ads

Tuesday 29 April 2014

மாமியாரை கொல்வாளா மருமகள்?



காலம் இருக்கிற இருப்புக்கு சூரியனுக்கே ராக்கெட் விட்டுறலாம். அது ஒரு மேட்டரே அல்ல. 

ஆனால் வரன் தேடி அலைந்து அந்த வரனும் மனதுக்குப் பிடித்த மாதிரி அமைவது இருக்கே?

 குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதைதான்.

இதில் பெண்ணை பெற்வர்கள் படுகிற பாடு இருக்கே. அடடா சொன்னாலும் ஆறாது, எழுதினாலும் தீராது. 

என்ன செய்ய? குத்த வச்ச பொண்ணுக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடாமல், ஒருத்தன் கையிலே பிடிச்சு கொடுத்திட்டா நிம்மதி இது பெற்றோர் தரப்பு சிந்தனை.

நியாயம்தான்.

சிலருக்கு இளமையில் திருமணம் நடந்துவிடும். கொடுத்து வைத்தவர்கள்.

சிலருக்கு எல்லா வளமும் கிட்டும் இந்தக் கல்யாணம் மட்டும் கைகூடாமல் கடுக்காய் கொடுத்துக் கொண்டிருக்கும். என்னன்னு தோண்டி துடுப்பெடுத்து ஆராய்ந்து பார்த்தால், காரணம் இப்படி இருக்கும்.

 தோஷம்.

தோஷங்கள் பலவகை. செவ்வாய் தோஷம், இது ஊர் அறிந்த ரகசியம். இன்னொன்று இருக்கிறது புனர்பூ தோஷம். தாமத திருமணத்திற்கு உரிய காரணிகள் என்றாலும் பிரபலம் இல்லை.

பிரபலம் பெயரில் தான் இல்லையே தவிர, தருகிற பலன் சூப்பர் வில்லன். அடுத்து நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம்.

1, 7 மற்றும் 2, 8ல் ராகு கேது அமர்வதால் ஏற்படுவது. இந்த கிரக நிலையைப் பார்த்தாலே  ஜோதிடர்கள் சொல்லாமல் விடுவதில்லை.

அதுவும் தெரிந்த விஷயம்தான். இதுதவிர்த்து இருக்கிறது நட்சத்திர தோஷம். இதுவும் ரொம்பப் பிரபலம்.

அது என்ன?

ஆயில்ய தோஷம்.

மாமியாருக்கு ஆகாது. ஆயி இல்லாத இடமா பார்க்கணும்.

மூல நட்சத்திர தோஷம்.

மாமனாரை மூலையில் முடக்கிப்போடும். ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்,,

கேட்டை நட்சத்திர தோஷம்.

மூத்த கொழுந்தனாருக்கு ஆகாது.

விசாக நட்சத்திர தோஷம்.

இளைய கொழுந்தனுக்கு ஆகாது என்று கட்டம் கட்டி விடுவார்கள்.

ஒரு வகையில் இவர்களும் பாவம் செய்தவர்கள்தான் போலும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியாக வருகிற கிரகம் எவ்வளவுதான் வலுத்தாலும், ஐந்தாம் அதிபதியாக வருகிற கிரகம் வலுகுன்றி காணப்பட்டால் ஜோசியர் இப்படிச் சொல்வார்.

ஐயா... உங்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுகுன்றி விட்டது. அதனால் காலம் முழுவதும் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். குறுக்கு வழியில் சென்றால் கூட சந்து பொந்து வழியில் சென்றுதான்  முன்னேற முடியும்.

சரி... ஆனால் மேற்படி நட்சத்திரங்களை ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டு ஜனிப்பவர்களுக்கு எந்த பாவம் வலுகுன்றி இருக்கும்?

 எதற்கிந்த  அலைச்சல்?

எதற்கிந்த  அலைக்கழிப்பு?

முதலில் தகுதியான வரன்கள் அமைவதே கஷ்டம் .

துப்பறியும் புலி 007 ரேஞ்சுக்கு அலைந்து திரிந்து, தேடி சலித்து அழகு, அந்தஸ்து, கவுரவம், உத்தியோகம், பையனின் நடை உடை பாவனை, அடிப்படை வசதிவாய்ப்புகள் இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, ஆகா நம்ம பொண்ணையே கொடுக்கலாம் போலிருக்கே என்று முடிவு செய்தால் முற்றுப்புள்ளி இப்படி வரும்.

பொண்ணு கேட்டையாச்சே, பையனுக்கு அண்ணன் இருக்காரே?

போச்சு... அத்தனை கனவுகளும் அந்த கணமே தவிடுபொடி.

சரி... உண்மையில் இந்த நட்சத்திரங்கள் தோஷமா?

ஆராய்வோம்.

பொதுவாக ஜோதிடத்தின் பெயரால் உலா வரும் பழமொழிகள் ஏராளம். இதற்கு கால் முளைத்த இடத்தைக் கண்டுபிடிப்பது சிரமம்.

ஆனால் இன்று முளைத்திருப்பது கால் அல்ல ரெக்கை.

உதாரணமாக...

பூரடாத்தில் பெண் பிறந்தால் நூலாடாது என்றும், உறவாடாது என்றும் சொல்கிறார்கள்.

அது என்னவாம்?

அதா... கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு அந்த பெண்கள் லாயக்கற்றவர்கள். தான் தன் சுகம் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.

தலையனை மந்திரத்தை ஓதுவதில் படுகெட்டியான இவர்கள், கட்டிய கணவனை கைக்குள் போட்டுக் கொண்டு மாமனார் மாமியாரை விட்டுத் தனிக்குடித்தனம் போவார்கள்.

அப்படியா?

அப்படித்தான் சொல்றாங்க, இது ஒன்னு  .

அப்போ இரண்டு எது?

கேட்டையிலே பிறந்த பொண்ணு கோட்டையை கட்டினாலும் கட்டுவா? கோட்டையை அழிச்சாலும் அழிப்பா .

அடடா அப்புறம்.

அவிட்டத்தில் பிள்ளை பிறந்தா தவிட்டு பானை எல்லாம் தங்கம்.

பலே... பலே... மேலே சொல்லுங்க.

பரணி தரணி ஆளும்.

அது சரி... அப்புறம்.

நாலாவது பொண்ணுடா... நாதாங்கி முளைகூட மிஞ்சாது - ஒரு அங்கலாய்ப்பு.

இது எட்டாவது பிறப்பு குட்டிச்சுவர் - ஒரு குதர்க்கம்.

ஒரு பிள்ளையை பெத்தா உரியிலே சோறு, நாலு பிள்ளையை பெத்தா நாயோட்டில் சோறு - ஒரு கண்டுபிடிப்பு.

இப்படி வழக்கில் சொல்லிக்கொண்ட வார்த்தையை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஏக களேபரம்.

ஏன் ஜோசியரே? கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்த மாதிரி. ஆயில்யத்தில் பெண் பிறந்தா ஆயுதத்தோட பிறக்குமா? கொலை ஆயுதத்தை சேலைக்குள் மறைத்து வைத்து, புகுந்த வீடு போனதும் மாமியாரே வெளியே வா... ஹா... ஹா... என்று கத்தியை எடுத்து சதக்கென்று குத்துமா?

நல்ல கதைகாரரு நீங்க. இருக்கட்டும்.

ஒரு ஜாதகத்தில் இருந்து எவ்வளவோ விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 
ஜோதிடரிடம் போய், நான் வீடு கட்டுவேனா? வண்டி வாகனம் வாங்குவேனா? மாடு கன்னு பாக்கியம் எப்படி? எதிரிகள் தொல்லை எப்போது ஒழியும்? உத்தியோக சிறப்புக்கு உகந்த காலம் எது? செய்தொழில் முன்னேற்றம் எப்படி?

இப்படி சரம் சரமாய் கேள்விக் கணையை தொடுகிறார்கள். ஜோதிடரும் தன் பங்குக்கு நல்லதாய் நாலு வார்த்தை சொல்லாமல் இல்லை. அனுபவத்தில் பார்க்கிறோம்.

ஆனால் இந்த தோஷ நட்சத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ள யாரும் அக்கறை காட்டுவதில்லையே ஏன்?

அது சரி... குண்டு போடுறதே ஜோசியர்தானே?

ஓ.... கதை அப்படி வருதா? சரி... இந்த கதையை கேளுங்க. எனக்குத் தெரிந்த பெரியவர் தன் மகனுக்கு வரன் தேடினார். தன் பால்ய சிநேகிதனின் பெண்ணே பரவாயில்லை என்று தோன்றியது.

காரணம் பெண் குணசாலி மட்டுமல்ல அறிவாளியும் கூட.  அழகுக்கு மட்டும் பஞ்சமா என்ன, விருப்பத்தைத் தன் குடும்பத்தாரிடம் வெளிப்படுத்தினார்.
சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பின்னர் தன் பால்ய சிநேகிதனிடம் பகிர்ந்து கொண்டார். சங்கடம் ஆரம்பமானது.

சங்கடம் பெண் கொடுப்பதில் அல்ல. பெண்ணின் நட்சத்திரம் மூலம். காலம் காலமாக சொல்லி வைத்த பாலபாடமே மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பதுதானே?

பெண்ணை கொடுக்கிறோம் என்கிற பெயரில், முப்பது வருட நட்பிற்குத் தப்புக் கணக்குப் போட தயாராக இல்லை பெண்ணின் தோப்பனாருக்கு.

 விளைவு மறுத்தார்.

விடவில்லை நண்பர். நான் என்ன சின்னஞ்சிறுசா? ஆண்டு அனுபவித்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் நாராயணனிடம் போக.

பெற்ற பிள்ளைக்கு ஒரு நல்ல காரியமா, கல்யாணத்தைச் செய்து வைச்சுட்டா போதும்.

கட்டையிலே போறதா இருந்தாலும் ரெட்டை சந்தோஷம். இந்தக் கருத்தில் உறுதியாக இருந்தார்... நண்பர்.

பிடிவாதத்திற்கு முன்பு மற்ற பிடிகள் தளர்ந்தன. கடைசியில் மணமக்கள் மணவறைக்குச் சென்றார்கள்.கடந்த ஜனவரியோடு அது ஆச்சு பத்து வருஷம்.  இப்பவும் கிழவன் புள்ளி மான் மாதிரி துள்ளிக்கிட்டு இருக்கார்.

மூலம் என்ன செய்தது.

இதோ இன்னுமொரு சம்பவம்.

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். ஆனால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே அனுதினமும் புகைச்சல். பாகப்பிரிவினையில் ஏற்பட்ட தகராறு ஊருக்குள் ஏக பிரபலம்.

அண்ணனைப் பழிவாங்க ஆயத்தமானான் தம்பி. பழி வாங்குறது சரி.. தடயம் இல்லாமல் தப்பிக்க உபாயம் வேண்டும்.

என்ன செய்யலாம்?

சிந்தனையின் முடிவில் சிக்கியது வழி.

கேட்டை நட்சத்திர பெண்ணை கட்டிக்கிட்டா, ஜாதகமே போட்டுத் தள்ளிடும் அண்ணனை.

முடிவு செயலானது, முகூர்த்தம் முடிவானது, அது ஆச்சு வருஷம் 6. அண்ணன் இன்னம் கின்னுன்னுதான் இருக்கார்.

கேட்டைக்கு என்ன கேடு?

உண்மை நிலவும் இதுதான். வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஒன்றுக்கும் மற்ற விஷயங்களக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முடிவுகளும் இப்படித்தான் இருக்கும்.இதில் தோஷ நட்சத்திரங்களைப் பாதங்களாகப் பிரித்துக் கொண்டு பலன் சொல்வோரும் உண்டு.

அப்படிப் பிரித்துக் காட்டிய மூல நூல்கள் கூட தந்தைக்கு ஆகாது, தாயாருக்கு ஆகாது, தமையனுக்கு ஆகாது, தனக்கே ஆகாது என்று பட்டியல் போடுகிறதே தவிர. இந்தக் காட்சிகளுக்கு ஏற்ற கதாபாத்திரமான மாமனாரோ, மாமியாரோ, கொழுந்தனாரோ வரவில்லை.

பின் எப்படி வந்தது?

யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகிறது.

இது என் யூகம்தான். அன்றைய காலகட்டத்தில் பால்ய திருமணம் என்பது பரவலாக இருந்தது.

வீட்டுக்கு  வந்த மருமகளிடம் வேற்றுமை காட்டும் குணம் வேர் விடாத காலகட்டம். விளக்கேத்த வந்த பொண்ணு வில்லங்கமும் இல்லாமல் ஒட்டி உறவாடி இருக்கிறது.

மேற்படி நட்சத்திரங்கள் தாயாருக்கும், தந்தையாருக்கும் ஆகாது என்று சொல்லப்பட்ட சூழலில் திருமணம் ஆகி மறுவீடு போன பன்பு, தாயாக  கவனிக்கும் மாமியாரையும், தந்தையாக கவனிக்கும்  மாமனாரையும், பாதிக்கும் என்ற கோணத்தில் பலன் எழுந்திருக்கலாம் இது என் ஐயப்பாடுதான். அறுதியிட்டு சொல்லவில்லை நிற்க.

இனி விஷயத்திற்கு வருவோம்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமியாரை குறிக்கும் இடம் பத்து.

அந்த வீட்டில் ராகு கேது அல்லது சனி இருந்து அந்த வீட்டுக்கு உரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசமாகவோ, அல்லது வக்கிரம் பெற்ற நிலையிலோ இருந்தால் மாமியார் ஸ்தானம் வலுகுன்ற வாய்ப்புண்டு.

அதேசமயம் மாமியாரின் ஆயுள் பலத்தைச் சொல்ல மாமியாரின் ஜாதகத்தைப் பார்ப்பதுதான் நல்லது. பார்க்க தேவையில்லாதது ஆயில்ய நட்சத்திரத்தை.

அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமனாரை குறிக்கும் இடம் 3ம் பாவம்.

இவ்விடத்தில் முன் சொல்லியது போல் சனி அல்லது ராகு கேது இருந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசம் அல்லது வக்கிரம் பெற்று காணப்பட்டால் மாமனார் ஸ்தானம் வலுகுன்றும்.

மற்றபடி ஆயுளை நிர்ணயிப்பது மாமனார் ஜாதகமே என்று கூறி நிறைவு செய்கிறேன். வணக்கம்.

நான் தினமணி இணைய தளத்தின் மூலமாக ஜோதிடம் சொல்லி வருகிறேன். என்னிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறவர்கள்

( பிரத்யேகக் கேள்விகள் என்ற ) 

இந்த லிங்கை கிளிக் செய்து கேள்விகளை தேர்வு செய்து பதில் பெறலாம். இங்கே குறிப்பிட்ட கேள்விகள் தவிர வேறு  கேள்விகள் கேட்க விரும்பினாலும் ஏதாவது ஒரு கேள்வியை கிளிக் செய்து உங்கள் கேள்வியை டைப் செய்து அனுப்பலாம்.

நன்றி 

Sunday 27 April 2014

திருமணப் பொருத்தம்


சங்கீதா. 

அழகி என்று ஒரு வரியில் சொல்வதை விட, பேரழகி என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும்.  பாரதிராஜா பார்த்தால் படத்தில் நடிக்கிறாயா என்று கேட்கிற மாதிரி அழகு ராட்சஸி.

கடந்த வருடம்தான் கல்யாணமேடை ஏறினாள். கைப்பிடித்தவன் பெயர் மாதவன்.  அழகிக்கேற்ற அழகன். அச்சு அசல் ஆணழகன் அரவிந்தசாமி மாதிரி ஒரு லுக். புலவர்கள் வர்ணிக்கும் ஆணின் உடல் கட்டமைப்பை பெற்றவன். 

இவர்களை ஜோடியாக பார்ப்பவர்கள் மனதார ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் ஜோடிப் பொருத்தம் சூப்பர். அதற்கு தகுந்த மாதிரி நல்ல வேலை, கை நிறைய சம்பளம். வசதி குறையாத வாழ்க்கை. 

இப்படியான நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து இனிய இல்லறத்தை நடத்துவார்கள் என்று நீங்கள் நம்பினால் ஏமாந்து போவீர்கள்.

ஏன் என்னாச்சு?

ஒருவரை ஒருவர் அனுசரித்து போவதில்லையா?

அதில் கூட பிரச்சனை இல்லை.

அப்புறம்? 

மாமனார் மாமியார் கொடுமையா?

அச்சச்சோ... அதெல்லாம் இல்லை. 

வேற என்னதான் பிரச்சனை?



பொருத்தம் உடலிலும் வேண்டும். 
புரிந்தவன் துணையாக வேண்டும். 
கணவனின் துணையோடு தானே - காமனை வென்றாக வேண்டும்.

புரியுது. அந்த பொருத்தம் இல்லையாக்கும்.

எஸ்..எஸ்... அதுதான் இருவருக்குள் மனவேறுபாடு. ஒற்றுமைக் குறைவு. வெறுப்பு, கசப்பு. நாம ஜோதிடத்திற்கு வருவோம்.

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போதுதான், இப்பொருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. சரசோதிமாலை, சேகரமாலை, முகூர்த்த தருபணம், காலமிருதம், சூடாமணி உள்ளமுடையான் என்பதெல்லாம் பழங்கால ஜோதிட நூல்கள். 

இந்த நூல்கள்தான் பத்து பொருத்தம் முதல் 21 பொருத்தங்கள் வரை பார்க்க வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் பத்து பொருத்தங்கள் பார்க்கும் விதமே பரவலாக நடைமுறையில் உள்ளது.  இதில் திணம், கணம், யோனி, ராசி, ரச்சு இவ்வைந்து பொருத்தங்கள் கூடி வந்தால் திருமணம் செய்ய உத்தமம். 

அதிலும் பிராமணர்களுக்கு திணமும், சத்திரியர்களுக்கு கணமும், வைசியர்களுக்கு ராசியும், சூத்திரர்களுக்கு யோனியும், அனைத்து தரப்பினருக்கும் ரச்சும் அவசியம் என்பதுதான் ஜோதிட வாக்கு. 

நாம் இதைப் பற்றி அலசப்போவதில்லை. இப்போதைக்கு வேறு விஷயம். அது யோனிப் பொருத்தம்.

ஆணோப் பெண்ணோ அசுவனியில் பிறந்தால் குதிரை, பூரட்டாதியில் பிறந்தால் சிங்கம். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆணோ பெண்ணோ நல்ல நண்பர்களாக இருக்கலாம். ஆனால் தம்பதிகளாக மாறினால் தகராறு என்கிறது ஜோதிடம்.

ஏன்?

 இரண்டும் பகை மிருகம். யோனி பொருத்தமில்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள் ஜோதிடர்கள். மனிதர்களை பிறந்த நட்சத்திற்கு ஏற்றாற் போல் குதிரை என்றும், சிங்கமென்றும், பூனை என்றும், புலி என்றும், எலி என்றும், மான் என்றும் ஞானிகள் வகைபடுத்தியதற்கும் காரணம் இருக்கிறது. 

குதிரைக்கு ஒரு குணம், சிங்கத்திற்கு வேறு குணம். பூனையை எடுத்துக் கொண்டால் ஒரு குணம், எலியும் அப்படித்தான். ஆக மிருகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு குணம், பழக்க வழக்கங்கள் கொண்டது. அதைப் போல்தான் மனிதனும். பிறந்த நட்சத்திரத்திற்கு எற்றாற்போல் குணமும் மனோநிலையும் மாறுபடுகிறது.



மிருகங்கள் தன்னுடைய துணையோடு இணையும் போது காட்டும் ஈடுபாடு, காலஅளவு, லயிப்பு நிலை இவற்றை கணக்கிட்டுப் பார்த்த ஞானிகள் மனிதனையும் வரிசைப்படுத்தினார்கள். இதைத்தான் யோனிப் பொருத்தம் என்றார்கள்.

அப்படியானால் யோனிப் பொருத்தம் மிக மிக அவசியம் அப்படித்தானே?

கொஞ்சம் பொருங்க. பரணியில் பிறந்த சங்கீதாவிற்கு, ரேவதியில் பிறந்த மாதவனை திருமணம் செய்து வைத்தார்கள். இருவரும் மிருகங்கள் வரிசையில் ஆண் யானை பெண் யானை. பகை மிருகங்கள் கூட இல்லை. ஆனாலும் வாழ்க்கையில் அந்த சுகம் இல்லை. 

ஏன்?

அதைத்தான் கண்டுபிடிக்கனும்.

நண்பர் ராமசாமிக்கு கல்யாணம். 11 பொருத்தம் இருப்பதாகவும், இந்த ஆணுக்கு இந்த பெண்ணே மனைவி. இதைவிட சிறந்த பொருத்தம் இல்லை என்றும் அடித்துச் சொன்னார்கள் ஜோதிடர்கள். 

இது பூர்வபுண்ணிய பொருத்தம், விட்டக்குறை தொட்டகுறை என்றெல்லாம் மெருகேற்றினார்கள். 

நாள் திதி நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததிப் பார்த்து, வேதமந்திரங்கள் ஒலிக்க அக்னிசாட்சியாக இனிதே நடந்தேறியது திருமணம். மூன்றே மாதம்தான் பாலும் கசந்தது, படுக்கையும் நொந்தது. ஆணும் பெண்ணும் அவரவரர் வீட்டில். ஏன்? எங்கே தவறு நிகழ்ந்தது.

நண்பர் கண்ணனின் கதையோ வேறு. இல்லறத்துணையை பஸ்ஸில் பார்த்தார். கவிஞர்கள் சொல்வது போல், மின்னல் அடித்தது. ஹோட்டல், சினிமா, பீச்,கோவில் என்று நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது காதல். இருவருக்கும் ஜாதக பொருத்தம் இருக்கிறதா?

அப்போது அவர்களுக்கு தெரியவே தெரியாது. இப்போது கூட இருவரும் நட்சத்திர பொருத்தமற்ற ஜோடி. 

போகட்டும்.  எல்லா காதல் ஜோடிக்கும் வரும் சங்கடம் இருவருக்கும் வந்தது. ஊரார் எதிர்ப்பு, உற்றார் எதிர்ப்பு, காதல் வெற்றிப் பெற கல்யாணம் ஒன்றே தீர்வு. நான்கு நண்பர்கள் உதவியுடன் கொழுத்த ராகுகாலத்தில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தார்கள். 

இதோ இன்றோடு பதினைந்து வருடங்கள் கடந்து விட்டது. காதலில் இருவர் கருத்தொருமித்து உல்லாச வாழ்வில் உலா வருகிறார்கள். இரண்டு மழலை செல்வங்களும் உண்டு. எப்படி?

இது விதி என்பதை விட கிரக பலம் என்பதுதான் உண்மை. திருமண பொருத்தத்தில் மிருகங்களின் குணத்தை கொண்டு ஆய்வு செய்வது ஒருபுறம் இருந்தாலும் லக்னம், ராசி, மூன்றாமிடம், பனிரெண்டாமிடம், சுக்கிரன், செவ்வாய், சந்திரன், சனி, ராகு, போன்ற கிரகங்களின் வலிமைமிக்க கூட்டணி அல்லது பார்வை இந்த ஆய்வை மாற்றி அமைத்து விடுகிறது என்பதுதான் உண்மை. 

அதனால் வெறும் நட்சத்திர பொருத்தத்தை மட்டுமே நம்பி கல்யாண களத்தில் குதிக்காமல், கிரக நிலவரத்தை ஆராய்ந்து இறங்கினால் இல்லறம் நல்லறமாகும். கட்டில் இனிக்கும். 


நான் தினமணி இணைய தளத்தின் மூலமாக ஜோதிடம் சொல்லி வருகிறேன். என்னிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறவர்கள் 

( பிரத்யேகக் கேள்விகள் என்ற ) 

இந்த லிங்கை கிளிக் செய்து கேள்விகளை தேர்வு செய்து பதில் பெறலாம். இங்கே குறிப்பிட்ட கேள்விகள் தவிர வேறு  கேள்விகள் கேட்க விரும்பினாலும் ஏதாவது ஒரு கேள்வியை கிளிக் செய்து உங்கள் கேள்வியை டைப் செய்து அனுப்பலாம்.

நன்றி 

Tuesday 15 April 2014

ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?


திருமணம்….! ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது.

திருமணம்…! இருமனம் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், கிண்ணர்கள், கிம்புருடர்கள் பூமாரி பொழிய, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெற்றோர் பெரியோர் ஆசியுடன் வாழ்க்கை படிகளில் கால் வைக்கும் இனிய பொன்னாள். இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும். 

ம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும். வம்சம் தழைக்க வாரிசுகள் பிறக்க வேண்டும். அது வாழையடி வாழையாக வளர வேண்டும்.

இன்னார் பையன், இன்னாரது குடும்பம், இன்னாரது பரம்பரை என்றெல்லாம் பெயரெடுக்க, இருமனம் கலக்கும் திருமணம் தான் முதல் படி.

திருமணம் செய்ய என்ன வேணும்? அதில் என்ன சந்தேகம். ஒரு ஆணும் பெண்ணும் வேண்டும். குட். ஒரு திருமணம் நடக்க, ஒரு ஆணும், பெண்ணும் அவசியம். அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பது முற்போக்கு சிந்தனை. மறுக்கவில்லை. இந்த இருவர் மட்டும் இருந்து விட்டால் கல்யாண கதவு திறந்து விடுமா?


Monday 14 April 2014

உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

காலமாற்றம், கணினி யுகம் என்பது ஏதோ ஒரு துறைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நடைமுறை வாழ்க்கையில் பல நிலைகளில் அது எதிரொலிக்கிறது.

மஞ்சப்பையும் கையுமாய் வேர்த்து விறுவிறுக்க கடைகடையாய் ஏறி இறங்கி பொருட்கள் வாங்கியது ஒரு காலம். வீட்டில் இருந்து நெட்டில் தட்டினால் வீட்டு வாசலுக்கு வந்து கதவை தட்டுகிறார்கள். 

முன்பதிவு என்று வந்த பிறகு கால்கடுக்க காத்திருந்த காலம் மலையேறி விட்டது. ரயில் பயணம முதல் விமான பயணம் வரை வீட்டில் இருந்தே புக்கிங் செய்கிற நிலை இன்று வந்து விட்டது. 

இந்த மாற்றம் ஜோதிடதுறையிலும் எதிரொலித்தால் எப்படி இருக்கும்? 

இந்த யோசனை தினமணி குழுமத்திற்கு வந்ததின் விளைவே,  ஆன்லைன் ஜோதிடம்.  ஏதோ கடமைக்கு செய்கிறோம் என்றில்லாமல், தமிழகத்தின் மிக பிரபலமான ஜோதிடர்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் ஜோதிட ஆலோசனை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது தினமணி.

இத்தருணத்தில் அதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 

மனிதன் பிறக்கிறான். பனிரெண்டு ராசிகளில் ஏதோ ஒரு ராசி, 27 நடசத்திரங்களில் ஏதோ ஒரு நட்சத்திரம், பனிரெண்டு லக்னங்களில் ஏதோ ஒரு லக்னத்தை பெற்று ஜனித்து விடுகிறான். 

ஜனித்த மறுகணம் அவனின் அன்றாட இயக்கம், வாழ்க்கை சூழல் என்பது கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது. நம்புகிறவர்களுக்கு மட்டுமே இதன் இயக்கம் என்றில்லாமல், நம்பிக்கை அற்றவர்களுக்கும் சேர்த்தே தன் இயக்கத்தை நடத்துகிறது.  

சரி... குப்புசாமிக்கு நம்மீது நம்பிக்கை இல்லை.  அவன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று விட்டுவிடுமா கிரகங்கள்? விடாது கருப்பு என்கிற மாதிரி காலநேரமாக மாறி சுற்றி சுற்றி வருகிறது. 

போகட்டும்.

காக்கா குருவியாக பிறந்திருந்தால் கவலை இல்லை.  நிகழ்கால வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போயிருக்கலாம். 

எதிர்கால சிந்தனைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக பிறந்து விட்டோமே? எதிர் நீச்சல் போட்டுத்தானே ஆக வேண்டும். வாழ்ந்தான் என்று வையகம் போற்றா விட்டாலும், வீழ்ந்தான் என்ற அவப் பெயர் இல்லாமல் இருக்க வேண்டும். 

நாமும் அழுது நம்மை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருக்க வேண்டும். இதுதான் அனைவரின் அவா. 

உண்மையில் சராசரி மனித வாழ்க்கையில் என்ன தேவை? விரல் விட்டு எண்ணினால் பத்து பனிரெண்டு ஆசைகள் பூர்த்தியானாலே போதும். போகும் பாதை எல்லாம் பூங்காவனம் என்கிற மாதிரி வாழ்க்கை அமைந்து விடும்.

சொல்லவா பட்டியலை.

நம் பிறப்பு நல் குடியில் அமைய வேண்டும். அன்பான அப்பா அம்மாவை பெற வேண்டும். நல்ல சுற்றத்தார் அமைய வேண்டும். ஆரோக்கியமான தேகத்தை பெற வேண்டும். நல்ல கல்வி, அதற்கேற்ற வேலை, தேவைக்கு அதிமாக வருமானம் வேண்டும்.

அன்போடு அழகும் சேர்ந்த மனைவி, அழகான பிள்ளைகள், வீடு, ஒரு வாகனம், அட... கொஞ்சம் விஸ்தாரமான தோட்டம் தொறவு, பிக்கல் பிடுங்கல் இல்லாத, எதிரிகள் இல்லாத அமைதியான வாழ்க்கை அமைந்து விட்டால் யோகவான். 

இதுதாங்க பலருக்கு பிரச்சனை. ஒன்றை கொடுக்கும் கிரகங்கள் ஒன்றை தர மறுக்கிறது. ஒருவருக்கு காதல் பிரச்சனை. இன்னொறுவருக்கு காதலியால் பிரச்சனை. ஒருவருக்கு வேலையில்லா வேதனை, மற்றவருக்கோ வேலையில் வேதனை. 

சிலர் நல்லவராய் இருந்தும் நல்ல பெயர் கிடைக்க மாட்டேங்குது.  விலகிப் போனாலும் விடாது துரத்தும் வில்லங்க விவகாரங்கள்.  கடன் தொல்லைகள் என்று நெருக்கடிகள் ஒருபுறம்.

சொந்த யோசனைகளை மற்றவருக்கு சொன்னால் பலிக்கிறது.  அதையே  தனக்காக பிரயோகித்தால்  தவழும் பிள்ளை மாதிரி தடுமாறி விழ வேண்டிய கட்டாயம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அங்கலாய்க்க வேண்டியிருக்கிறது.

நல்ல அழகு, உயர்நிலை படிப்பு, அதற்கேற்ற உத்தியோகம், கை நிறைய சம்பளம் என்று வாழ்க்கையை நடத்துகிற சிலருக்கு கல்யாண தேவதை கண்ணசைக்க மாட்டேங்கிறாள். ஊரு கல்யாணத்தை பார்த்தே உச்சி கொட்டி கொண்டிருப்பார்கள். 

வேறு சிலருக்கு பருவத்தே பயிர் செய் என்கிற மாதிரி காலாகாலத்தில் எல்லாம் நடந்து முடிந்து விடும். ஆனால் வாய்த்த வாழ்க்கைத்துணையால் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பார்கள். 

இப்படி பலதரப்பட்ட மனிதர்களுக்கு பலதரப்பட்ட சோதனைகள். வேதனைகள். இதற்கெல்லாம் காரணம் கிரகங்கள். கிரகங்களின் தாக்கத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டால், ஓரளவு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதுதான் ஜோதிட சாஸ்திரம்.

ஒருவருக்கு களத்திரபாவம் சரியாக அமைய வில்லை என்றால், மாப்ளிள்ளை விநாயகர் மாதிரி காத்திருக்க வேண்டி வரலாம். அல்லது  வருகிற மனைவி பார்வதி பரம்பரையோ என்று சொல்கிற மாதிரி எதிர்வாதம் செய்கிற பெண்ணாக வரலாம். 

அப்படி நடந்து விடாமல் இருக்க வேண்டுமானால் சரியான வரன்களை தேடி அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அனுசரித்துப் போகும் அமைப்புள்ள பெண்ணாக பார்த்து திருமணம் செய்தால் களத்திரபாவ குளறுபடியை குறைத்து விடலாம்.  அதுதான் பொருத்தம். 

ஒரு உண்மை சம்பவம். 

எனது ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பெயர் வேண்டாம். (நான் பெயரை சொல்லா விட்டாலும், எனது ஊரை சேர்ந்தவர்களுக்கு அவர் யார் என்று தெரிந்து விடும்)

 மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவரின் பரம்பரை என்று சொல்லக் கூடிய சொந்தபந்தங்கள் என் ஊரில் மிக வசதியானவர்கள். 

அந்த குடும்பத்தின் பின்னனியில் வந்த பையன் என்பதால் பொதுவாக அவர் மீது பலருக்கு நம்பிக்கை உண்டு.  பட்டம் படித்தவர்.  படிப்புக்கேற்ற வேலை தேடுவோம் என்றில்லாமல் சொந்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

எதையாவது என்ற கேள்விக்கு விடையாக அவர் கண்டுபிடித்தது சிட்பெண்ட்.  முதலில் சிறு சேமிப்பாகயாக துவங்கப்பட்டது. கையில் கிடைக்கும் பணத்தை அது ஒரு ரூபாயாக இருக்கலாம், ஐந்து ரூபாயாக இருக்கலாம், தனது கணக்கில் வரவு வைக்கலாம்.

நூறாவது நாள் அந்த பணம் திருப்பிக் கொடுக்கப்படும். இடையில் பணம் தேவை என்று கேட்டால், கமிஷம் தொகை பிடித்தம் செய்து கொண்டு மீதப் பணம் மட்டுமே கொடுப்பார்கள். 

இப்படி சிறுதுளியாக துவங்கப்பட்ட அவரது சிப்பெண்ட் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளர்துவிடும் பெண் பிள்ளைகள் மாதிரி வளர்ந்தது. 

சரி... சேமிப்பாக கிடைக்கும் பணத்தை வெறுமே வைத்திராமல் அதை நூறுநாள் தவணையாக வட்டிக்கு கொடுத்து வாங்கினால் என்ன என்று யோசித்தவர் அதை செயல்படுத்தவும் செய்தார்.

நல்ல வருமானம் வந்தது. சிலர் பெரிய இடத்து பையன் என்கிற எண்ணத்தில் தங்களிடம் இருந்த தொகையை இவரிடம் குறைந்த வட்டிக்கு கொடுத்தார்கள். அதை இவர் பெரிய வட்டிக்கு விட்டு வருமானத்தை உயர்த்தினார்.  பணம் தந்தவர்களுக்கு மாதா மாதாம் வட்டித் தொகை வீடு தேடிப் போனது. 

இது போதாதா அவர் நற்பெயர் எடுப்பதற்கு.  பலன் பெற்றவர் தனக்கு வேண்டியவர்களிடம் சொன்னார். 

அவர்களும் சும்மா இருக்கும் பணத்தை இவரிடம் கொடுத்தால் வட்டி வளருமே என்று கொடுக்க, இவரும் மாதம் தவறாமல் வட்டியை கொடுக்க சில ஆயிரங்களில் இருந்த இவரது வரவு செலவு பல லட்சங்களை தாண்டியது. கோடிகளை கூட தொட்டு விடுவார் என்று பேசுகிற அளவிற்கு அவரின் வளர்ச்சி பிரமாண்டமாக இருந்தது. 

இங்குதான் கிரகங்களின் சதிவேலை ஆரம்பமானது.  தேவைக்கு அதிகமான ஊழியர்கள். எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக தொலைபேசிகள். அவர்கள் தங்க பல வீடுகள் என்று நிர்வாக செலவுகளை அதிகப்படுத்திக் கொண்டே போனார். 

இந்த லட்சனத்தில் நான் ஏனென்ஸி எடுக்கிறேன் பேர்வழி என்று விளம்பரம் இல்லாத பொருட்களை வாங்கி மார்க்கெட்டிங் செய்ய முனைந்தார். அதற்காக கடன் கொடுத்தவர்களின் பணம் கைமாறியது. 

இந்த நிலையில்தான் என்னை ஒருநாள் சந்தித்தார்.  தனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என்றார். அவரைப் பொறுத்தவரை ஜாதகம் பார்க்க காரண காரியம் எல்லாம் இல்லை.  சும்மா ஒரு பொழுது போக்கிற்காக அப்படி சொல்லி இருக்கிறார்.

பொதுவாக நான் யாரையும் தேடிச் சென்று ஜாதகம் பார்க்கும் பழக்கம் இல்லை. என்னை தேடி வருபவர்களுக்கே ஜாதகம் சொல்வேன். ஆனால் அழைப்பது நண்பராயிற்றே. மறுக்க முடியுமா?

சரி... ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம் என்று சொல்லி விட்டேன். ஏற்கனவே வாடகைக்கு பிடித்துப் போட்டிருந்த ஒரு வீட்டை சுட்டிக் காட்டி அங்கே வந்து விடுங்கள் என்றார். விருப்பம் இல்லை என்றாலும் மறுக்கவில்லை நான். நண்பராயிற்றே.

ஞாயிறு வந்தது.  நானும் நண்பரின் இருப்பிடம் தேடி சென்றேன்.  அங்கே அவர் எனக்காக தன் நண்பர் ஒருவருடன் காத்திருந்தார். சற்று நேர உரையாடலுக்கு பிறகு ஜாதகம் பார்க்கும் படலம் ஆரம்பமானது.

ஜாதகத்தை பிரித்து கிரக நிலைகளை ஆராய்ந்தேன். தசா புத்தியை கணக்கிட்டேன். தொழில் பாவத்தை பார்த்தேன். அதிர்ந்து போனேன். 

காரணம்... ஆசைக்காட்டி மோசம் செய்யும் நிலையில் ராகுபகவான் அமர்ந்து தன் தசாவை நடத்திக் கொண்டிருந்தார். வழுக்குப் பாறையில் வண்டி ஓட்டுகிற மாதிரி ஒரு ஆபத்தான கட்டத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

அதனால் அவருக்கு பக்குவமாக எடுத்துரைத்தேன். நண்பரே தங்கள் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் பலமாக உள்ளன, மறுக்கவில்லை. ஆனாலும் தற்சமயம் நடக்கும் திசை தங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால் மிக கவனமாக காலடி எடுத்து வைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இருக்கிறது என்றேன்.

உடனே அவர் இளக்காரமாக என் ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருக்கிறது தெரியுமா என்றார்.  

உண்மைதான் நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போது அந்த யோகத்தை பெறுகிற நேரம் இல்லை என்பதுதான் ஜாதக நிலை என்றேன்.  என்ன நினைத்தாரோ... சட்டென எழுந்து விட்டார். ஒகே... கிருஷ்ணன் எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது. நான் வெளியே போக வேண்டும். 

மேற்கொண்டு பலனை நண்பரிடம் சொல்லுங்கள் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னவர் என் பதிலை கூட எதிர்பார்க்காமல் விறுட்டென வெளியேறினார். 

எனக்கோ தர்ம சங்கடமான நிலை.  யாருக்காக என் கொள்கையை விட்டுக் கொடுத்து ஜாதகம் பார்க்க வந்தேனோ, அவர் இல்லாத பொழுது அவருக்காக ஜாதகம் சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. 

அப்போது என் நண்பரிடம் இருந்து, ஜாதகம் கேட்க சொன்னவருக்கு போன் வந்தது.  போன் அழைப்பு யாராக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அவரை அழைத்தது என் நண்பரே தான்.  

ஒன்னும் கேட்க வேண்டாம். காசை கொடுத்து அனுப்பு என்று போனில் சொல்வது எதிரில் இருந்த எனக்கே தெளிவாக கேட்டது.  போனை அணைத்தவர்... ஒரு முக்கியமாக வேலை நான் மறந்துட்டேன்.  தப்பா நினைக்காதீங்க, நாம நாளைக்கு பேசலாமா என்றார்.  

உடன் பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டியவர், இதை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

சாரி... நண்பரே... நான் பணத்திற்காக வரவில்லை. அவர் எனது நண்பர் என்ற முறையில்தான் வந்தேன், உங்க வேலையை போய் பாருங்கள் என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன்.

சில நாட்கள் கழித்து எனக்கு நெருக்கமான நண்பர் மூலமாக ஒரு தகவலை கேள்விப் பட்டேன். கிருஷணனுக்கு ஜாதகம் பார்க்க தெரியலை என்பதே என் நண்பரின் கமெண்ட்.  

எப்போதுமே கிரகங்கள் ஒருவரை வஞ்சிப்பது என்று முடிவெடுத்து விட்டால், போகாத ஊருக்குத்தான் வழிகாட்டும்.  தப்பான முடிவுகளைதான் எடுக்க வைக்கும்.

அப்படி ஓர் தப்பான முடிவை அவர் எடுத்தார். 

இந்நிலையில் இரால் வளர்ப்பு என்னும் புதுத் தொழிலில் கால் பதித்தார். இரால் வளர்ப்பு என்பதே சூதாட்டம் மாதிரிதான். வந்தால் வரும், போனால் தலையில் முக்காடுதான். போட்ட காசை எடுக்க முடியாது. 

ஆனாலும் நண்பர் பல வளர்ப்பு குளங்களை வாடகைக்கு எடுத்து இரால் வளர்ப்பில் ஈடுபட்டார். நூறு நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல், நோய்கள் தாக்காமல் இரால் வளர்ந்து விட்டால் பலமடங்கு லாபத்தை தந்து விடும் என்பது உண்மையே. ஆனால் அதற்கு கால நேரம் ஒத்துழைக்க வேண்டுமே. 

நம்பவைத்து நயவஞ்சகமாக கழுத்தறுப்பது என்று ராகு முடிவெடுத்து விட்ட பிறகு கிருஷ்ணன் சொல் அம்பலம் ஏறுமா?

ஒரு மாதம் கடந்திருக்கும்.  ஒரு நாள் மழை வந்தது.  மழை என்றால் உங்க வீட்டு மழை எங்க வீட்டு மழை இல்லை. பேய் மழை.  இரவில் பிடித்த மழை விடிந்த பிறகுதான் விட்டது.  விட்டப் பிறகு பார்த்தால் எங்குப் பார்த்தாலும் தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர். 

நண்பர் இரால் வளர்க்கும் தொட்டிலை மூழ்கடித்திருந்தது மழை.  அவருக்கு மட்டும் அல்ல, அச்சமயம் அங்கே இரால் வளர்ப்பில் ஈடுபட்டிருந்த அத்தனைப் பேருக்குமே அந்த பாதிப்புதான். 

வெள்ளம் வடிய சில வாரங்கள் பிடித்தது. அதன் பிறகுப் பார்த்தால், குளத்தில்¢ வளர்க்கப்பட்ட இரால் எதுவுமே அதில் இல்லை. எல்லாம் வெள்ளத்தோடு வெள்ளமாக போய்விட்டது. நண்பருக்கு பலத்த நஷ்டம்.  ஈடு செய்ய முடியாத இழப்பு.  

இதில் செய்யப்பட்டது எதுவுமே சொந்தப் பணம் அல்ல.  குறைந்த வட்டிக்கு வாங்கிய பணம்.  உரியவர்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை.  நஷ்டத்திற்கு உள்ளானார் என்பதை அறிந்த முதலீட்டார்கள் முன்னெச்செரிக்கையாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார்கள்.

முதலில் இதோ அதோ என சாக்கு போக்கு சொல்லி தப்பித்தவருக்கு, தொடர்ந்து ஒரே வசனத்தை பேச முடியாத சூழல்.  

மிக சாதாரணமாக வந்து கேட்டவர்கள், தங்கள் கோபத்தை காட்ட துவங்கியதும்,  ஒரு கட்டத்தில் அலுவலக பொருட்களை வண்டியில் ஏற்றிச் சென்றதும் என தகவல் பரவ... ஒரே சமயத்தில் அனைவரும் திரண்டு விட்டனர். நண்பர் தலைமறைவாகி விட்டார். 

பின் ஒரு மாதத்திற்கு பின், வேறு ஒரு நண்பர் மூலமாக தலைமறைவாக இருந்தவர் எனக்கு அழைப்பு விடுத்தார். 

எதற்கு?

ஜாதகம் பார்க்க. 

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  ஆனாலும் அவரிடம் சொல்லி அனுப்பினேன்.  எனக்கு ஜாதகம் பார்க்க தெரியவில்லை என்று அவர்தான் சொன்னார்.  வேதனையில் இருப்பவரை மேலும் வேதனைப்படுத்த இதை சொல்லவில்லை. 

என் மூலமாக அவருக்கு கிரகங்கள் முன்னெச்சரிக்கை செய்யவே முனைந்தன. ஆனாலும் அதை அவர் அலட்சியப்படுத்தி விட்டார்.  போகட்டும். 

நடந்ததை பேசி பலனில்லை.  என்றாலும் அவரிடம் சொல்லுங்கள்.  இது தற்காலிகம்தான். மீண்டும் அவருக்கு நல்லகாலம் திரும்பும். ஆனால் அதற்கு அவர் பத்து வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பதே உண்மை நிலை என்று சொல்லி அனுப்பினேன். 

இது மனசமாதான பதில் இல்லை.  அவர் ஜாதக பலாபலன் அதுதான். அவர் மீண்டு வருவார் என்பதுதான் உண்மை. இதை நான் இங்கு சொல்லிக் காட்டுவதின் நோக்கமே உங்கள் ஜாதகத்தையும் நன்கு ஆராய்ந்து, காலநேரத்தை  கணக்கிட்டு செயல்பட்டால் குறைந்தபட்ச தோல்வியோடு தப்பித்து விடலாம். 

தொழில் என்றில்லை, குடும்ப சூழல், வீடு வாகன யோகம், கல்வியோகம், கடல் கடந்த பயணங்கள், மண வாழ்க்கை அமைப்பு என்று அனைத்தையும் சிறப்புடன் அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான் உண்மை.  

இப்போது தினமணி கட்டண சேவையில் என்னை தவிர்த்து மற்ற மூன்று பிரபலமான ஜோதிடர்கள் பலன் சொல்ல காத்திருக்கிறார்கள். நீங்கள் தெளிவான பதிலை பெற விரும்பினால் அவர்களையும் நீங்கள் அனுகலாம்.

இச்ச் சேவையை பெற முதலில் தினமணி இணையத்திற்கு செல்லுங்கள்.  



அங்கே தலைப்பு வரிசையில் உள்ள ஜோதிட சேவைகள் என்பதை கிளிக் செய்யுங்கள்.  செய்தால் கீழ்காணும் பக்கம் திறக்கும்.



  
அதில் பிரத்தியோக ஜோதிட ஆலோசனைகள் என்பதை கிளிக் செய்யுங்கள்/
செய்தால் கீழ்காணும் பக்கம் திறக்கும். ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கே தான் என்னோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் உங்களுக்கு ஜோதிட ஆலோசனைகள் வழங்க தயாராக இருக்கிறார்கள்.

முதலில் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர், பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். 

தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர். இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் ஞானம் பெற்றவர்கள். 

வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படித்தவர். நம் தினமணி தளத்தில் ஜோதிட பலன்களைச் சொல்லி வருகிறார். தினப் பலன், மாத பலன்கள், நியூமராலஜி என்ற எண்ணியல் பெயர்ப் பலன்களைச் சொல்லி வரும் இவருக்கு வாசகர்கள் வட்டம் பெரிது. பல குடும்பங்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர்.

இவரிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பினால் அவர் பெயரை கிளிக் செய்தால் புதிய பகுதி திறக்கும். அங்கே நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கிளிக் செய்தால் உங்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருஷம், பிறந்த இடம் போன்ற விபரங்களை பூர்த்தி செய்து add to cart என்பதை கிளிக் செய்து பணத்தை செலுத்தி பதில்கள் பெறலாம்.


ஜோதிட அமிர்தம் மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியராக இருந்தவர். ஜீவஜோதிடம் இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து ஜோதிடக் கட்டுரைகள், பலன்கள், ஆய்வு நுணுக்கங்களை எழுதிவருகிறார்.

ஆன்மிக சொற்பொழிவாளர். தொலைக்காட்சிகளில் ஜோதிடம் குறித்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக ஜோதிடத் துறையில் உள்ள இவர், ஜோதிட வாணி, ஜோதிட வித்யாஸ்ரீ, ஜோதிட அரசி உள்ளிட்ட பட்டங்கள் பெற்றவர்.

பல குடும்பங்களுக்கு குடும்ப ஆலோசகராகவும் உள்ள இவர், திருமணம், தொழில், குடும்பப் பிரச்னைகள், வியாபாரம், கல்வி, வீடு மனை உள்ளிட்ட பலவற்றுக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்கி நன் மதிப்பைப் பெற்றவர்.

குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி குறித்த புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும், ஜோதிட நுணுக்கங்களை விவரித்து புத்தகங்கள் சில எழுதியுள்ளார்.

இவரிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பினால் அவர் பெயரை கிளிக் செய்தால் புதிய பகுதி திறக்கும். அங்கே நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கிளிக் செய்தால் உங்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருஷம், பிறந்த இடம் போன்ற விபரங்களை பூர்த்தி செய்து add to cart என்பதை கிளிக் செய்து பணத்தை செலுத்தி பதில்கள் பெறலாம்.


 தொழில் முறையில் கடந்த சில வருடங்களாக ஜோதிட ஆலோசனைகள் கூறிவரும் இவர், ஜோதிடம், யோகா, இசை கற்றவர். இதழ்களில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜோதிட சேவைக்காக விருதுகள் பெற்றவர்.

இவரிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பினால் அவர் பெயரை கிளிக் செய்தால் புதிய பகுதி திறக்கும். அங்கே நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கிளிக் செய்தால் உங்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருஷம், பிறந்த இடம் போன்ற விபரங்களை பூர்த்தி செய்து add to cart என்பதை கிளிக் செய்து பணத்தை செலுத்தி பதில்கள் பெறலாம்.

அல்லது என்னிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பினால் என்னை பற்றிய குறிப்பை பார்க்கவும்


பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் முறை ஜோதிடர். பத்தாயிரம் ஜாதகத்திற்கு மேல் பலன் கூறிய அனுபவம் உள்ளவர். ஆய்வு, அலசல், தீர்வு என்ற அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய அனுபவம் பெற்றவர். 

ஜோதிட பயிற்சி பாடங்கள் வழியாக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியவர். வாக்கு பலித்த ஜோதிடர் என்று வாழ்த்து பெற்ற இவர், இதுதான் பலன் என்று துல்லியமாகச் சொல்லும் ஆற்றல் மிக்கவர்.

தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஜோதிட மாத இதழ்கள் பலவற்றில் ஜோதிட நுணுக்கங்களுடன் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

மலேசியாவில் தற்போது, தொழில் முறை ஜோதிடராகவும், பகுதி நேர பத்திரிக்கையாளராகவும் இருந்து வருகிறார். தினமணியின் ஜோதிட தளத்தில் ஜோதிடக் கட்டுரைகள், பொதுப் பலன்கள் எழுதி வருகிறார்.

என்று தினமணி தளத்தில் குறிப்புகள் உள்ளது.  யாரிடம் கேள்வி கேட்டு பதில் பெற ஆசைப்படுகிற்களோ அவர்களிடம் பதில் பெற்று வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள். 

நன்றி வணக்கம்/
அன்புடன் 
ஜோதிடர் ஸ்ரீகிருஷ்ணர் 


Sunday 13 April 2014

நீங்கள் சீக்கிரம் செல்வந்தராகி விடுவீர்கள்.



நீங்கள் வாழ்க்கையை நிர்வாகம் செய்ய வேண்டும்; 
இல்லையெனில்  வாழ்க்கை உங்களை அடிமைப்படுத்திவிடும்!

சூனியத்தை வாழ்க்கை சகித்துக் கொள்ளாது. அர்த்தமுள்ள பயனுள்ள நடவடிக்கைகளால் வாழ்க்கையை நீங்கள் நிரப்ப வேண்டும். இல்லையென்றால் விதியானது குப்பை கூளங்களைப் போன்ற பிரச்சினைகள் - தொல்லைகள் இவற்றைப் போட்டு உங்கள் வாழ்க்கையை நிரப்பி விடும்.

நீங்கள் உங்களை, உங்கள் வாழ்க்கையை நிர்வாகம் செய்ய வேண்டும். திட்டமிட்டுக் கட்டுப்படுத்தி - நீங்கள் தேர்ந்து எடுக்கிற நடவடிக்கைகள் வாயிலாக அதை நிரப்பிட வேண்டும். 

இல்லாவிடில் வாழ்க்கை உங்களை அடிமையாக்கி விடும்; பிரச்சினைகள், தொல்லைகள், கஷ்டங்கள் - மாறுபாடுகள் இவற்றில் உங்களைப் போட்டு அலைக்கழித்து விடும்.

ஏன் என்றால் வாழ்க்கை என்பது சூனியத்தைச் சகித்துக் கொள்ளாது. நீங்கள் விரும்புகின்றவற்றைக் கொண்டு வாழ்க்கையை நிரப்புங்கள். 

இல்லையென்றால் என்ன நடக்கும்? வாழ்க்கையை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்து கொண்ட மற்றவர்கள், தூக்கி எறிந்த மிச்சம் மீதியை ஏற்க வேண்டிய தண்டனைதான் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆக வாழ்க்கையை எப்படி நிர்வகிப்பது? வாழ்க்கையை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்து கொண்டால் பிறகு அது எளியதாகி விடும். அந்த வழிகளை இங்கே காணுங்கள். நாளை விடியும்வரை அதுபற்றிக் கவலைப்படாதே! என்று ஒரு பழமொழி உண்டு.

இதைத்தான் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். 

அடுத்தநாளைப்பற்றி இன்றே எண்ணத் தொடங்கினால் - நாளைய வாழ்க்கையை இன்றே வாழத்தொடங்கினால் - இன்றைய பிரச்சினைகளுடன் அடுத்தநாளைய பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ளும். 

நீங்கள் பிரச்சினைகளின் இரட்டிப்பு சுமையைச் சுமக்க நேரிடும். இதனால் உங்கள் வேலைச் சுமை இரட்டிப்பு ஆகும்.

டாக்டர் வில்லியம் ஒஸ்லர் என்பவர் ஒரு அறிவுரை கூறினார். ஒரு நேரத்தில் ஒரு நாளைய வாழ்க்கையை  வாழ்ந்திடுங்கள் இந்த அறிவுரையை ஏற்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக நிர்வாகம் செய்ய முடியும்.

டாக்டர் ஒஸ்லர் மேலும்¢ எச்சரித்தார் : நேற்றைய சுமையோடு, இன்றைய சுமை இருக்கிறது. இதில் நாளைய சுமை என்கிற பளுவையும் ஏற்றி விட்டால் நீங்கள் தள்ளாட வேண்டியது தான் - இது அவருடைய எச்சரிக்கை.

உடல் அளவில், மனத்தளவில் உணர்வு பூரமாக - உங்கள் மேல் அதிக சுமைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள். என்று தான் எல்லா மருத்துவ நிபுணர்களும் மனோதத்துவ நிபுணர்களும் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள்.

ஒரு மின்சாரம் வழங்கும் கம்பியில் அளவுக்கு அதிகமான மின்சாரத்தைப் பாய்ச்சினால் மின்சார ஓட்டம் நின்று விடும். பழுது பட்டுவிடும். 

அது போல உங்கள் இதயம் பழுது அடையலாம். அல்லது ஏதேனும் ஒரு முக்கிய உடல் உறுப்பு பழுது அடையலாம். அல்லது  உங்கள் மனம், உங்கள் உணர்வுகள் இவை பழுது அடையலாம். உங்களுடைய நரம்பு மற்றும் மனம் இவை கடும் பாதிப்புக்கு ஆளாகலாம்.

ஆக நேரத்தைக் கட்டுப்படுத்துவதன் வாயிலாக வாழ்க்கையை நிர்வாகம் செய்யத் தொடங்குங்கள். ஒரு நேரத்தில் ஒரு நாளைய வாழ்வை மட்டும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். 

இன்றைய வாழ்வை வாழுங்கள். யாருமே அன்றாடப் பிரச்சினைகளை - இன்றைய பிரச்சினைகளை சமாளித்து விடலாம். ராபர்ட் லூயிஸ்டீவன்சன் சொன்னார்: “எவ்வளவு கடுமையான சுமையாக இருந்தாலும் யாரும் அதனை இரவுவரை சுமந்து விடலா. எவ்வளவு கடுமையான வேலையாக இருந்தாலும் அதனை யாரும் ஒரு நாளைக்குள் செய்து விடலாம்” என்று.

எந்த ஒரு நாளும் எவ்வளவு நாசகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருப்பினும் உங்களை அடக்கி விட முடியாது. இது பற்றி வில்லியம் கௌடர் எனும் அறிஞர் உங்களுக்குப் பரிவுடன் கூறும் புத்திமதி வருமாறு : இருள் படிந்த நாளாக இருந்தாலும் அது நாளை காலைவரை இருந்தாலும் விடிந்ததும் அது உங்களை விட்டுச் சென்று விடும்.

நான் நேற்று நிமிர்ந்து நின்றிருந்தேன். இன்றும் அது போல் நிற்பேன் என்று டோரதி டிக்ஸ் என்பவர் எழுதினார். 

இது உங்களுக்கும் பொருந்தும். நீங்களும் அப்படி நிமிர்ந்து நிற்கலாம்.

உங்கள் வாழ்க்கையை நாட்கள் எனும் அளவு கோலால் பகுத்து வைத்து விடுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையை நிர்வாகம் செய்து விடலாம்.

ஒவ்வொரு நாளையும் மணிகள் என்கிற கால அளவையால் வகுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மணிக்கான பணியிலும் முழு அளவு கவனம் செலுத்துங்கள். ஒரு தடவைக்கு ஒரு மணிநேர வேலை என்று பகுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் நேரத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.‘

நேரத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் வாயிலாக, அந்த நேரத்தைக் கொண்டு செய்யும் வேலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் வாயிலாக - நீங்கள் உண்மையில் உங்கள் வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறீர்கள் என்று அர்த்தம். 

எனென்றால் காலம் தான் வாழ்க்கை. இது உங்கள் காலம். இது உங்கள் வாழ்க்கை. வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். இல்லாவிடில் அதற்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்.

காலத்தை - நீங்கள் கட்டுக்குள் வைத்து நிர்வாகம் செய்வதற்கு வசதியாக அதனைப் பங்கு போடுங்கள். இத்தனை மணி இத்தனை நிமிடம் என்று பங்கு போடுங்கள். அதன்படி காலத்தை நீங்கள்  கட்டுப்படுத்த முடியும். நிர்வாகம் செய்ய முடியும். அதற்குக் கட்டளை இட முடியும். 

பகுத்து வைத்து வெற்றி கொள்ளுங்கள். என்கிற இந்த முறையானது,  வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளில் ஒன்று. 

ஒரு தடவையில் ஒரு மணி நேரம் என்று பிரித்துக் கொண்டு உங்கள் கவனத்தை அதிலே செலுத்துங்கள். குறிப்பிட்ட அந்த கால அளவான ஒரு மணி நேரத்துக்கான பிரச்சினைகளில் உங்கள் முழுக்கவனத்தைச் செலுத்துங்கள். அது பற்றிய வேலைகளைச் செய்யுங்கள். 

அழிந்து போன மணிகளில் ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து மனதைச் சிதறடிக்க வேண்டாம். வரப்போகிற மணிகளில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய ஊகங்களில் ஈடுபட வேண்டாம். 

இப்படிச் செய்தால் கவனத்தை ஒரு முகப்படுத்தும் ஒரு சாதனையை நீங்கள் எட்டி விடுவீர்கள். இதன் மூலம் நீங்கள் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள். மணிக்கு மணி - நாளுக்கு நாள் - வாரத்துக்கு வாரம் - நீங்கள் பலன்களைப் பெறுவீர்கள்.

காலத்தை வகைப்படுத்தி அதை நிர்வாகம் செய்து - திறமையுடன் ஆற்றலுடன் உங்கள் பணிகளில் கவனத்தை ஒரு முகப்படுத்தினால் - அதன் வாயிலாக நீங்கள் எதையெல்லாம் அடைவீர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

உங்களுக்கே தெரியும்.

நீங்கள் சீக்கிரம் செல்வந்தராகி விடுவீர்கள்.

Saturday 12 April 2014

நட்சத்திர பொதுப் பலன்கள்

உங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள்
ராசி வாரியாக
(27 நட்சத்திரங்களுக்கும், அந்த அந்த ராசிகள் வாரியாக )
கணித்து அளித்தவர்: 
 ஜோதிடர் ஸ்ரீகிருஷ்ணன்

Wednesday 2 April 2014

ஐந்து ... ஐந்து... ஐந்து

1.பஞ்ச கண்ணியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.

17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...