ads

Friday 13 October 2017

அமாவாசை அன்று செய்யக் கூடாதவை?

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர் களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

Tuesday 10 October 2017

சகலமும் அருளும் சாளகிராமம்


Salagiramam
Salagiramam

இறைவனின் இன்னொறு பெயர் இயற்கை. இந்த இயற்கை என்பது நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்னும் பஞ்சபூதங்களை குறிப்பது. பஞ்சபூதங்களால் ஆன உலகை குறிப்பது. அண்டவெளிகளை குறிப்பது. 

அதற்கு...அதற்கு...அதற்கு அப்பாலும் இயங்கும் கோடான கோடி நட்சத்திர மண்டலங்களை குறிப்பது, ஈரேழு பதினான்கு லோகங்களை குறிப்பது, அதனால்தான் ஆதிமனிதன் இயற்கையை வழிபட்டான். இயற்கையாய் தோன்றும் சில பொருட்களை வழிபட்டான். அந்த வகையில் வருவதுதான் சாளகிராமம்.

சாலகிராமம் என்றால் என்ன?

மாலவன், மாதவன், மாயவன், மதுசூதனன் என்றெல்லாம் போற்றப்படும் மகாவிஷ்ணுவின் நிறம் கொண்ட கல். 

மகாவிஷ்ணுவின் இயற்கை நிறங்களை பிரதிபலிக்கும் கல். 

பொன்னிறம் கொண்ட திருமால். 
பச்சை நிறம் கொண்ட ராமர். 
நீலநிறம் கொண்ட கண்ணன்.
கருமை நிறம் கொண்ட பரசுராமன். 
சாம்பல் நிறம் கொண்ட கூர்மம் என்று அவர் தோன்றிய அவதார நிறங்களை பிரதிபலிப்பதுதான் சாளகிராமம்.

வேல் என்றால் முருகன். 
சூலம் என்றால் சக்தி. 
சங்கு என்றால் திருமகள். 
சக்கரம் என்றால் சுதர்சனம் என்பது போல், சாளகிராமம் என்றால் திருமாலைக் குறிக்கும். 

திருமாலின் பெருமையைக் குறிக்கும், அவரின் மகிமையை குறிக்கும். இயற்கையும் இறைவன் என்பதால், பொதுவாக இந்துக்கள் முதலில் இயற்கையை வழிபாடு செய்தனர்.  பின்னர் உருவ வழிபாடுகள் தோன்றியது. 

என்றாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவது போல், வைணவர்கள் திருமாலை சாளகிராம கற்கள் வடிவில் வழிபாடு செய்கிறார்கள்.

இன்று.... நீங்களும் நானும் சாளகிராமத்தின் பெருமையை உணர முடிகிறது, அறிய முடிகிறது, அதைப் பற்றி பேச முடிகிறது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சாளகிராமம் என்பது ஆலயங்களில் இருந்தது, மடங்களில் இருந்தது, அதை தவிர்த்து சர்வ வல்லமை பொருந்திய அரசன் வாழும் அரண்மனைகளில் மட்டுமே இருந்தது. நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு கிடைக்கவில்லை.

ஜோதிடமும் அப்படித்தான். அனைத்தும் அறிந்த ஜோதிடர்கள் இருந்தார்கள். அவர்கள் அரண்மனையில் மட்டுமே இருந்தார்கள் ஆஸ்தான ஜோதிடர்களாக.

மன்னனுக்கு ஆரூடங்கள் சொல்வதும், கோள்ச்சார நிலைகளை அறிந்து தினப்பலன்கள் சொல்வதும்தான் அவர்கள் கடமை. பின்னாளில் எப்படி ஜோதிடம் சாமான்னியர்களுக்கு வந்து சேர்ந்ததோ அதைப் போலவே சாளகிராமமும் வந்தது. 

பண்டைய இந்தியாவில் சீரும் சிறப்போடும், செல்வ செழிப்போடும்  தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசம்தான் இன்றைய நேபாளம். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 

உலகின் மிக உயரமான மலை இமயமலை என்று புவியியல் ரீதியாக சொன்னாலும், இந்துக்களை பொருத்தவரை இமயமலையில்தான் சிவன் வசிக்கும் திருக்கயிலாயம் அமைந்துள்ளது. இந்த இமயமலையின் அடிவாரத்தை ஒட்டினார்போல் உள்ளதுதான் ஹரிபர்வதம். 


ஹரிபர்வத மலைக் குன்றில்தான் கண்டகிநதி உற்பத்தியாகிறது. இந்த கண்டகிநதியில்தான், விஷ்ணுவின் சகல அம்சங்களும் பொருந்திய சாளகிராம மூர்த்திகள் ஒரு இயற்கையான புண்ணிய காலத்தில் தோன்றுகிறது.  

சாளகிராமங்கள் நத்தைக்கூடு, சங்கு, விசிறி போன்ற பல வடிவங்களில், பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவமெடுத்து சாளகிராமத்தை குடைந்து உள்ளே நுழைகிறார் என்கிறது புராணங்கள்.

இக்கற்களில் இயற்கையாகவே சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் தோன்றுகின்றன. அதனால்தான் இதை மகாவிஷ்ணுவின் சொரூபம் என்பார்கள்.

மரணத்தை தொடும் அந்த கடைசி நிமிஷங்களில் எவன் ஒருவன் தன் சுயநினைவுடன் சாளகிராமத்தை மனதால் வணங்குகிறானோ, அவன் தான் செய்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்கிறது கருட புராணம்.  

ஒருவர் தன் இறுதி மூச்சை சுவாசிக்கும் தருணங்களில் பால் ஊற்றும் பழக்கம் பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது.  ஆனால் சாளகிராமத்தை அபிஷேகித்த தீர்த்த தண்ணீரை அருந்தி உயிர் பிரியுமேயானால் அவர் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் மன்னிக்கப்படுகிறார்.

பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப விதவிதமான தண்டனைகள் தரும் யமராஜ பட்டினத்தில், யமதர்மனால் மரியாதை செய்யப்பட்டு வைவஸ்வதம் என்று புண்ணிய உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக கருட புராணம் மேலும் சொல்கிறது.

Wednesday 4 October 2017

சாளக்கிராமம்



உண்மையாக, உறுதியாக, உளர்பூர்வமாக, சத்தியமாக, வேதங்களின் மேல் ஆணையாக ஒன்றை சொல்ல முடியும்.

எவன் ஒருவன் தன் நித்திய பூஜையாக சாளகிராமத்தை தொழுகிறானோ, அவன் இன்மையிலும் மறுமையிலும் எந்த கெடுதலையும் அடைய மாட்டான்.

தருமத்தை விரும்புகிறவர்கள் தருமத்தையும். பொன் பொருளை நாடுகிறவர்கள் பொன் பொருளையும். அந்தஸ்து அதிகாரங்களை விரும்புகிறவர்கள் அந்தஸ்து அதிகாரத்தையும்.  காமத்தை விரும்புகிறவர்கள் காமத்தையும்.  மோட்சத்தை விரும்புகிறவர்கள் மோட்சத்தையும்.  வளமான சந்ததியை விரும்புகிறவர்கள் வளமான சந்ததியையும் பெறுவார்கள்.

உள்ளத்தூய்மையும், புறத்தூய்மையும் கொண்டு பக்தியுடன் சாளகிராம சொரூப பரந்தாமனை உளமாற துதிப்பவனுக்கு எல்லாவிதமான துன்பங்களில் இருந்தும் விடுப்பட்டவன் ஆகிறான்.
கடன் தொல்லையில் மூழ்கி கரையேற முடியாமல் தவிப்பவர்கள் சாளகிராம வழிபாட்டை பக்தி சிரத்தையுடன் செய்தால் கடலளவு கடனும் கடுகத்தனையாக மாறும்.

மருந்து மாத்திரையே விருந்தாக உண்ணும் நோயாளிகள் அதிலிருந்து விடுபட சாளகிராம வழிட்டை மன ஒருமையுடன் தொடர்ந்தால், ஆரோக்கியம் மேம்படும் என்பதை அடித்துச் சொல்லலாம்.

வழக்குத் தொல்லைகளால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், நிம்மதியை தொலைத்து நிற்கதியாய் நிற்பவர்கள், ஆதரவற்றுப் போய் அநாதையாக இருப்பர்கள். 

ஆதரிக்க யாருமின்றி ஆண்டவனே கதியென்று அனுதினம் துதிப்பவர்கள் சாளகிராம வழிபாட்டை விடாது செய்தால் விமோச்னம் பெறலாம்.

எதிரிகள் மத்தியில் எந்நாளும் தவிப்பவர்கள், தொட்டது அனைத்திலும் தோல்வியை தழுபவர்கள், நவக்கிரக பாதிப்பால் நலிந்து மெலிந்தவர்கள் என எத்தரப்பினராக இருந்தாலும், மிக எளிமையான சாளகிராம வழிபாட்டை செய்தால், கடப்பதற்கு இயலாத இடையூறுகளை எளிதில் கடந்து விடலாம். 

அருட் செல்வம் என்னும் ஆன்மசுகம், பொருட் செல்வம் என்னும் தனவிருத்தியை தடையில்லாமல் பெறலாம் என்று வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்கள் அறுதியிட்டு சொல்கின்றன. 

சிந்தையில் கொள்வோம், சிரமேற்கொள்வோம், சாளகிராம வழிபாட்டை பக்தி சிரத்தையுடன் தொடர்வோம், அனைத்தும் பெற்று ஆனந்த வாழ்வு பெறுவோம் என்ற உறுதி மொழியோடு உள்ளே செல்வோம். 

வாருங்கள் வைகுண்ட வாசனின் திருவிளையாடல், அவரின் பெருமைகள், இதுவரை அறிந்திராத ஆன்மீக தகவல்கள், மந்திர பூஜா முறைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ள முதலடி எடுத்து வையுங்கள். திருமாலின் திருவடி தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.

ஓம் நமோ நாராயணாய.

                                                                                                                                      தொடரும் 

தமிழ் வரலாறு


உலகில் மிக பழமையான மொழிகளை வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். 

உலகளவில் சுமார் 6000 மொழிகள் பேசப்படுகிறதாம்.  ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. 

உலகளவில் பத்தாவது இடத்தில் இருக்கிறது லத்தீன் மொழி.  ரோம் சாம்ராஜ்யத்தில் லத்தீன் மொழி பரவலாக பேசப்பட்டதாக ஆய்வுகள் சொல்கிறது.  அது கிமு 75ம் ஆண்டு அளவுகளில் தோன்றி இருக்கலாம்.

ஒன்பதாவது இடத்தில் ஆர்மேனியன் மொழி இருக்கிறது.  இந்தோ ஐரோப்பிய மொழியாக கருதப்படும் ஆர்மேனியன் கிமு 450 கால அளவில் தோன்றியிருக்கலாம் என்று வரிசைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள்.

கொரியன் மொழி இந்த வரிசையில் எட்டாம் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட கிமு 600 ஆண்டுகள் அளவில் கொரியன் மொழி தோன்றி வளர்ந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.

எபிரேய மொழியானது ஏழாம் இடத்தில் இருக்கிறது.  இஸ்ரேலில் அரசு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் உள்ள இது கிமு 1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள் மொழி ஆய்வாளர்கள்.

அராமிக் என்ற மொழியானது இதே கிமு 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.  அரபு மொழிக்கும், எபிரேய மொழிக்கும் அடிவேராக இருக்கிறது அராமிக்.  இது மொழி அட்டவணையில் ஆறாமிடத்தில் உள்ளது.

சைனீஸ் என்று சொல்லப்படுகிற சீனமொழி ஐந்தாம் இடத்தை பெறுகிறது.  கிமு 1200 ஆண்டுகள் பழமையானது என்கிறது புள்ளி விபரம். சீனர்களாலும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களாலும் பேசப்படுகிற மொழி.

கிரேக்கத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பேசப்படுகிற தொன்மையான மொழி கிரீக்.  இதன் தோற்றக்காலம் என்பது கிமு 1450 ஆக இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இது நான்காமிடத்தில் இருக்கிறது.

ஆப்ரோ ஆசிய மொழியாக கருதப்படும் எகிப்திய மொழியானது இந்த அட்டவணையில் மூன்றாம் இடத்தை பெறுகிறது.  கிமு 2600 ஆண்டுகள் பழமையானது.

இந்தியாவில் உருவான சமஸ்கிருதம் பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது.  ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டது. கிமு 3000 ஆண்டுகள் என்ற அளவில் தோன்றி இருக்கலாம் என்பது ஒரு கருத்து.

நாம் பேசும் தமிழ் மொழியானது கிமு 5000 ஆண்டுகள் பழமையாக, உலகெங்கும் 6000 மொழிகள் பேசப்படுகிற நிலையில் முதல் இடத்தில் இருக்கிறது. 

உலகில் தோன்றிய முதல் மொழியாக தமிழ்தான் உள்ளது.  பிராமி என்னும் அரிச்சுவடியாக தோன்றி, அர்வி என்னும் அப்ஜதிய்யாக வளர்ந்து, பிரெய்லி என்று வழங்கப் பெற்று வட்டத்தெழுத்துக்களாக வடிவம் பெற்று வளர்ந்த மொழிதான் தமிழ்.

இன்று உலகம் முழுவதும் 80கோடி மக்களுக்கு தாய்மொழியாக இருப்பது தமிழ். ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டு பேசப்படும் வரிசையில் 18ம் இடத்தில் இருக்கிறது.  


பித்ரு சாபமும் புத்திரதோஷமும்..


கவிதா...
பிறந்ததே ஒரு செல்வ செழிப்பான குடும்பத்தில்.  அதை விட பலமடங்கு வசதியான இடத்தில் அவளுக்கு வரன் அமைந்தது.  கணவனும் மிகவும் அன்பானவன்.  நியாயமான எந்த ஆசைக்கும் பணம் என்பது குறுக்கே நின்றதே இல்லை.  ஆசைப்பட்டால் உடன் அடைந்து விடும் அளவிற்கு வசதிகளுக்கு எந்த குறையும் இல்லை. இருப்பினும் அணிந்திருக்கும் பகட்டான பட்டுப் புடவைக்கு பின்னும், கழுத்து காதில் ஜொலிஜொலிக்கும் தங்கவைர நகைகளுக்கு பின்னும் அவள் முகத்தில் ஒரு வறட்சி.  வறட்சி என்பதை விட ஏக்கம் என்று சொல்லலாம். 

ஏன்?

இத்தனை செல்வங்கள் இருந்தும் குழந்தைப் பாக்கியம் மட்டும் இல்லை.  இத்தனை கோடி சொத்துக்களை தேடி வைத்தது யாருக்காக என்ற கேள்விதான் கவிதாவை குடைந்து கொண்டிருக்கிறது.

திவாகர்...
அரசு உயர் அதிகாரி.  கம்பீரமான நடை, நேர்மைக்கு எடுத்துக்காட்டு.  திவாகரைப் பார்த்தாலே பல அதிகாரிகளுக்கு வார்த்தையே வெளியே வராது.  அத்தனை பயம்.  அதோடு மதிப்பு மரியாதை உள்ள மாமனிதன்.  ஆனால் இந்த கம்பீரமான உருவத்திற்குள் ஒரு ஆன்மா அனுதினம் அழுதுக் கொண்டிருக்கிறது.  தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்கிற வருத்தம். 

இன்று நம்மிடையே எத்தனையோ கவிதா மற்றும் திவாகர்கள் இருப்பார்கள்.  திருமணம் என்பது எப்படி வாழ்க்கையில் மிக முக்கியமானதோ அதைப்போல் புத்திரபாக்கியமும் மிக முக்கியம்.  சந்ததி விருத்திக்காகவும், தங்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளவும், இறப்புக்கு பின் கர்மம் செய்யவும் பிள்ளைகள் அவசியம்.  ஆனால் இதில்தான் சிலருக்கு பிரச்சனை. 

எந்த மருத்துவ கோளாறுகளும் இல்லாத ஆரோக்கியமான தம்பதிகளுக்கு கூட புத்திரபாக்கியம் இல்லாமல் போய்விடுகிறது.  மருத்துவர்களும் மண்டை காய்ந்து போய்கிறார்கள். ஏன்? என்ன காரணம் என்பது புரியாமல் போய்கிறது.  ஆனால் இதற்கு ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் கிடைக்கும் பதில் பூர்வபுண்ணியம், ஊழ்வினை. இதை புத்திரதோஷம் என்பார்கள். மொத்தம் எட்டுவிதமான புத்திரதோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சர்ப்ப சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்

பாம்புகளை விஷ ஜந்துக்களாக பார்க்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாம்புகளை தெய்வத்திற்கு சமமாக வைத்தார்கள். இந்த பூமியை தாங்கி நிற்பதே ஆதிசேஷன் என்ற பாம்புதான் என்கிறது புராணங்கள்.  பாம்பு தீண்டி இறக்க வேண்டும் என்ற விதி அமைப்பு இருந்தால் மட்டும் பாம்பு நம்மை தீண்டுமே தவிர, மற்ற நேரங்களில் மனிதரை கண்டால் அது விலகியே ஓடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இருக்கட்டும். 

இந்த பிறவியிலேயோ அல்லது முன் பிறவியிலேயோ பாம்புகளை அடித்துக் கொன்ற பாவம், பாம்பு புற்றுகளை அழித்த பாவம் போன்ற காரணங்களால் சர்ப்ப சாபம் ஏற்பட்டு புத்திரதோஷம் உண்டாகிறது.  ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு கேதுக்கள் இருப்பது தோஷத்தின் ஒரு அடையாளம்.  

இந்த இடங்களில் பாம்பு கிரகங்கள் இருந்தாலும், அவரவர் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப குழந்தைப் பாக்கியத்தை பெறுகிறவர்களும் இருக்கிறார்கள். 

பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்

பித்ருக்கள் என்பது நம் முன்னோர்களை குறிக்கும்.  இந்த பிறவியிலோ அல்லது சென்ற பிறவியிலோ நம்மை பெற்றவர்களை சரியாக கவனிக்காமலும், அவர்கள் மனம் நோகும்படி செய்ததாலும், உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் உறைவிட வசதிகளை செய்து தராமலும், கடைசிக் காலத்தில் அருகில் இருந்து பராமரிக்காமல் அலட்சியப்படுதியதாலும் வருகிற தோஷமே பித்ருசாபம்.

இறந்தவர்களுக்கு உரிய திதி கடமைகளை செய்யா விட்டாலும் பித்ரு சாபம் பின்தொடரும் என்பார்கள்.  ஆக இத்தகைய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்ரு சாபத்தால் புத்திர தோஷம் வருகிறது.  இதை ஜோதிட ரீதியாக அறிந்து கொள்ள ஒன்பதாம் இடத்தில் ராகு கேது சனி போன்ற கிரகங்கள் இருப்பது, சூரியனோடு இக்கிரகங்கள் சேர்ந்திருப்பது இத்தோஷத்தின் அடையாளம். 

மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்.

மாத்ரு என்பது தாயை குறிக்கும் ஒரு சொல்.  தாய்வழி உறவினர்களை கொடுமைப்படுத்தியும், அவமானப்படுத்தியும், அடித்து உதைத்து துன்புறுத்துதல்,  பத்து மாதம் சுமந்து பெற்ற தாயாரை இழித்துப் பழித்து பேசுதல், அவர்களை சரிவர கவனிக்காமல் தனித்து விட்டுவிடுதல் போன்ற காரணங்கால் மாத்ரு சாபம் ஏற்படுகிறது.

ஜோதிட ரீதியாக இத்தோஷத்தை அறிந்து கொள்ள சந்திரனோடு ராகு கேது, சனி  சேர்ந்திருப்பது, புதனோடு சனி, கேது சேர்ந்திருப்பது அல்லது புதனோடு சனி ராகு சேர்ந்திருப்பது தோஷத்தின் அடையாளம்.

சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்

இப்பிறவியிலோ அல்லது முன்பிறவியிலோ ஏற்படும் சகோதர சாபம் புத்திர தோஷத்திற்கு காரணமாக அமைகிறது.  அதாவது ஒன்றாக கூடி பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையே இடையே ஏற்படும் பகை, சொத்துக்களை ஏமாற்றி வஞ்சகம் செய்தல், சொத்துக்களுக்காக கொலை செய்தல், உடன் பிறந்த சகோதரனின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் அணுகுதல் போன்ற காரணங்களால் சகோதர சாபம் ஏற்படுகிறது.  

இத்தகைய தோஷத்தை ஜாதகத்தில் அறிந்து கொள்ள செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருந்து, சனி ராகு கேதுவோடு இணைந்து இருந்தால் இத்தோஷம் உறுதிபடும். 

மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்

மாதுலன் என்பது தாய்மாமனை குறிக்கும்.  தாய்மாமனுக்கு செய்யும் துரோகம், சொத்து மோசடிகள், நம்பிக்கை துரோகங்கள், மாமன் மகளை திருமணம் செய்து, அப்பெண் சந்தோஷமாக வாழாமல் கண் கலங்குவதால் தாய்மாமனுக்கு ஏற்படும் துரயரங்கள் இந்த வரிசையில் வரும்.  

இத்தகைய தோஷத்தை ஜாதகத்தில் அறிந்து கொள்ள புதன் மீன ராசியில் இருக்கும் போது, புதனோடு சனி, கேது சேர்ந்திருப்பது அல்லது புதனோடு சனி ராகு சேர்ந்திருப்பது தோஷத்தின் அடையாளம்.

பிராமண சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்

வேதங்களின் வழி நடப்பவர்கள் பிராமணர்கள்.  பொய் களவு சூது என்பது இல்லாமல் நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்.  அவ்வாறு நேர்மையாக தர்மசாஸ்த்திர நியதிப்படி வாழும் பிராமணர்களை தூஷித்தல், அவமானப்படுத்துதல், அவர்களுக்கு துரோகம் செய்தல் போன்ற காரணங்களால் வரும் புத்திரதோஷம் பிராமண தோஷம் என்று பெயர்.

ஜாதகத்தில் இத்தோஷத்தை அறிந்து கொள்ள குருவோடு சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இணைந்து ஐந்து அல்லது ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பதே தோஷத்தின் அடையாளம். 

பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்

கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் பெண்கள், மனதாலும் உடலாலும் கணவனுக்கு துரோகம் செய்யாதப் பெண்களை பத்தினிகள் என்கிறது வேதங்கள்.  அத்தகைய பெண்களை தவறான கண்ணோடத்தில் அணுகுவதும், அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதும் குற்றம்.

இத்தகைய பெண்கள் விடும் சாபம் அந்த தலைமுறையோடு அந்த வம்சமே அழிந்து போகும் என்பதுதான் வேதத்தின் வாக்கு.

  பத்தினியான சீதையை கவர்ந்து சென்ற இராவணன், சர்வ வல்லமை பெற்றவனாக இருந்தும், தவப் புண்ணியங்கள் சேர்த்திருந்தும் இறக்க நேரிட்டது. சீதையின் சாபத்தால் அவனது வம்சமே இல்லாமல் அழிந்துப் போனது. 

பத்தினியான பாஞ்சாலியின் சாபத்தால் துரியோதனன் அழிந்தான். அந்த கௌரவ குலமே ஒருவர் கூட மீதம் இல்லாமல் மண்ணோடு மண்ணாக மறைந்துப் போனது. புராண காலம் என்றில்லை எக்காலத்திலும் பத்தினிகளுக்கு பாதகம் நினைப்பவர்களுக்கு வம்ச விருத்தி இருக்காது. 

ஜாதகத்தில் இத்தோஷத்தை அறிந்து கொள்ள நீச்சம் பெற்ற குருவோடு சனிபகவான் இணைந்திருப்பது, அது ஐந்து அல்லது ஒன்பதாம் இடமாக இருப்பது தோஷத்தின் அடையாளம். 

மந்திரசாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்

பில்லி சூன்யம் ஏவல் செய்பவர்கள், பில்லி சூன்யத்தால் மற்ற குடும்பத்தை சர்வநாசம் செய்கிறவர்கள், குட்டிச்சாத்தான், மோகினி, யட்சயினி போன்ற தேவதைகளை வசியம் செய்து வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்களுக்கு இச்சாபம் ஏற்படும். 

வாரிசு இல்லாமல் வாழும் தம்பதிகளிடம் இருந்து சொத்து சுகங்களை அபகரித்துக் கொண்டு, அவர்கள் இறுதி காலத்தில் அநாதையாக இறந்துப் போனால், அவர்களுக்கு உரிய கர்மாக்களை செய்யாமல் போனால் அவர்கள் சாபமே பிரேதசாபம் என்று பெயர்.  இறப்புக்கு பிறகு திதிக்கடமைகள் செய்யா விட்டால் ஆத்மா மேலுலகம் செல்லாமல் பிரேத உடலோடு அலைந்து கொண்டிருக்குமாம். அவ்வாறு வேதனைக்கு உள்ளாகும் ஆத்மாக்கள் தரும் சாபமே பிரேத சாபம் என்று பெயர்.
  
மேலும் சாதுக்கள், ஞானிகளை அவமதித்தல், துன்புறுத்துதல், கோவில் சொத்துக்களை கொள்ளையடித்தல், அபகரித்தல், சிவனடியார்களை நிந்தித்தல் போன்ற காரணங்களாலும் புத்திரதோஷம் ஏற்படுவதுண்டு.

தோஷங்கள் என்பது என்ன?

குழந்தை பிறக்காமல் இருப்பது மட்டுமே புத்திர தோஷம் அல்ல.  இந்த புத்திர தோஷங்கள் பல வகைப்படும்.   

1. குழந்தை பிறந்து ஒன்றிரண்டு வயதில் இறந்து போவதும் புத்திரதோஷம்தான்.

2. மூளை வளர்ச்சி குறைவாக குழந்தைகள் பிறப்பது புத்திரதோஷம்தான்.

3. பருவ வயதை எட்டிய ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ திடீரென அகால மரணம் அடைவதும் புத்திரதோஷம்தான்.

4. காலம் கடந்து திருமணம் நடந்து, அந்த திருமணமும் நிலைக்காமல் தன் பெற்றோர் வீட்டிற்கு பெண் குழந்தைகள் திரும்பி வருவதும் புத்திரதோஷம்தான்.

5. குழந்தைகள் பிறந்தும் அந்த குழந்தைகளால் எந்த பயனும் இல்லாமல் போவதும், எதிரியாக மாறுவதும் புத்திரதோஷம்தான்.

இத்தோஷங்களை போக்க வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபாடு செய்து வருதல் சிறந்தப் பலனைத்தரும். குலதெய்வ பூஜை செய்வது, பித்ரு காரியங்களை தவறாமல் செய்வதும் சிறப்பு.  எந்த கிரகத்தால் புத்திரதோஷம் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, அந்த கிரகத்தின் அதி தேவதைக்கு பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழிபாடு செய்வது நல்லது. 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...