ads

Thursday 25 April 2013

வரலாற்றில் கள்ளழகர்!!




அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி விழாக்கோலம் பூண்டிருந்தது மதுரை. 

கடந்த பத்து நாட்களாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.  திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று அழகர் ஆற்றில் இறங்கினார். 



இந்நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா... கோவிந்தா என்று முழக்கமிட்டனர். வருடம் தோறும் நடக்கும் இவ்விழாவிற்கு  ஒரு கதை உண்டு. 




புராண காலத்தில் ஒருநாள்...

அன்று நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் சுதபஸ் முனிவர்.

தியானம் செய்தது கங்கை கரையில்.  தியானம் செய்தது திருமாலை நோக்கி. 

ஆனால் அவர் கெட்ட நேரம் துர்வாசர் ரூபத்தில் வந்தது.  துர்வாசர் தவமுனியாக இருந்தாலும், முன்கோபத்திற்கு பெயர் போனவர்.

முணுக்கென்றால் கோவம் வந்துவிடும்.  கோவம் கடைசியில் சாபமாக மாறிவிடும்.

சுதபஸ் தவம்செய்த வழியாக வந்தார் துர்வாசர்.  விழி மூடிஇருந்த சுதபசுக்கு விசுவாமித்திரர் வந்தது தெரியவில்லை.

அதை தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை துர்வாசர். நான் வருகிறேன். நான் வந்ததை கவனிக்காமல் தியானம் ஒரு கேடா? பிடி சாபத்தை... என்று சபித்து விட்டு விட்டார்.

சபித்தது எப்படி?

மண்டுகமாக போ. மண்டுகம் என்றால் தவளை என்று அர்த்தம்.

தியானத்தில் இருந்த சுதபஸ் திடுக்கிட்டு போனார்.

அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என்று பணிகிறார்  சுதபஸ்.

கோவம் இருந்தாலும் பணிவோரை மன்னித்தருளுவார் துர்வாசர்.  அந்த வகையில் மனமிரங்கிய ரிஷிமுனி, முனிவரே...சாபத்தை திரும்ப பெற முடியாது. என்றாலும் நீர் மண்டுகமாக பிறந்து  மதுரை வைகை கரையில் திருமாலை நோக்கி தவம் செய்வீராக. .

திருமால் கருணையால்  கருணையால் சாபவிமோசனம் பெறுவீர் என்று திருவாய் மலர்ந்தார்.

சுதபஸ் முனிவரும் மண்டுகமாக பிறந்து,  வைகை கரையில்  தவம் செய்து திருமால் கருணையால் சுயவுரு பெற்ற நிகழ்வை குறிக்கும் விதமாக கள்ளழகர் வைகை கரைக்கு வருவதாக ஒரு ஐதீகம்.

இது புராண கதை.  

ஆனால் இதற்கு ஒரு, வரலாற்று கதை ஒன்றும் இருக்கிறது. அதையும் பார்ப்போம்.

திருமலை நாயக்கர் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் தான் அழகர் ஊர்வலம் மதுரைக்கு வந்தது என்கிறார்கள்.   அதருக்கு முன்பு வரை மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான் வரைதான் அழகர் வந்தார்.

இது இருக்கட்டும். அழகர் ஊர்வலத்தை பற்றி ஒரு சுவாரசியமான செய்தி உண்டு.

சைவமும் வைணவமும் ஓன்று சேராத காலம். அக்காலத்தில் கள்ளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் தான் அழகர் கோவில் இருந்தது.



கள்ளர்கள் சைவர்கள்.  பெரும் ஆள் பலமும், ஆயுத பலமும் கொண்டவர்கள். பெரும் செல்வ செழிப்பாக இருந்த அழகர் ஊர்வலம் வரும் போது எல்லாம், வழி மறித்து அவர்கள்  கொள்ளையடித்து விடுவார்களாம்.

வருடம் தோறும் நடக்கும் இத்துயரத்தால் கவலையுற்ற வைணவர்கள், கள்ளர்களோடு கலந்து பேசி ஒரு உடன்படிக்கைக்கு வருகின்றனர்.

அந்த சமாதான உடன்படிக்கைபடியே இப்போது நடக்கும் வைபோவம், விழா எல்லாமே.

அதாவது கள்ளர்களுக்கு முதல் மரியாதை தரும் விதமாக அழகர் கோவிலில் இருந்து மதுரை தல்லாகுளம்  வரை கள்ளர் குல ஆண் மகனை போல் உடை அணிந்து வருகிறார் அழகர்.

ஒவ்வொரு வருடமும் மதுரை அழகர் ஆற்றில் இறங்கும்  நிகழ்வால் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும்.

இன்றும் அப்படியே.


1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...