 

ஆனால் ஒரு வித்தியாசம். அவர் நடத்திய போராட்டம் வெள்ளையர் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியது மட்டுமின்றி, காஷ்மீரில் இருந்து மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற இரண்டாவது இலக்கையும் முன்வைத்து நடத்தப்பட்டது.

பிரிவினைக்குப் பிறகு…

1947 ஆம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாக விடுதலை பெற்றபோது காஷ்மீரை ஆட்சி செய்த மன்னர் ஹரி சிங், உடனடியாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடவில்லை. 

1947 ஆம் ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானிலிருந்து பழங்குடியினரை அந்நாட்டு அரசு தூண்டிவிட்டு அவர்கள் யூரி வரை ஆக்கிரமித்தவுடன், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜம்முவிற்கு ஓடிவந்த மன்னர் ஹரி சிங், இந்திய அரசின் உதவியை நாடினார். 

(பழங்குடியினர் காஷ்மீருக்குள் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு ஸ்ரீநகரை நெருங்கிவிட்ட போது, பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த காஷ்மீரிகள் மத்தியில் ஷேக் அப்துல்லா பேசியது)

மன்னர் ஹரி சிங்கின் கோரிக்கைக்கு செவிசாய்த்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதலில் ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும், ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்தவுடன் அம்மாநிலத்தின் பிரதமராக ஷேக் அப்துல்லாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். 

அதனை ஏற்றுக்கொண்டுதான் மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆனது. அதன் பிரதமராக ஷேக் அப்துல்லா பொறுப்பேற்றார். 

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது எல்லைப் பகுதியில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனால், காஷ்மீர் எல்லைப் பகுதியில் அப்படிப்பட்ட வன்முறை ஏதும் நிகழவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஷேக் அப்துல்லா. 

எனவே, பிரிவினை ஷேக் அப்துல்லாவின் நோக்கம் அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர் நேரு, அந்த மாநிலத்திற்கு என்று தன்னாட்சி உரிமை வழங்க உறுதியளித்தார். இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 370 உருவாக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. 

இணைப்பின் போது நேரு அளித்த அந்த உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டிருந்தால், காஷ்மீர் ஒரு பிரச்சனையாக ஆகியிருக்காது. 

ஆனால், ஐந்தாண்டு காலத்திற்குப் பிறகு, அதாவது 1952 பொதுத் தேர்தலை சந்தித்து காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் அதன் ஆட்சி ஏற்பட்டவுடன் ஷேக் அப்துல்லாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. 

1942 ஆகஸ்ட் 8 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லா, 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நள்ளிரவு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமின்றி, சிறையிலும் அடைக்கப்பட்டார். 

எதற்காக இந்த முடிவு? அவர் காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கோரினார். தம்முடைய நிலையை நேரில் விளக்குவதாகவும் கூறினார். ஆனால், அவரிடம் விளக்கம் எதையும் கேட்காத நடுவன் அரசு சிறையில் அடைத்தது. 1953 முதல் 1968 வரை பெரும்பாலான காலங்களில் ஷேக் அப்துல்லா சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார். 

(காஷ்மீர் பிரச்சனையின் மீது 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி மக்களவையில் இரா. செழியன் பேசியது)

1975 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும், ஷேக் அப்துல்லாவிற்கும் ஒர் உடன்பாடு ஏற்பட்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றார். 

ஆனால், அந்த இடைப்பட்ட ஆண்டுகளில், தங்களுடைய தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதும், தாங்கள் எதிர்பார்த்த தன்னாட்சி உரிமை சுதந்திர இந்தியாவில் மறுக்கப்பட்டதும் காஷ்மீர் மக்களை அந்நியப்படுத்திவிட்டது. 

நேருவின் காலத்திலேயே காஷ்மீர் பிரச்சனைக்கு சுலபமாக தீர்வு கண்டிருக்க முடியும். நேருவிற்கு அப்படிப்பட்ட ஆர்வம் இருந்தது என்றும், ஆனால் எதையும் கடினமான வழியில் தீர்க்க விரும்பும் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அதற்கு இணங்காததால் ஷேக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் கூறப்படுவதுண்டு. 

ஆக, காஷ்மீரில் ஜனநாயக, மதச்சார்பற்ற ஆட்சி ஏற்படவேண்டும் என்று ஷேக் அப்துல்லா கண்ட கனவை முழுமையாக புரிந்துகொண்டு மத்திய அரசு நடந்துகொண்டிருந்தால் இன்று வரை இப்பிரச்சனை நீடித்திருக்காது. 

கேள்வி : காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவின் அரசியல் போக்கு பிரிவினையை நோக்கியதாகவே இருந்தது என்று கூறப்படுகிறதே?

செழியன் : அது உண்மையல்ல. 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தபோது, ஷேக் அப்துல்லாவின் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும் ஈடுபட்டது, இந்திய சுதந்திர வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும். 

காங்கிரஸ் நடத்திய வெள்ளையனே வெளியேறு போராட்டம் பொதுவாக இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில்தான் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. 

ஆனால், சமஸ்தானங்கள் என்றழைக்கப்பட்ட மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அந்த அளவிற்கு போராட்டங்களைக் காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை. லேசான எதிரொலி மட்டுமே இருந்தது. 

காங்கிரஸ் கட்சி நடத்திய மாநாடுகள் கூட வெள்ளையரின் (கவர்னரின்) ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்தான் நடத்தப்பட்டதே தவிர, மன்னர் ஆட்சி நடந்த மைசூரிலோ, திருவதாங்கூரிலோ அல்லது ஹைதராபாத்திலோ நடத்தப்படவில்லை.

ஆனால், வெள்ளையனே வெளியேறு போரட்டம் நடந்தபோது அதில் பங்கேற்ற ஷேக் அப்துல்லா, காஷ்மீரில் இருந்து வெளியேறு (Quit Kashmir) என்று அன்றைக்கு ஜம்மு-காஷ்மீரை ஆண்ட மன்னர் ஹரிசிங்கை எதிர்த்து முழக்கம் வைத்தார் என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டேன்.

இந்து அரசருக்கு எதிரான போராட்டம் என்றாலும், அதனை மத அடிப்படையில் ஷேக் அப்துல்லா நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் அரசியல் ஜனநாயக உரிமையின் அடிப்படையிலேயே அந்தப் போராட்டத்தை நடத்தினார்.

எனவே, மத அடிப்படையில் காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்று ஷேக் அப்துல்லா நினைக்கவில்லை. 

மத உணர்வுடன் காஷ்மீர் பிரச்சனையை அவர் பார்த்திருந்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் நூற்றக்கு 90 விழுக்காடு இஸ்லாமியர்களைக் கொண்டிருந்த காஷ்மீர் பகுதி நாட்டுப் பிரிவினையின் போது பாகிஸ்தானுடன் இணைந்திருக்கக் கூடும். 

ஆனால், மதச்சார்பற்ற தன்மையைக் கொண்ட ஷேக் அப்துல்லாவும், தேசிய மாநாடும் 1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது இரண்டு பகுதிகளில் ஒன்றில் இணைய வேண்டும் என்ற நிலை தோன்றியபோது, தீர்க்கமாகவும், தெளிவாகவும் இந்தியாவுடன் சேர்வதென்றே முடிவெடுத்தார். அவருடைய தலைமையை ஏற்ற காஷ்மீரி மக்களும் இந்தியாவுடனேயே நின்றனர்.

ஷேக் அப்துல்லா இவ்வாறு நினைத்ததற்கு காரணம், காஷ்மீரில் மக்கள் ஆட்சி ஏற்படவேண்டுமெனில் அதற்கு இந்தியாவே உகந்ததாக இருக்கும் என்று தெளிவாக அறிந்திருந்தார். அதனை நேருவிற்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி : அவ்வாறெனில், காஷ்மீர் பிரச்சனையாகக் காரணம்?

செழியன் : 1947 அக்டோபரில் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தபோது ஒப்புக்கொள்ளப்பட்டபடி, காஷ்மீருக்கு என்று தனி அந்தஸ்து அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டது மட்டுமின்றி, அதற்கென்று தனி அரசியல் சட்டமும் (Constitution) இருந்தது.

அந்த இரண்டு நிலையும், அதாவது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு அந்தஸ்து, தங்களுடைய ஆட்சிமையை உறுதி செய்யக்கூடிய தனி அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை அப்படியே நீடிக்கவிட்டிருந்தால், காஷ்மீர் பிரச்சனையும் தோன்றியிருக்காது. 

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பும் (Federal Set up) பலப்பட்டிருக்கும். இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு-காஷ்மீரும் நாட்டுடன் வலிமையாக ஒன்றிணைந்திருக்கும்.

ஆனால், நான் முன்பே கூறியபடி, 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆட்சி அமைந்தபிறகு அதன் போக்கு மாறியது.

கூட்டாட்சி அமைப்பை பலப்படுத்துவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை. மத்திய ஆட்சியின் வலிமையை அதிகரிக்கச் செய்வதிலேயே கவனம் செலுத்தியது. 

ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய தேவைகளுக்கு இணங்க, திட்டங்களைத் தீட்டி, அதன் பலன்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய மேற்கொண்ட நிர்வாக முயற்சிகளுக்கு மத்திய அரசு நிதி-அதிகார ரீதியாக ஆதரவு அளிக்கவில்லை.

இதனை ஒரு புதிய கோணத்திலும் பாருங்கள்…

1947 ஆம் ஆண்டு நாம் விடுதலை பெறும் வரை, நாட்டில் நிலவிய வறுமை, ஏழ்மை, பட்டினி ஆகியவற்றிற்கெல்லாம் வெள்ளையர் ஆட்சியையே காரணம் காட்டினோம். 

ஆனால், அதற்குப் பிறகும் ஏழ்மையும், பட்டினியும், இல்லாமையும் சற்றும் குறையாததால் மத்திய அரசிடம் குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது.

மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. பொதுநலம், வேலை வாய்ப்பு, வாழ் நிலை ஆகியவற்றை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன்களும் சாதாரண மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

அதனால்தான், சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. 1962 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஏகபோக செல்வாக்கு குறைந்தது. மாநில உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின.

இந்த உணர்வு தேசிய உணர்விற்கு எதிரானதாக இருக்கவில்லை. அதனால்தான் 1962 ஆம் ஆண்டு சீனா படையெடுத்தபோது, அன்று பிரிவினையைக் கொள்கையாகக் கொண்ட தி.மு.க. அதனை தள்ளிவைத்தது. எனவே, மாநிலங்களின் உரிமையும், தேசிய ஒருமைப்பாடும் ஒன்றுக்கு ஒன்று எதிரானதாக இருக்கவில்லை.

அதேபோல, மைனாரிட்டிகள் பிரச்சனையும் எழவில்லை. பல்வேறு மாநிலங்களில் எழுந்த உரிமைப் பிரச்சனைகள், உணர்வுகள் எல்லாம் பொருளாதார சுதந்திரமின்மையால் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாததால் எழுந்தவையே ஆகும். 

அத்தகையப் பிரச்சனைகளை, வேறுபாடுகளை, தகராறுகளை காங்கிரஸ் கட்சி தீர்க்கத் தவறியது.

எடுத்துக்காட்டாக, 1956ல் மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, பல இடங்களில் மாநில எல்லைப் பிரச்சனைகள் உருவானது. மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான பெருபாரியைப் பிரித்து கிழக்கு பாகிஸ்தானுக்கு தந்தது பிரச்சனையானதை அடுத்து, அப்பொழுது அங்கு காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த டாக்டர் பி.சி. ராய், சுதந்திர நாளை கொண்டாட மாட்டோம் என்று அறிவித்தார்.

தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் இடையில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் பிரச்சனையாயின. இதேபோல, கர்நாடகத்திற்கும், மகராஷ்டிரத்திற்கும் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டது. 

ஆனால், அப்பிரச்சனைகளுக்கு அன்றே நேரடியாக தீர்வு காண்பதை விட்டுவிட்டு, கட்சியியுனுடைய அமைப்புக்களின் வாயிலாக தீர்வு கண்டிட மத்திய அரசு முயன்றது. விளைவு : மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனைகள் பல இன்று வரை நீடிக்கின்றன.

கோவா பேர்ச்சுகீசிய ஆதிக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவுடன் அதனை மராட்டியத்துடன் இணைக்கும் முயற்சி நடந்தது. அதற்கு மராட்டிய கோமந்தக் கட்சி (MGP) போராட்டமும் நடத்தியது. 

ஆனால், அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தாங்கள் தனித்து, தனி மாநிலமாகவே இருக்க விரும்புவதாக அந்த மாநில மக்கள் வாக்களித்துவிட்டனர்.

இதேபோல, மைய, மாநில உறவுகளை காங்கிரஸ் ஆட்சி செம்மைபடுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். 

ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வைக்காததால், ஏக கட்சி ஏக ஆட்சி என்று அதன் அணுகுமுறை இருந்ததால் பிரச்சனைகள் பெரிதாகிவிட்டன.

காங்கிரஸ் ஆட்சியின் இந்த அணுகுமுறையின் எதிர் விளைவாகவே பல மாநிலங்களில் வலிமையான தலைமைகள் உருவாக ஆரம்பித்தன. மாநிலப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தோன்றிய கட்சிகள் செல்வாக்கு பெற ஆரம்பித்தன.

சிவ சேனையின் அடிப்படை என்ன? மாநில உரிமைகள்தானே?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எப்படி மைய அரசிற்கு அதிக அதிகாரம் உள்ளதோ, அதேபோல காங்கிரஸ் கட்சி அனைத்து அதிகாரத்தையும் தன் கையிலேயே வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.

காங்கிரஸின் இப்படிப்பட்ட போக்கினால்தான், பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையைப் போல, டெல்லி தங்களை புறக்கணிக்கிறது என்ற எண்ணம் ஷேக் அப்துல்லாவிற்கு வந்தது. 

தங்களுடைய மக்களின் நலன்களை காக்கும் உரிமையற்று ஆட்சியில் நீடிப்பது ஷேக் அப்துல்லாவிற்கு கசப்பைத் தந்தது. அதுவே அவர் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தத் தலைப்பட்டார்.

எனவே, கொள்கை ரீதியாக வலுவான கூட்டாட்சியின் தேவையை காங்கிரஸ் கட்சி உணரத் தவறியதால்தான் காஷ்மீர் பிரச்சனை வலிமை பெறக் காரணமானது.

கேள்வி : இன்றைய நிலையில் காஷ்மீர் பிரச்னையை மத ரீதியான விடுதலைப் பிரச்சனையாக பார்க்கப்படுவது எந்த அளவிற்கு சரி?

செழியன் : காஷ்மீர் பிரச்சனை ஒரு அரசியல் பிரச்சனையே. அதனை மதப் பிரச்சனையாகக் கருதக்கூடாது. அவ்வாறு பார்ப்பது தவறானது.

வளம் மிக்க இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்தும் அங்கு வறுமை தலைவிரித்தாடியது. வறுமையை ஒழித்து அவர்களின் வாழ் நிலையில் முன்னேற்றம் காண நாம் உதவவில்லை. விளைவு : அடிப்படை வாழ்க்கை பிரச்சனை வேறொரு வடிவத்தை தாங்கி வெளிப்படுகிறது. அவ்வளவுதான்.

விடுதலை பெறுவதற்கு முன்னர், 1946 ஆம் ஆண்டு அரசியல் சட்ட அவையில் பேசிய நேரு, எதிர்கால இந்தியாவில் இணையும் மாகாணங்கள் ஒவ்வொன்றும் அதன் வரலாற்று அடிப்படையில் அமையப் பெற்று தன்னாட்சிப் பெற்றதாகவும், இதர அதிகாரங்களைப் பெற்றதாகவுமே இருக்கும் என்று கூறினார் (Autonamous Units with Residual Powers).

ஆனால் நேருவின் உறுதிமொழி சுதந்திரத்திற்குப் பிறகு நிறைவேற்றப்படவில்லை. தன்னாட்சி என்று பேசினாலே பிரிவினைவாதம் என்று காங்கிரஸ் கூறிவிடுகிறது. 

கூட்டாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்வதில் நம்பிக்கையற்ற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது.

ஆங்காங்குள்ள பிரதேசங்களில் உள்ள வாழ்க்கைத் தரம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஏழை-பணக்கார, நகர-கிராம வேறுபாடுகள் போன்றவற்றையெல்லாம் தீர்க்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. உருவான பலன்கள் மக்களைச் சென்று சேரவில்லை.

எனவே, மக்களுக்கு ஏற்படும் அவதிகளே கிளர்ச்சியாக வெடிக்கின்றது. கிளர்ச்சி ஏற்படுவதற்கு மதம் மட்டுமே காரணமாக முடியாது. அப்படிப் பார்த்தால் நமது நாட்டில் பல இடங்களில் அப்படிப்பட்ட கிளர்ச்சிகள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவிய கொடும் வறுமையே கிளர்ச்சியாக வெடித்துள்ளது. அது மதச் சாயத்துடன் தெரியலாம். ஆனால் கிளர்ச்சிக்கு காரணம் மதமல்ல. மக்களின் வறுமை, கல்வியின்மை ஆகியவையே. இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கும், அவர்களின் அருகில் இருக்கும் நிர்வாக அமைப்பின் மூலமே பரிகாரம் காண முடியும். மக்களுக்கு அருகில் உள்ள மாநில அரசுகளின் மூலம் மக்கள் தொடர்புள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம், அவர்களின் வாழ்வுத் தேவைகளை நிறைவு செய்ய மத்திய அரசு தவறியதே பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிட்டது. அதில் முக்கியமானது காஷ்மீர் பிரச்சனை.

அதுமட்டுமல்ல, அவ்வாறு உருவாகும் மக்களின் எழுச்சிகளுக்கு அரசியல் ரீதயாக தீர்வு காண்பதை புறக்கணித்துவிட்டு, அப்படிப்பட்ட கிளர்ச்சிகளை வன்மையாக ஒடுக்க முற்பட்டதும் காஷ்மீர் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிட்டது.

காஷ்மீர், அரசியல் பிரச்சனையாக இருந்த நிலை மாறி மத, விடுதலைப் பிரச்சனையாக உருவெடுத்ததற்கு மத்திய அரசின் இப்படிப்பட்ட தவறான அரசியல் அணுகுமுறை பெரும் காரணமாகும்.

மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் காரணமாக ஜனநாயக அமைப்பு வந்துவிட்டது. ஆனால், அந்த ஜனநாயக அமைப்பிற்கு மக்களை தயார்படுத்தியிருக்க வேண்டும். அதனைச் செய்யவில்லை. காஷ்மீர் பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணம்.

கேள்வி : இதில் பாகிஸ்தான் அதீத அக்கறை காட்டுவது ஏன்?

செழியன் : பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி முறை அல்ல. அங்கு நடைபெறும் இராணுவ – எதேச்சதிகார ஆட்சியால் மக்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களை மறைக்கவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பவுமே காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் அரசு பயன்படுத்துகிறது. அதை ஓர் மதச்சார்பான பிரச்சனையாகவும் காட்டிவருகிறது.

இந்தியாவின் நிலை அவ்வாறு அல்ல. மக்கட்தொகையில் இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா 2வது இடத்தை வகிக்கிறது. நமது அரசு மதச்சார்பற்றது.

கேள்வி : காஷ்மீர் பிரச்சனைக்கு நீங்கள் கூறும் தீர்வுதான் என்ன?

செழியன் : தன்னாட்சிதான் தீர்வு.  காஷ்மீர் பிரச்சனை என்பது அம்மக்களின் அன்றாட வாழ்வு, பொருளாதார நலனை உறுதி செய்யும் உரிமைப் பிரச்சனை. அதனை சரியாகப் புரிந்துகொண்டு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும்.

காஷ்மீருக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூட்டாட்சி முறையில் தேவைப்படும் தன்னாட்சி அதிகாரிகங்கள் அளிக்கப்படவேண்டும். அதுவே ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அதிகாரங்களை மத்தியில் குவித்து வைத்திருப்பதால் எந்தப் பலனும் ஏற்படாது. ஒவ்வொரு ஆண்டும் தங்களின் நிதித் தேவைகளுக்காக மாநில அரசுகள் மத்திய அரசிடம் (திட்ட ஆணையத்திடம்) கையேந்தி நிற்கின்றன. இதுதான் கூட்டாட்சியா?

ஒரு மாநிலத்தின் மேம்பாட்டிற்கு யார் திட்டம் வகுப்பது. மாநில அரசா? அல்லது மத்திய அரசா? இதில் தெளிவு ஏற்படவேண்டும். இல்லையென்றால் இன்னும் பல பிரச்சனைகள் வெடிக்கும்.

உடை மாற்றும் போது!!

சில பேராங்காடிகளில், புகழ் பெற்ற துணிக் கடைகளில் இரகசிய காமிரக்கள் நமக்குத் தெரியாமல் இருக்குமாம். நாம் உடை மாற்றும் போது நம்மைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும் என்று கேள்வி பட்டேன். உண்மையா?




 எல்லாக் கடைகளிலும் இல்லை. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒன்று இரண்டு  இருக்கலாம். அதற்காக எல்லாரையும் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லக் கூடாது. நம்முடைய இந்தியர்களின் கடைகளில் பெரும்பாலும் நல்ல நாணயமான ஊழியர்கள் பணி புரிகிறார்கள். வக்கிரப் புத்தி படைத்த சில சில்லறைகள் அங்கே இங்கே இருக்கத்தான் செய்கின்றன.

ஆடைகளை மாற்றிப் பார்க்கிறேன் என்று பெண்கள் சிலர் விலை உயர்ந்த உள்ளாடைகளை மாற்றிக் கொள்வது உண்டு. பணம் கட்டாமல் கம்பி நீட்டுவதும் உண்டு. அதைத் தவிர்க்க சில நிறுவனங்கள் இரகசியக் காமிராக்களைப் பொருத்தி வைத்து இருக்கின்றன.

பெண்கள் உடைகள் மாற்றுவதைக் காமிராவில் கவனிக்க வேண்டியது சில பெண் ஊழியர்களின் வேலை. காமிராவில் பதிவானது கணினியிலும் பதிவாகும் அல்லவா.

சரி. கணினியில் பதிவானதை அங்கே வேலை செய்யும் மற்ற ஆண்களும் அவர்களுடைய வசதியைப் போல பார்க்கலாம் இல்லையா.  

நீங்கள் ஆடை மாற்றும் அறைக்குள் நுழைய கதவைத் திறந்ததும் இரகசியக் காமிரா வேலை செய்ய ஆரம்பித்து விடும். நீங்கள் உடை மாற்றுவதை வீடியோ படம் எடுக்கும்.

அதன் பிறகு அந்த வீடியோ படங்கள் இணையத்தில் உலா வரலாம். உலகம் பூராவும் உள்ள கைப்பேசிகளுக்குள் தஞ்சம் போகலாம். அந்தக் கயவன் உங்களையே மிரட்டிப் பிணைப் பணம் கேட்டாலும் கேட்கலாம். சரி.

இரகசியக் காமிரா இருப்பதை கண்டு பிடிக்க ஒரு வழி இருக்கிறது. உடை மாற்றும் அறைக்குள் நுழைந்ததும் உங்கள் கைப்பேசியைக் கொண்டு யாரையாவது சும்மா அழைத்துப் பாருங்கள். அழைக்க முடிந்தால் சரி. அந்த அறையில் இரகசியக் காமிரா இல்லை என்று அர்த்தம்.

அழைக்க முடியா விட்டால் தெரிந்து கொள்ளுங்கள் காமிரா இருக்கிறது என்று. இந்த இரகசியக் காமிராவில் Fiber Optic எனும் ஒலி ஒளி நுண்ணிழைகள் உள்ளன. இவை கைப்பேசியின் ஒலி அலைகளை வெளியே போக விடாமல் தடுத்து விடும்.

நம்முடைய மனைவி, பிள்ளைகள், அக்கா, தங்கை, உற்றார் உறவினர் அனைவரிடமும் இந்த வழியைச் சொல்லிக் கொடுங்கள்.

பெண்மையைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. 

நன்றி மலேசிய நண்பன் 

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!!





இந்தியா இந்து நாடு இல்லைதான், ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு மற்ற மதத்தவருக்கும் உரிய இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள்.

இந்து மதம் புராணங்களாலும், இதிகாசங்களாலும், நம்பிக்கைகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஒரு மனிதன், தன் இறைவனை எந்த உருவத்தில் தரிசிக்க, வணங்க விரும்புகிறானோ அந்த உருவத்தை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் இந்த உருவங்களுக்கு, வடிவங்களுக்கு தனித்தனியான தத்துவங்களும், உருவாக்கங்களும், நம்பிக்கைகளும், வணங்குவதற்குரிய மரியாதையும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை சீரழிக்கும் வேலையை சினிமா செய்து வருகிறது.

இந்துக்கள் தாங்கள் வணங்கும் தெய்வ உருவங்கள் மீது எல்லாவற்றையும் தாண்டிய நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் வழியே தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரே விஷயம், நம்பிக்கை. அந்த நம்பிக்கை வழியிலான வாழ்க்கை.

இந்துக்கள் தங்கள் தெய்வங்கள் பற்றி புராணங்கள், இதிகாசங்கள், கதைகள் வழியாக படித்து தெரிந்த கொண்டார்கள். படிக்க முடியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். தெருக்கூத்து, நாடகங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொண்டார்கள். இதன் அடுத்த கட்டமாக வந்த சினிமாவில் அதை நேரடியாகவே பார்த்தார்கள். கருப்பு வெள்ளை காலம் தொட்டு, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் காலம் வரை சினிமா இந்துக்களின் தெய்வங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் தெம்பூட்டுவதாக, உறுதிப்படுத்துவதாக இருந்தது.

ஆனால் எமனுக்கு எமன், அதிசய பிறவி என இறைவனுக்கும் மனிதனுக்குமான தொடர்பை கிண்டல் செய்ய ஆரம்பித்ததிலிருந்து அதன் போக்கு மாற ஆரம்பித்தது. அது சமீபத்தில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் வரை தொடர்கிறது. 

இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?. 

ஒரு மதத்தின் எதிர்காலம் அதன் புனிதம் காப்பதில், நம்பிக்கை காப்பதில் இருக்கிறது

Tuesday 3 December 2013

உமா மகேஸ்வர விரதம்


கோபக்கார முனிவர் துர்வாசர். கோபம் கொண்டால்  ரிஷிகளின் தவ வலிமை குறையும் என்பார்கள். ஆனால் இவரது தவ வலிமையோ கூடுமாம்.  அத்ரி மகரிஷிக்கும்  அனுசூயா தேவிக்கும் ருத்ராம்சமாகப் பிறந்தவர். சிறந்த சிவ பக்தர். 

இவரது சாபத்தால் மகாலக்ஷ்மி , தேவலோகத்திலிருந்து விலகியதால், இந்திரலோகமே லக்ஷ்மி கடாக்ஷம் இழந்துவிடுகிறது . அதன் பின் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய மகாலக்ஷ்மியின் அவதாரம் மீண்டும் நிகழ்ந்தது என்பதை அறிவோம். 

மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் இந்திரலோகத்தில் நீங்கிய போது வைகுந்தத்திலும் அவர் இல்லை.

காரணம் வைகுந்தபெருமாள் கருடனின் மேல் பவனி வரும்போது,  இந்திரனை சபித்து விட்டு கோபத்துடன் வந்து கொண்டிருந்த துர்வாசர் அவரைச் சந்திக்கிறார்.  

சிவபெருமானிடம் பெற்ற வில்வமாலையை திருமாலிடம் கொடுக்கிறார். திருமால் அம்மாலையை கருடனின் மேல் வைத்தபடி அவசரமாய் மகாலக்ஷ்மியை சந்திக்க வேண்டுமென புறப்படுகிறார்.  

துர்வாசருக்கு, திருமால் தான் கொடுத்த மாலையை அலட்சியமாய் வாங்கி கருடனின் மேல் வைத்தபடி அவசரமாய் புறப்பட்டு விட்டாரே  என்ற  வருத்தம் ஏற்பட்டது. 

தன்னை அலட்சியப்படுத்துகிறார் என்று நினைத்து ,  இந்திரலோகத்தில் மட்டுமல்ல, வைகுந்தத்திலும் மகாலக்ஷ்மி இப்போது இருக்க மாட்டார். அவர் பாற்கடலுக்குள் சென்றுவிடுவார். பின்னர் ஒரு சமயம்  வெளிப்படுவார் என்று கூறி அங்கிருந்து சென்றுவிடுகிறார்.  

வைகுந்தத்தில் மகாலக்ஷ்மியை காணாமல் திருமால்   கவலையடைகிறார். அதற்கான காரணம்  துர்வாசரின் கோபம் என்பதும் தெரிகிறது. அதன் பின் திருமால்,  கௌதம முனிவரின¢ ஆலோசனைப்படி உமாமகேஸ்வர விரதத்தை கடைபிடித்து , அதன் பயனாக மீண்டும் மகாலக்ஷ்மியை அடைகிறார் என்றொரு புராணக்கதை உண்டு. உமாமகேஸ்வர விரதத்தின் சிறப்பினை இக்கதை நமக்கு எடுத்துரைக்கிறது. 

இவ்விரதத்தை புரட்டாசி பௌர்ணமி தினத்தில் அனுஷ்டிக்கிறார்கள். தொடர்ந்து பதினாறு வருடங்கள் இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 

சிலர் ஒரு வருடத்துடன் முடித்துக் கொள்கிறார்கள்.  கலசங்கள் வைத்துமுறைப்படி பூஜைகள் செய்து  உமா மகேஸ்வரரை விரதமிருந்து  வழிபாடு செய்யவேண்டும்,

இந்த விரதத்தை அனுசரிப்பதினால்,  மனைவியைப் பிரிந்து தேசாந்திரம் சென்றவர்கள், காணாமல் போனவர்கள் யாவரும்  வீடு வந்து சேருவார்கள்’ என இவ்விரதத்திற்கு பலன் கூறப்படுகிறது. 

மற்றபடி புரட்டாசி பௌர்ணமி தினத்தில் சிவன் கோயில் சென்று உமாமகேஸ்வரரை வணங்கி வாருங்கள்.

Mathivanan

பணத்தைத் தின்ன முடியாது..



“பூமி வெப்பமயமாகிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவில் அண்டார்டிகா மற்றும துருவப் பனிப்பாறைகள் உருகுகின்றன  இமயமலையும் உருகுகிறது. இதனால் கடல் மட்டம் உயரும். 

நிலைமை இப்படியேப் போனால்  மாலத் தீவுபோன்ற  பலத் தீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடும். பூமி வெப்பமயமாவதை தடுப்போம், சுற்றுச்சூழலை பாராமரிப்போம்,  இயற்கையை நேசிப்போம், பூமியைப் பாதுகாப்போம்.”

 புவியியல் ஆய்வாளர்கள் அடிக்கடி விடுத்துக்கொண்டிருக்கிற எச்சரிக்கைக் கலந்த கோரிக்கை  இது.

ஆனாலும் மனிதர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எங்கேயோ, எப்போதோ,   யாருக்கோ நடக்கப்போகிறது  நமக்கென்ன? என்கிற மனப்போக்குதான் எல்லோருக்கும். 

அப்படியொரு அலட்சியத்தால் இதோ  இந்தியாவில் இப்போது ஒரு சம்பவம். 

இமயத்தின் அடிமடியில் அமைந்திருக்கும் புண்ணியத் தலங்களான  கேதர்நாத் பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி போன்ற இடங்கள்..  உத்திரகாண்ட் என்ற வட இந்திய மாநிலத்தில் அமைந்துள்ளன. 

சமீபத்தில்  இயற்கைச் சீற்றம் கொண்டு புகுந்து விளையாடியதில் இப்பகுதிகள் அலங்கோலப்பட்டுப் போய்விட்டன. பல ஆயிரம் மக்களின் உயிர்கள் வீணாகப் பறிக்கப்பட்டுவிட்டன.  

இந்தப் பேரிடர்  நடந்த  பத்துநாட்களுக்கு முன்தான் அபூர்வாஸிலிருந்து இருவர் இந்த  சார்தாம் யாத்திரை மேற்கொண்டு  திரும்பியிருந்தனர். அதில் ஒருவர் என் மகள். போய் வந்தபின், மனதிற்கு  சொல்லொண்ணா நிம்மதியையும், பக்திப் பரவசத்தையும் தருகிற பயணமாய் இருந்தது என்றார்.   
இப்போது அவர்களின் மனதில் என்ன மாதிரியான  எண்ணங்கள் ஓடும்?   

சுயம் நலம் கருதி இயற்கையை, தான் இழுத்த இழுப்புக்கு  வளைக்க, மனிதர்கள்  முனைந்ததால், இயற்கை ஒரு கட்டத்தில் முரண்டு பிடித்து  தன் எதிர்ப்பைக் காட்டிவிடுகிறது. 

கங்கை, யமுனை ஆற்றின் குறுக்கே பல அணைகளைக் கட்டி, அதன் போக்கினை திசை திருப்பியதும் .. கரையோரங்களில் உயரமான கட்டிடங்களை எழுப்பியதும்,  அப்பகுதிகளில்  சுரங்க தொழிற்சாலைகளை  நிர்மாணித்ததும்தான்  இந்தப்  பேரிடருக்கும் உயிர்சேதத்திற்கும் காரணம் என்று இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இந்த நதிகள் பெருக்கெடுத்து சீற்றம் கொண்டு ஓடியதில் தன் பாதையை பழையபடியே அமைத்துக்  கொண்டு விட்டதாம். 

நிலவியல் ஆய்வாளர்கள், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த ஆபத்து பற்றிய எச்சரிக்கையை  அளித்து விட்டனராம். மக்கள் நலனை காக்க வேண்டிய  அரசு  அது பற்றிய அக்கறைக் கொள்ளாததுதான் உயிர்சேதத்திற்குக் காரணம் என்கிறார்கள். 

இயற்கையின் சில நிகழ்வுகள் இறைவனின் மீதுள்ள நம்பிக்கையை  அவ்வப்போது  தளர்த்தச் செய்து விடுகிறது.

இயற்கையின் சீற்றம் எதனால் ஏற்படுகிறது?  இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயல்படும் போது இயற்கைச் சீற்றம் கொள்கிறது..   இயற்கைச் சீற்றம் கொள்ளும் போது  பாதிக்கப்படுபவர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். 

மனிதர்களின் தவறுக்கு,  இறைவன் மீதும், இயற்கை மீதும் பழி சுமத்துவது தவறு  என்பதுதான்  நாம் அனைவரும் யோசிக்க  வேண்டிய விசயம். 

யாரோ செய்த தவறுக்கு அப்பாவி மக்களும், குழந்தைகளும் ஏன் சாகவேண்டும்?  இறைவன் ஏன் இவர்களைக் காப்பாற்றவில்லை? என்றக் கேள்வி  பலர் இதயத்தில் எழுவது இயற்கைதான். 

ஆனால் இதற்கான காரணங்களை  சொல்லும் போது , நம் மனம் அந்தப் பதில்களால் திருப்தி அடைவதில்லை. ப்ராப்தங்கள் , கர்ம வினைகளை காரணம் காட்டும் போது நம் அறிவு அதில் சமாதானம் அடைவதில்லை. 

விபரீதமான  சில   ஜாதக சூழ்நிலை உள்ளவர்கள்  ஒன்று சேரும் போது அவர்களின் மரணத்தோடு , தன்னோடு இருப்பவர்களையும் சேர்த்து கொண்டு சென்றுவிடுவார்கள் என்கிறது ஜோதிட விதி.  விபத்து, இயற்கை பேரிடர் போன்றவையெல்லாம் இப்படித்தான் நிகழ்கின்றன என்கிறது.
    
‘பூர்வ புண்ணிய பலம் அதிகம் உள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்.  அவர்களைக் கேட்டால், கடவுள் அருளால் பிழைத்துக்கொண்டேன்’  என்று சொல்வார்கள்.  

இந்த பூமியில் இவ்வளவுகாலம் தான் உன் வாழ்க்கை’ என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவரைதான் இந்தப் பூமியில் வாழ முடிகிறது. 

இப்படித்தான் வாழ்க்கை முடியும் என்றிருக்கும் போது அப்படியே முடிவடைகிறது.

 ஆனாலும் ஆன்மாவிற்கு அழிவில்லை. அது மீண்டும் பிறவி எடுக்கிறது என்பதே உண்மை. இந்த வார்த்தைகள்தான் நம் கவலைக்கு மருந்தாகிறது. மரண பயத்தினை அகற்றுகிறது.  

 நம் வாழ்க்கையில் நாம் அடைகின்ற சுய அனுபவங்களின் வாயிலாகத்தான் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். அடுத்தவரின் வார்த்தைகள் திருப்தி தராது. 

வலியின் வேதனை அடிபட்டவர்களுக்குத்தான் தெரியும்.  உறவுகளை இழந்தவர்களுக்குத்தான் பிரிவின் வேதனை எவ்வளவு கொடியது என்பது புரியும்.  காலம் ஒன்று மட்டுமே அவர்களின் காயத்திற்கு மருந்தளிக்க இயலும்.  

புனித பயணத்தில் இறந்தவர்களின் ஆன்மா  இறைவனையேச் சென்றடையும் என்பது நம் சமயம் கூறும் உண்மை. 

அவர்களின் ஆத்மா சாந்தியுறட்டும்! இறைவன் அவர்களுக்கு நற்கதியை வழங்கட்டும். 

இயற்கையை பூமியைத் தெய்வமாக வணங்கியவர்கள் இந்துக்கள். பஞ்சபூதங்களை வணங்கி நன்றி சொல்லி பொங்கல் வைத்து வழிபட்டவர்கள். 

நிலம் அதிர ஓடாதே என்று  வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். நீர்நிலைகளில் நிர்வாணமாக குளிப்பதும்,   எச்சில் துப்புவதும் அசுத்தம் செய்வதும் கூட பாவம் என்கிறது நம் மதம்.  

செடிகொடிகளைக் கூட இரவில் வெட்டாதே  அவற்றை உறங்கவிடு என்கிறது சாஸ்திரம். மூலிகை பறிப்பதற்கு முன் அந்த சாபம் போக மன்னிப்புக்கேட்டு மந்திரம் சொல்  என்று  எழுதி வைத்துள்ளனர். அவையெல்லாம் மறந்து போன விசயம் ஆகிவிட்டது. 

இயற்கையோடு விளையாடும் அரசாங்கங்களும், தனி மனிதர்களும் இனிமேலாவது தங்களின் தவறுகளைப் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்ளட்டும்.  

பூமியில் கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர்
கடைசி மீனையும் பிடித்த பின்னர்
காற்றின் கடைசித் துளியையும் மாசு படுத்திய பின்னர்
ஆற்றின் கடைசிச் சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர் 
இந்த பணத்தைத் தின்ன முடியாது..

இந்த தென் அமெரிக்கப் பழங்குடி மக்களின் பாடலை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துவதைத் தவிர  வேறென்ன சொல்லமுடியும்?  
   

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...