ads

Friday 27 January 2012

குட்டி கதைகள் / TAMIL SHORT STORY



ஒருத்தன் வேகமா டாக்டர்கிட்டே ஓடிவந்தான்.  

ரெண்டு கையாலையும் வயத்தை பிடிச்சு கிட்டு...... ஐயோ டாக்டர்... வயறு வலிக்குதுன்னான்.  

அடடா...  நான் மனோதத்துவ டாக்டர்... உன் வியாதிக்கு மருந்து தர்ற டாக்டர் பக்கத்து ரூம்ல இருக்கார் போய் பாருன்னார்.

ஐயோ... என் நிலைமை தெரியாம பேசுறிங்களே....  நான் குதிரையை முழுங்கிட்டேன்  என்னை காப்பாத்துங்க டாக்டர்னு கத்தினான்.

ஓகோ... குதிரையை முழுங்கிட்டியா... அப்ப அதுக்கு நான் தான் வைத்தியம் பார்க்கணும்...வா, வந்து இந்த கட்டிலே படுன்னார்.

அவனும் படுத்தான்.  அவனுக்கு மயக்க முருந்து கொடுத்தார்.   அவன் மயக்கமானான்.   உடனே தன் உதவியாளரை கூப்பிட்டு, ஒரு குதிரையை கொண்டு வந்து வாசலில் கட்டி வைக்க சொன்னார்.

மயக்கம் தெளிஞ்சு அவன் எழுந்தான்.  உடனே டாக்டர் இப்படி சொன்னார்.

பார்த்தியாப்பா.... நீ முழுங்கின குதிரை.   வாய் வழியாவே எடுத்துடேன்.   இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  நீ போகலம்னார்.

குதிரையை பார்த்தவன் மறுபடியும்.... ஐயோ ஐயோ வயறு வலிக்குது என்னை காப்பாத்துங்க டாக்டர்னு கத்தினான்.

அதான் குதிரையை எடுத்தாச்சே அப்பறம் என்ன பிரச்சனை.

ஐயோ... நான் முழுங்கினது வெள்ளை குதிரை.  நீங்க எடுத்து சிகப்பு குதிரை... அப்படின்னான்.

இப்போ டாக்டர்... மயக்கம் போட்டு விழுந்துடார். 







அது ஒரு சின்ன கிராமம்.

அந்த கிராமத்திலே ஒரு  கிருஷ்ணன் கோவில்.

அந்த கோவிலில் திருவிழா.

அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க.  ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார்.

இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான்.  இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும்,  கோவில்ல இருக்காங்க.  நமக்கு நல்ல வேட்டைதான்.  வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம் போட்டு வீடு வீடா புகுந்தான்.

அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட,  உருப்படியா ஒன்னும் இல்லை.  என்னடா இது.......... இந்த ஊர்ல எல்லா  பயலும் பிச்சைகாரனா இருப்பான் போலிருக்கே.  அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில் பக்கம் வந்தான்.

அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான் என்பது அவன் எண்ணம்.

பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு இருந்தார்.

குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே.... கொள்ளை அழகு.  அவன் கழுத்துல  தங்க மாலை போட்டு இருப்பான்.  இடுப்புல பட்டையா ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான்.

காதுல வைர கடுக்கன்.  கையில தங்க காப்பு.  கால்ல முத்து பதிச்ச தண்டை.  அட அட அட .... அப்படியே கண்ணனை பார்க்க கண் கோடி வேண்டும்.

இப்படி... கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர்.   இதை கேட்டான் திருடன்.  அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம் தெரியாது.  அவனுக்கு தெரிஞ்சது  எல்லாம் திருட்டு வேலை மட்டும்தான்.

அடடா...  அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை பற்றி சொல்றார்.  அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு,  நம் கை வரிசையை கட்ட வேண்டியதுதான்.  அப்படின்னு கதை முடியுற வரை காத்திருந்தான்.

கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு,  மெல்ல பாகவதர் பக்கம் வந்தான் திருடன்.

ரொம்ப நேரமா ... ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார்.  எங்கே இருப்பான்.  உடனே சொல்லு.  இல்லை உன்னை இந்த கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான்.

பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு.  கடவுளே இது என்ன சோதனை.   நான் அந்த மாய கண்ணனை பற்றி அல்லவா கதை சொன்னேன்.  இந்த முட்டாள் திருடன் அதை உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே.

அப்படின்னு யோசித்தவர்...  அவனிடம் தப்பிக்க.... அதோ தெரியுதே சோலை,  அந்த சோலை பக்கம் தான் அந்த கண்ணன் விளையாட வருவான்.  போய் பிடிச்சுகோன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார்.

திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு நம்பினான்.  கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு இருந்தான்.

அவன் நினைவு எல்லாம்... கண்ணன் எப்போ வருவான்... கண்ணன் எப்போ வருவான் என்பதாகவே இருந்தது.

உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான்.  பாகவதர் சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன் பார்த்தான்.

உண்மைதான்...  அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு இருந்தான்.

மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்... அடேய் தம்பி... உன் நகை எல்லாம் அழகா இருக்கு.  அதை எனக்கு தருவியான்னு கேட்டான்.  கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான்.

நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான்.

தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை பார்த்துட்டார்.

அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட அரம்பிசுடிச்சு.  திருடன் போய் சோலைல பார்த்திருப்பான்.  கண்ணன் வந்திருக்க மாட்டான்.  அந்த கோபத்தோட வருவான்.  இவன் கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது... அவனும் நம்மளை பார்த்துட்டான் .. அப்படின்னு யோசிக்கும் போது,  திருடன் பக்கத்துல வந்து ரொம்ப நன்றி...  ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு சொன்னான்.

பாகவதருக்கு பயம் போயிடிச்சு.  என்னப்பா சொல்றேன்னார்.

உண்மைதான்... நீங்க சொன்ன மாதிரி  சின்ன கண்ணன் வந்தான்.  என்ன அழகு.  என்ன சிரிப்பு,  அவனை அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி கொடுத்துட்டான்.   இதோ அந்த நகை எல்லாம் இருக்கு.  உனக்கு கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான்.

பாகவதரால நம்பவே முடியலை.  என்ன சொல்றேன்னார். அவனை பார்த்தியான்னு கேட்டார்.

ஆமாம் சாமி.   உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க ... அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான்.  வாங்க கட்டுறேன்னு சொன்னான்.

நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார்.  சோலை கிட்டே வந்ததும் அதோ.... பாருங்க... சின்ன கண்ணன்... நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு சொன்னான்.

பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை.  சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது.

இது என்ன சோதனை...  என் கண்ணுக்கு தெரியலை... கேவலம் இந்த திருடன்  கண்ணுக்கு தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே ஆரம்பிச்சுட்டார்.

அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது.  உடனே அவன் கையை பிடிச்சார்.  நீல வண்ண கண்ணன் அவர் கண்ணுக்கு தெரிஞ்சார்.

கண்ணா... இது தர்மமா... என் நினைவு தெரிந்த நாள் முதல் உன் கதையை சொல்றேன்.  அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது.  இது வரை எனக்கு தரிசனம் தராத நீ.... இந்த திருடன் கண்ணுக்கு தெரிகிறாய்.  அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.

பாகவதரே.... உங்கள் வருத்தம் புரிகிறது.  ஆனால்... இத்தனை ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும்,  நான் வருவேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை.  நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான்.

ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை.  நான் இருக்கேன் என்று நம்பினான்.  நான் வருவேன் என்று நம்பினான்.  அதனால் வந்தேன்.  கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு கண்ணன் மறைந்து விட்டான். 



ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான்.

அவனுக்கு சகுனங்களில் அதிக நம்பிக்கை.

அதை வைத்தே அவன் அரண்மனையில் இருந்த ஜோதிடர்கள்  காலத்தை கடத்தி கொண்டிருந்தார்கள்.   மன்னனும் அவர்களுக்கு பொற்காசுகளை கொடுத்து கொண்டிருந்தார்.

ஒரு நாள்.....

இரண்டு காக்கைகளை ஒன்றாக பார்த்தால் அன்றைய நாள் மிக சிறப்பாக இருக்கும் என்று சொன்னார்கள்.

வழக்கம் போல் அதை நம்பிய மன்னன்,  உடன் அரண்மனை காவலாளியை அழைத்தான்.  இரண்டு காக்கைகள் ஒன்றாக இருப்பதை பார்த்தால்,  உடன் வந்து சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டான்.

அன்று முதல் அரண்மனை சேவகன் காக்கையை தேடி தெருவில் அலைந்தான்.

ஒருநாள்.....  பக்கத்து தெருவில் இரண்டு காக்கைகளை ஒன்றாக பார்த்தான்,  சேவகனுக்கு மகிழ்ச்சி.   மன்னனிடம் சொன்னால் பரிசு கிடைக்கும் என்று வேகமாக ஓடி வந்தான்.

சேவகன் வந்து சொன்னதும் மன்னனுக்கு சந்தோசம்.  அப்படியா... என்று சேவகன் கூடவே விரைந்து வந்தான்.   மன்னன் வந்து சேர்வதற்குள் காக்கைகள் பறந்து போய்விட்டது.

வந்ததே கோபம் மன்னனுக்கு..  இந்த பொறுப்பற்ற சேவகனுக்கு பத்து கசையடிகள் கொடுங்கள் என்று உத்தரவு போட்டான்.

உடன் சேவகன் சிரிக்க ஆரம்பித்தான்.

ஏய்.... ஏன் சிரிக்கிறாய் என்று மன்னன் கேட்டார்.

அதற்கு அவன்... இல்லை மன்னா நான் ஒருவன் தான் இரண்டு காக்கைகளை பார்த்தேன்.  பத்து கசையடிகள் பரிசாக கிடைத்தது.  அதை நீங்களும் பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்து பார்த்தேன் என்றான்.

மன்னனும் அவனை விடுவிக்க சொன்னார்.  அன்று முதல் ஜோதிடர்கள் கொஞ்சம்  எச்சரிக்கையாக இருக்க ஆரம்பித்தார்கள்.


2 comments:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...